Saturday, May 20, 2023

778. அரசரின் கோபத்துக்கு ஆளானவன்!

பிரதீபன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த ஒருவர் அவனை நிறுத்தி, "பிதீபா!" என்றார்.

"வணக்கம் நீலகண்டரே! எப்படி இருக்கிறீர்கள்?" என்றான் பிரதீபன்.

"நலம்தான். உன்னைத்தான் சிறிது காலமாகத் தலைநகருக்குப் பக்கத்திலேயே காண முடியவில்லை."

"காரணம் உங்களுக்குத் தெரியுமே!" என்றான் பிரதீபன் சிரித்தபடி

"ஆமாம். எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. சிறிது காலத்தில் எல்லாம் சரியாகி விடும்!" என்ற நீலகண்டர், சட்டென்று அருகில் நடந்து சென்ற சிலரைப் பார்த்து, "இவர் யார் தெரியுமா? கருங்குழிப் போரில் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் எதிரிப் படைகளுடன் வீரமாகப் போரிட்டுப் பல சாகசங்கள் புரிந்த பிரதீபர் இவர்தான்!" என்றார்.

"பிரதீபரா? அந்த வீரரரை நேரில் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு பேறு!" என்றார் ஒருவர்.

"பிரதீபரே! உங்கள் வீரச் செயல் பற்றி நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். உங்களைச் சந்திப்பேன் என்று தெரிந்திருந்தால் அதை எடுத்து வந்திருப்பேன். உங்கள் முன் அதைப் படித்துக் காட்டி இருக்கலாம்!" என்றார் இன்னொருவர்.

மற்றொருவர் கைதட்டி, "எல்லோரும் வாருங்கள். போர்க்களத்தில் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் எதிரிகளின் படைகளுக்குள் புகுந்து தாக்கி வீரச் செயல்கள் புரிந்த பிரதீபன் வந்திருக்கிறார். அவரைக் காண அனைவரும் வாருங்கள்!" என்று தெருவில் சென்று கொண்டிருந்த அனைவரையும் கூவி அழைத்தார்.

சில நிமிடங்களுக்குள் அங்கே பலர் கூடி விட்டனர்.

நீலகண்டர் பிரதீபனை அருகிலிருந்த ஒரு வீட்டின் உயரமான திண்ணையில் எல்லோரும் பார்க்கும் வகையில் நிற்க வைத்தார். 

அனைவரும் உற்சாகத்துடன் பல்வேறு கோஷங்களை எழுப்பி பிரதீபனைப் போற்றினர்.

பிரதீபன் நீலகண்டரை சைகை செய்து அருகில் அழைத்தான்.

"என்ன நீலகண்டரே இது? அரசர் என் மீது கோபமாக இருக்கிறார். அதனால் நான் தலைநகரத்துக்கு வருவதைக் கூடத் தவிர்த்து வருகிறேன். இங்கே இருக்கும் என் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று இங்கே வந்து விட்டுத் திரும்பப் போய்க் கொண்டிருக்கிறேன். என்னை எல்லோருக்கும் அடையாளம் காட்டி விட்டீர்களே! அவர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டு என்மீது தங்கள் அபிமானத்தைக் காட்டுகிறார்கள். இது அரசருக்குத் தெரிந்தால் அவர் கோபம் இன்னும் அதிகமாக அல்லவா ஆகும்?" என்றான் கவலையுடன். 

"அரசருக்கு உன் மேல் கோபம் இருந்தால் என்ன? அதனால் உன் வீரச் செயல் மங்கி விடுமா என்ன? உன் வீரத்தை மக்கள் எவ்வாறு போற்றுகிறார்கள் என்பதை அரசர் அறிந்து கொண்டால், அவருக்கு உன் மீது இருக்கும் கோபம் நீங்கி விடும் - அந்தக் கோபம் எந்தக் காரணத்தினால் ஏற்பட்டிருந்தாலும்!" என்றார் நீலகண்டர் உற்சாகத்துடன்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 778:
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.

பொருள்: 
போர் வந்தால் உயிர் பற்றி அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவார்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...