கரடுமுரடான தரையில் எங்கே பள்ளம் இருக்குமோ என்று பயந்து கொண்டே, கீழே பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்த சுற்றுப் பயணிகள், சற்றே நிமிர்ந்து பார்த்தனர்.
'எல்லாமே பாழடைஞ்சு கிடக்கு. அறை எது, கூடம் எதுன்னு அடையாளம் காண்றதே கஷ்டம். இதில இது என்ன அறைன்னு வேற கண்டுபிடிச்சுச் சொல்லணுமா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கமலநாதன், அருகில் நடந்து வந்து கொண்டிருந்த தன் மனைவி சத்யபாமாவைப் பார்த்து, "உனக்குத் தெரியுதா, பாமா, இது என்ன அறைன்னு?" என்றார் சிரித்துக் கொண்டே.
சத்யபாமா பதில் கூறவில்லை.
"குளியல் அறையா? மேலே ஒரு ஓட்டை இருக்கே, அதிலேந்து கொட்டற மழைத் தண்ணிதான் அரண்மனைவாசிகளுக்கு ஷவர் குளியல்னு சொல்லப் போறீங்களா?" என்றார் ஒரு பயணி, விளையாட்டாக.
"கிட்டத்தட்ட சரியா சொல்லிட்டீங்க! இது குளியல் அறை இல்லை, ஒப்பனை அறை. குளியலுக்குப் பிறகு ஒப்பனைதானே?" என்றார் வழிகாட்டி, சிரித்தபடி.
"ஒப்பனை அறைன்னு எப்படிச் சொல்றீங்க?" என்றார் ஒரு பயணி.
"அப்படிக் கேளுங்க. இந்தக் கல்லைப் பாத்தீங்களா?"
"உடைஞ்சிருக்கே! ஆனா பளபளன்னு இருக்கு" என்றபடியே அருகில் சென்ற ஒருவர், "அட! முகம் தெரியுதே! இது என்ன கல்லா, கண்ணாடியா?" என்றார், வியப்புடன்.
"கல்தான். கண்ணாடி மாதிரி பிரதிபலிக்கிற அருமையான பளிங்குக்கல். ஆளுயரக் கண்ணாடி மாதிரி அமைச்சிருக்காங்க . இதுக்கு முன்னால நின்னு ஒப்பனை செஞ்சுக்கலாம். இப்ப நிறைய கல்லு உடைஞ்சு போய், ஒண்ணு ரெண்டுதான் மீதி இருக்கு. அதனால, பக்கத்தில போய் நின்னு பாத்தாத்தான் தெரியும்!" என்றார் வழிகாட்டி, பெருமிதத்துடன்.
சுற்றுப்பயணிகள் பலர் அந்தப் பளிங்குக் கல்லின் அருகில் சென்று, அதில் தங்கள் முகம் தெரிகிறதா என்று பார்த்து விட்டு வந்தனர்.
அருகில் சென்று பார்த்து விட்டு வந்த கமலநாதன், "பாமா, வா! இங்கே வந்து பாரு!" என்று மனைவியை அழைத்தபடியே திரும்பினார்.
ஆனால், சத்யபாமா அங்கே இல்லை. விறுவிறுவென்று நடந்து முன்னே போய்க் கொண்டிருந்தாள். கமலநாதன் குழப்பத்துடன், மனைவியுடன் சேர்ந்து கொள்ளும் நோக்கில் வேகமாக நடந்தார்.
எல்லோருக்கும் பின்னால் வந்து கொண்டிருந்த வழிகாட்டி, தன் அருகில் வந்து கொண்டிருந்த உதவியாளனிடம், "அந்தம்மா ஏதோ கோவமா இருக்காங்க போலருக்கு. அவங்க முகத்தைப் பாத்தாலே தெரிஞ்சது. ஆனா, அவர் அதை கவனிக்காம ஏதோ பேசிக்கிட்டிருந்தாரு. அந்த அம்மாவுக்குக் கோபம் இன்னும் அதிகமாகி, வேகமா நடந்து முன்னே போயிட்டாங்க! இவர் பாவம், ஒண்ணும் புரியாம பின்னால ஓடறாரு!" என்று தணிவான குரலில் சொல்லிச் சிரித்தார்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்
குறள் 706:
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
பொருள்:
தனக்கு அருகில் உள்ள பொருளின் பிம்பத்தைக் காட்டும் பளிங்கைப் போல், மனதில் மிகுந்திருக்கும் உணர்வை முகம் வெளிக்காட்டி விடும்
No comments:
Post a Comment