"உங்களைப் போன்ற யாத்திரிகர்களிடமிருந்து பல தகவல்களை அறிந்து கொள்வதில் எனக்கு மிகவும் ஆர்வம் உண்டு. பல்வேறு நாடுகளிலும் நீங்கள் கண்டு வியந்தவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!" என்றார் சிம்மவர்மர்.
யாத்திரிகர் தான் சென்று வந்த சில இடங்களைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, "அரசே! இப்போது நான் சில நடுகற்களைப் பற்றிக் கூற விரும்புகிறேன்!" என்றார்.
"நடுகல் என்பது போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்காக நடப்படும் ஒரு நினைவுச் சின்னம். அத்தகைய இடங்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?" என்றார் சிம்மவர்மர், புருவத்தை உயர்த்தி.
"நான் சொல்லப் போவதன் முக்கியத்துவம் குறித்து, நான் சொல்லி முடித்ததும் தாங்கள் புரிந்து கொள்வீர்கள்."
"சரி, சொல்லுங்கள்.
"பவளமணி நாட்டில், அந்த நாட்டு அரசன் மணிவர்மனுக்கு நடுகல் அமைத்திருக்கிறார்கள். குந்துமணி நாட்டில், போரில் மரணமடைந்த அந்த நாட்டு மன்னன் விக்கிரமசிங்கனுக்கு நடுகல் அமைத்திருக்கிறார்கள். காரக, நாட்டில் அந்த நாட்டு மன்னன் சீவகனுக்கு நடுகல் அமைத்திருக்கிறார்கள். செந்தூர நாட்டில்..."
"யாத்திரிகரே! சற்று நிறுத்துங்கள். போரில் இறந்து நடுகல் அமைக்கப்பட்டுள்ள மன்னர்களின் பட்டியலை என்னிடம் சொல்வதில் என்ன பயன்?" என்றார் சிம்மவர்மர், சற்று எரிச்சலுடன்.
"இருக்கிறது, மன்னரே! நடுகல்லாய் நிற்கும் இந்த மன்னர்கள் அனைவரும் குவலய நாட்டு மன்னருடன் போர் செய்து போரில் தோல்வியுற்றுத் தங்கள் உயிரையும் இழந்தவர்கள். குவலய நாட்டின் படை அவ்வளவு வலிமை வாய்ந்தது. இந்தப் படையை வெல்லக் கூடிய வேறு படை இல்லை. தாங்கள் குவலய நாட்டின் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதனால்தான், குவலய நாட்டைச் சேர்ந்த யாத்திரிகனான நான் உங்கள் நாட்டில் யாத்திரை செய்து கொண்டிருக்கும்போது இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, உங்கள் நலன் கருதி இந்த உண்மையை உங்களிடம் தெரிவிக்க வந்தேன்!" என்றார் யாத்திரிகர்.
யாத்திரிகரின் கூற்றின் உண்மையை உணர்ந்து தன் திட்டத்தை மாற்றிக் கொள்வதா, அல்லது குவலய நாட்டுப் படையின் சிறப்பைப் பற்றித் தன்னிடமே பேசிய அந்த நாட்டு யாத்திரிகரைத் தண்டிப்பதா என்று தீர்மானிக்க முடியாமல் கோபத்திலும், குழப்பத்திலும் ஆழ்ந்தார் சிம்மவர்மர்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு
குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
No comments:
Post a Comment