Tuesday, May 9, 2023

770. பெரும்படையை எதிர்த்து...

"அமைச்சரே! நம் நாட்டுப் படை சிறியது. வராளி நாட்டுப் படை பெரியது. அவர்களுடன் நம்மால் போரிட்டு வெற்றி பெற முடியுமா?" என்றார் கனக நாட்டு மன்னர் கவலையுடன்.

"அரசே! நம் படை சிறியதாக இருக்கலாம். ஆனால் நம் படைத்தலைவர் மிகுந்த திறமையுள்ளவர். அவர் தலைமையில் நம் படைகள் நிச்சயம் வெற்றி பெறும்!" என்றார் அமைச்சர் படைத்தலைவரைப் பார்த்துச் சிரித்தபடி.

படைத்தலைவர் அமைச்சரைப் பார்த்துப் பணிவுடன் தலைவணங்கினார்.

"சரி. யோசித்து முடிவெடுப்போம். படைத்தலைவரே! நீங்கள் எதற்கும் படைகளைத் தயார் நிலையில் வைத்திருங்கள்!" என்றார் அரசர்.

குறிப்பறிந்து படைத்தலைவர் வெளியேறினார்.

படைத்தலைவர் சென்றதும், "அமைச்சரே! படைத்தலைவர் முன்னிலையிலேயே நீங்கள் அவரைப் புகழ்ந்து பேசியது எனக்குப் பிடிக்கவில்லை. அவருடைய திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஒரு பெரிய படையை முறியடிக்கப் படைத்தலைவர் திறமையானவராக இருந்தால் மட்டும் போதுமா?" என்றார் அரசர்.

"அரசே! படைத்தலைவருக்கு ஊக்கமளிக்கத்தான் உங்கள் முன் அவர் திறமையைப் புகழ்ந்தேன். தாங்கள் கூறுவது சரிதான். நம் படைத்தலைவர் திறமையாக இருப்பது மட்டும் நாம் வெற்றி பெறப் போதுமானதல்ல!"

"பின்னே?" என்றார் அரசர் வியப்புடன்.

"நமக்குச் சாதகமாக இன்னொரு காரணமும் இருக்கிறது!" என்று கூறிய அமைச்சர் அந்தக் காரணத்தை அரசரிடம் விளக்கினார்.

"வாழ்த்துக்கள் படைத்தலைவரே! போரில் நம் படைகளுக்கு வெற்றி தேடித் தந்து விட்டீர்கள். உங்கள் திறமையைப் பற்றி நான் அரசரிடம் கூறியதை உண்மை என்று நிரூபித்து விட்டீர்கள்!" என்று படைத்தலைவரைப் பாராட்டினார் அமைச்சர்.

"தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், என் திறமை பற்றி அரசரிடம் எடுத்துக் கூறியதற்கும் நன்றி அமைச்சரே! என் திறமை பற்றித் தாங்கள் கூறியதை ஏற்று அரசர் போருக்கு ஒப்புக் கொண்டது எனக்கு மலைப்பாக இருக்கிறது!" என்றார் படைத்தலைவர்.

அமைச்சர் எதுவும் சொல்லாமல் சிரித்தார். 

எதிரி நாட்டின் படைக்கு நீண்ட காலமாகவே சரியான தலைவன் இல்லை என்றும், தற்போது தலைவனாக நியமிக்கப்பட்டிருப்பவனுக்குத் திறமையோ, அனுபவமோ இல்லை என்றும் ஒற்றர்கள் மூலம் கிடைத்த செய்தியை அரசரிடம் சொல்லி, நல்ல தலைவன் இல்லாத படை போரில் சிறப்பாகச் செயல்படாது என்பதையும் அரசரிடம் எடுத்துக் கூறியதால்தான் அரசர் போருக்குச் சம்மதித்தார் என்ற தகவலைப் படைத்தலைவரிடம் சொல்லி அவருடைய வெற்றியின் பெருமையை அமைச்சர்  குறைக்க விரும்பவில்லை.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 770:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.

பொருள்: 
சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...