மக்களின் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றபடி அரண்மனைக்குள் நுழைந்த இளவரசன், தன் தந்தையை வணங்கி வாழ்த்துப் பெற்றான்.
ஆயினும், மன்னரான அவன் தந்தை அவனை வாழ்த்தியதில் அவ்வளவு உற்சாகம் இல்லை.
போரில் தான் வெற்றி பெற்றதைத் தன் தந்தை பெரிதும் பாராட்டுவார் என்று நினைத்த பரகாலனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, தன் தந்தையுடன் தனியாகப் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தபோது, பரகாலன் அவரிடம் கேட்டான்.
"தந்தையே! இந்தப் போரில் நான் வெற்றி பெற்றதில் தங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா?"
"மகிழ்ச்சி இல்லாமல் எப்படி இருக்கும்?"
"ஆனால், நான் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்து தங்களை வணங்கியபோது, தங்களிடம் அதிக உற்சாகம் காணப்படவில்லையே!" என்றான் பரகாலன்.
"பரகாலா! போரில் வெற்றி பெறுவது நல்ல விஷயம்தான். ஆனால், நீ போரில் வென்றது ஒரு சிறிய நாட்டை. நம் பெரும் படையைப் பார்த்ததுமே, அவர்கள் சரணடைந்து விட்டனர். அதனால்தான், நான் இந்த வெற்றியைப் பெரிதாக நினைக்கவில்லை!" என்றார் அரசர்.
பரகாலன் மௌனமாக இருந்தான்.
"பரகாலா! நாம் நமக்குக் கிடைத்த பாராட்டுக்களை மறந்து விடுகிறோம். பாராட்டுக் கிடைக்காத சந்தர்ப்பங்களை மட்டும் குறைகளாக எப்போதும் மனதில் வைத்துக் கொண்டிருப்போம். இது மனித இயல்பு" என்றார் மன்னர், சிரித்தபடியே.
"தந்தையே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"
"இதற்கு முன் நீ ஒரு போருக்குத் தலைமை தாங்கினாய். அந்தப் போரில் நாம் வெற்றி பெறவில்லை. ஆயினும், நீ போர்க்களத்திலிருந்து திரும்பி வந்ததும், உன்னை வெகுவாகப் பாராட்டினேன். அரசவையில் பலர் முன்னிலையில் உன்னைப் புகழ்ந்து பரிசு கூட அளித்தேன்!"
"நான் அதை மறக்கவில்லை, தந்தையே! அது நான் முதல் முறையாகப் பங்கேற்ற போர். அதனால், என்னை ஊக்குவிப்பதற்காக என்னைப் பாராட்டினீர்கள் என்று நினைத்தேன். அரசவையில் நீங்கள் என்னைப் பாராட்டியது எனக்குச் சங்கடமாகக் கூட இருந்தது!"
"இல்லை, பரகாலா! அன்று நான் உன்னைப் பாராட்டியது என் மனமாரத்தான். நீ அந்தப் போரில் தோற்றது ஒரு பொருட்டே இல்லை. ஏனெனில், நீ போர் செய்தது ஒரு பெரிய நாட்டின் பெரும் படையுடன். அத்தகைய பெரும் படையை நம்மால் வெற்றி கொள்ள முடியுமா என்ற சிந்தனை கூட இல்லாமல், நீ அந்தப் போரில் உன் வீரத்தையும், துணிவையும் காட்டிப் போர் செய்தாய். அனால்தான் உன்னை நான் வெகுவாகப் பாராட்டினேன், உன் முதல் போர் என்பதால் அல்ல. இன்று ஒரு சிறிய நாட்டின் சிறு படையுடன் போர் செய்து நீ பெற்றிருக்கும் வெற்றியை விட, அன்று ஒரு பெரிய நாட்டின் பெரும் படையுடன் போரிட்டு நீ அடைந்த தோல்வியையே நான் பெருமைக்குரியதாகக் கருதுவேன்!" என்றார் அரசர்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு
குறள் 772:
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
No comments:
Post a Comment