Saturday, July 15, 2023

891. நட்பு நாடி வந்தவர்

விசாக நாட்டுக்குச் சொந்தமான மாருதத் தீவை அசுவினி நாடு போர் செய்து கைப்பற்றிய பிறகு, இரு நாடுகளுக்குமிடையே பகை நிலவி வந்தது.

இரண்டு தலைமுறைகளாக இருந்து வந்த பகையை முடிவுக்குக் கொண்டு வந்து, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் விசாக நாட்டு மன்னர் வைகுந்தர் அசுவினி நாட்டுக்கு வந்திருந்தார்.

"வாருங்கள் வைகுந்தரே! பல ஆண்டுகளாக நமக்கிடையே இருந்த பகையை மறந்து என்னுடன் நட்பு பாராட்டி இங்கே வந்திருக்கும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் அசுவினி நாட்டு மன்னர் மகுடபதி.

இரண்டு நாட்கள் அசுவினி நாட்டில் தங்கிய பின் தன் நாட்டுக்குத் திரும்புகையில் மகுடபதியைத் தங்கள் நாட்டுக்கு வரும்படி அழைத்தார் வைகுந்தர்.

"கண்டிப்பாக வருகிறேன், வைகுந்தரே!" என்ற மகுடபதி, "உங்கள் தந்தை, பாட்டனார் இருவருமே மாருதத் தீவை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்ததால் நம் இரு நாடுகளுக்கு இடையே விரோதம் நீடித்தது. ஆனால் தங்களுக்கு அந்த நோக்கம் இல்லாததால் நம்மிடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது!" என்றார் மகுடபதி.

வைகுந்தர் மௌனமாக இருந்தார்.

"தாங்கள் அறிவாற்றல் மிகுந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் உங்கள் முன்னோர்களைப் போல் அல்லாமல் தாங்கள் இயலாத முயற்சிகளில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள். உங்கள் விவேகத்தைப் பாராட்டுகிறேன்!" என்றார் மகுடபதி தொடர்ந்து.

வைகுந்தர் பதில் பேசாமல் கிளம்பினார்.

"அரசே! மாருத்தீவை விசாக நாட்டுப் படை கைப்பற்றி விட்டது. அத்துடன் மட்டுமல்ல. போரில் தோற்ற நம் வீரர்களை அவர்கள் நம் எல்லை தாண்டியும் துரத்தி வந்து நம் எல்லையில் உள்ள மலைப் பகுதியையும் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டனர்" என்றார் அமைச்சர்.

"இது எப்படி நடந்தது?" என்றார் மகுடபதி அதிர்ச்சியுடனும், கோபத்துடனும்.

"அரசே! விசாக நாட்டு மன்னர் வைகுந்தரை அறிவாற்றல் மிகுந்தவர் என்று தாங்கள் குறிப்பிட்டீர்கள். அவர் போர் ஆற்றலும் மிகுந்தவர் என்றும் கேள்விப்படுகிறேன். நம்மிடம் நட்பு நாடி அவர் வந்தபோது, மாருதத் தீவைத் தன்னால் மீட்க முடியாது என்று அவர் உணர்ந்திருப்பதாகத் தாங்கள் கூறியது அவரைக் காயப்படுத்தி இருக்க வேண்டும். அதனால்தான் மாருதத் தீவை மீட்பதை ஒரு சவாலாக ஏற்றுத் தன்னால் முடியும் என்று காட்டி விட்டார் அவர். நாம் மாருதத் தீவை இழந்ததுடன், நம் எல்லைப் பகுதியையும் இழந்து விட்டோம். மலைப் பகுதியான அதை நாம் மீட்பதும் கடினம்!" என்றார் அமைச்சர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

பொருள்: 
ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...