Monday, June 5, 2023

708. இரண்டாவது விசாரணை

காவல்துறை துணை ஆய்வாளரின் விசாரணைக்குப் பிறகு சரவணன் வேறொரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

தான் குற்றம் செய்யவில்லை என்று கூறியதைத் துணை ஆய்வாளர் ஏற்றுக் கொண்டாரா என்று சரவணனுக்குத் தெரியவில்லை. 

தன்னை அடித்துத் துன்புறுத்துவார்களோ என்ற அச்சம் சரவணனுக்கு இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. துணை ஆய்வாளர் துருவித் துருவிக் கேட்டார், பொய் சொன்னால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார். அவர் மேசை மீது லத்தி இருந்தது. ஆனால் அதை அவர் பயன்படுத்தவில்லை.

சரவணன் அழைத்துச் செல்லப்பட்ட அறையில் ஒருவர் சீருடை இல்லாமல், சாதாரண உடையில் அமர்ந்திருந்தார். தனக்கு எதிரில் இருந்த நாற்காலியில் சரவணனை உட்காரச் சொல்லி விட்டு அவன் முகத்தைச் சற்று நேரம் பார்த்தார் அவர். பிறகு தன் மேசை மீதிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அவ்வப்போது படிப்பதை நிறுத்தி விட்டு சரவணன் முகத்தை மீண்டும் சில விநாடிகள் பார்த்தார்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு, சரவணனைக் காவல் நிலையத்திலிருந்த சிறைக்குள் அழைத்துச் சென்றனர். அவனை அங்கே வைத்துப் பூட்டினர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு சிறைக் கதவு திறக்கப்பட்டது. துணை ஆய்வாளர் உள்ளே நுழைந்தார். அவர் கையில் லத்தி இருந்தது. சரவணன் அச்சத்துடன் அவரைப் பார்த்தபோதே அவன் மீது லத்தி பாய்ந்தது.

சில நிமிடங்களுக்குப் பிறகு சரவணன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

"ஏன் சார், நாம செய்யறது சட்டப்படி சரியா?" என்றார் கான்ஸ்டபிள் சேகர், துணை ஆய்வாளரிடம்..

"முன்னே எல்லாம் சந்தேகப்பட்டவங்க எல்லாரையும் அடிச்சு விசாரிப்போம். இப்ப நாம சாதாரணமா விசாரிச்சுட்டு குற்றத்தை ஒப்புக்காதவங்களை சுந்தர்கிட்ட அனுப்பறோம். அவர் கொஞ்ச நேரம் அவங்க முகத்தைப் பாத்துட்டு அவங்க மனசில என்ன ஓடுது, அவங்க உண்மை சொல்றாங்களா, பொய் சொல்றாங்களான்னு சொல்லிடறாரு.

"உண்மை சொல்றாருன்னு அவர் சொன்னவங்களை உடனே வெளியே விட்டுடறதில்ல. அவங்களைக் கொஞ்ச நாள் வச்சிருந்து அடிக்காம துருவித் துருவி விசாரிக்கறோம். அநேகமா அவங்க குற்றம் செய்யாதவங்களாத்தான் இருக்காங்க. பல சமயங்கள்ள உண்மையான குற்றவாளிங்க கிடைச்சுடறாங்க. அப்படிக் கிடைக்காட்டாலும் அவங்க குற்றம் செய்யலேன்னு தீர்மானிச்சு வெளியே விட்டுடறோம்!

"பொய் சொல்றாங்கன்னுகுந்தர் கண்டுபிடிச்சுச் சொன்னவங்களை மட்டும் அடிச்சு விசாரிக்கறோம். அவங்க அநேகமா உண்மையை ஒத்துக்கறாங்க. இந்த முறையினால அப்பாவிங்களை அடிக்காம தவிர்க்கறோம் இல்லையா?"

"ஆனாலும் இது சட்டப்படி சரி இல்லையே சார்?"

"சுந்தர் யாரு? போலீஸ்ல பணி செஞ்சு ஓய்வு பெற்றவர்தானே? அவரோட நீண்ட அனுபவத்தினால, ஒரு ஆள் முகத்தைப் பாத்ததுமே அவன் மனசில என்ன நினைக்கிறாங்கறதை அவரால ஊகிக்க முடியுது. அப்பப்ப அவரை இங்கே வரச் சொல்லி அவர் அனுபவத்தை நாம பயன்படுத்திக்கறோம். அவ்வளவுதானே?" என்றார் துணை ஆய்வாளர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்

குறள் 708:
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்

பொருள்:
அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.

குறள் 709 (விரைவில்)
      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...