Tuesday, May 30, 2023

705. திலகனின் குறுக்கீடு

"நீங்க எங்களுக்கு ஆர்டர் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார். எங்களோடது ரொம்ப சின்ன நிறுவனம். உங்களை மாதிரி பெரிய நிறுவனத்துக்கிட்டேயிருந்து எங்களுக்கு இந்த ஆர்டர் கிடைச்சதை நாங்க ரொம்பப் பெருமையா நினைக்கிறோம் சார்!" என்றான் பவித்ரன். 

அவன் அருகில் அமர்ந்திருந்த அவனுடைய பார்ட்னர் திலகன் ஆமோதிப்பது போல் தலையாட்டினான்.

"பெரிய நிறுவனம் என்ன, சின்ன நிறுவனம் என்ன? எங்களுக்கு வேண்டிய பொருளை நீங்க தயாரிக்கிறீங்க. அதை நாங்க வாங்கிக்கறோம். அவ்வளவுதான்!" என்றார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரந்தாமன்.

"சரி சார். நாங்க கிளம்பறோம்!" என்று பவித்ரன் எழுந்தபோது, "என்ன அவசரம்? இங்கே எங்க தோட்டத்தில தென்னை மரங்கள் வச்சிருக்கோம். இளநீர் சாப்பிட்டுட்டுப் போங்க. வெயிலுக்கு இதமாக இருக்கும்!" என்றார் பரந்தாமன்.

பிறகு பியூனை அழைத்து இளநீர் கொண்டு வரச் சொன்னார்.

இளநீர் வரும் வரை தொழில் நிலவரங்களைப் பற்றிப் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். திலகன் பொதுவாக அதிகம் பேசாத இயல்பு கொண்டவன்.  எனவே உரையாடல் பெரும்பாலும் பவித்ரனுக்கும் பரந்தாமனுக்கும் இடையில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அரசாங்கத்தை விமரிசித்து பவித்ரன் சில கருத்துக்களைச் சொன்னான். 

"இந்த அரசாங்கம் ரொம்ப மோசமா இருக்கு. தொழில் செய்யறவங்களோட பிரச்னைகளைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம நமக்கு எப்படி எல்லாம் தொந்தரவு கொடுக்கலாம்னு ரூம் போட்டு யோசிச்சு நம்மளை டார்ச்சர் பண்றாங்க!" என்றான் பவித்ரன்.

இவ்வளவு நேரம் மௌனமாக இருந்த திலகன் சட்டென்று குறுக்கிட்டு, "நோ, நோ! அப்படிச் சொல்ல முடியாது. சில பிரச்னைகள் இருக்குதான். ஆனா இந்த அரசாங்கத்தில நமக்கு நிறைய நன்மைகள் செஞ்சிருக்காங்க, இல்லையா சார்?" என்றான் பரந்தாமனைப் பார்த்துச் சிரித்தபடி.

பரந்தாமன் புன்னகை செய்தபடியே தலையாட்டினார்.

பரந்தாமன் அறையிலிருந்து வெளியில் வந்ததும், "திலக்! நீதானேடா இந்த அரசாங்கத்தை எப்பவும் குறை சொல்லிக்கிட்டிருப்ப? இப்ப நான் அரசாங்கத்தைக் குறை சொன்னதும் அவசரமா என்னை மறுத்துப் பேசி அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கற! என் காலை வேற அழுத்தின. எதுக்குன்னு புரியல. அதனால நான் அதுக்கு மேல பேசாம இருந்துட்டேன். என்ன விஷயம்?" என்றான் பவித்ரன்.

"நீ அரசாங்கத்தைக் குறை சொல்லிப் பேச ஆரம்பச்சதும் பரந்தாமனோட முகம் கொஞ்சம் மாறிடுச்சு. நீ சொன்னது அவருக்குப் பிடிக்கலேன்னு புரிஞ்சுக்கிட்டேன். பல பேருக்கு ஒரு அரசியல் சார்பு இருக்கும். அவரு ஆளும் கட்சியை ஆதரிக்கறவரா இருக்கலாம். அதனால நீ அரசாங்கத்தைக் குறை சொன்னது அவருக்குப் பிடிக்கலியோ என்னவோ! இப்பதான் அவர் நமக்கு ஆர்டர் கொடுத்து நமக்குள்ள ஒரு நல்ல உறவு உண்டாயிருக்கு. அதைக் கெடுத்துடக் கூடாதுன்னுதான் அரசாங்கத்தை ஆதரிச்சுப் பேசினேன். அதில அவருக்கு சந்தோஷம்தாங்கறதை அவர் வெளிக்காட்டினாரே!" என்றான் திலகன்.

"நீ கவனிச்சதை நான் கவனிக்காம விட்டுட்டேனே! கண் இருந்தும் குருடனா இருந்திருக்கேன். நல்லவேளை அதிகம் பேசாத நீ சரியான சமயத்தில பேசி  நிலைமையை சரி செஞ்சுட்டே!" என்றான் பவித்ரன் திலகனின் கையைப் பற்றியபடி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்

குறள் 705:
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.

பொருள்:
ஒருவரது முகக்குறிப்பைக் கண்ட பின்பும் அவருடைய மனக்கருத்தை அறிய முடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன பயன்?.

குறள் 706 (விரைவில்)
      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...