"உண்மைதான், அரசே! ஆனால், நம் படையின் வலிமை பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? நம் படைகள் எண்ணிக்கையில் குறைந்தவை. இப்படி ஒரு சிறிய படையை வைத்துக் கொண்டு போரில் இறங்குவது நமக்குப் பெரும் இழப்புகளைத்தானே ஏற்படுத்தும்? நம் படைவீரர்கள் பலரை நாம் இழப்பதோடு, போரில் தோல்வியைச் சந்தித்தால், அதன் பிறகு எதிரிகள் கூறுவதற்குக் கட்டுப்பட்டுத்தானே நாம் நடக்க வேண்டி இருக்கும்? அதை விட, ஒரு கௌரவமான சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதுதானே நமக்கு நன்மை பயப்பதாக இருக்கும்?" என்றார் அமைச்சர்.
"என்ன படைத்தலைவரே! அமைச்சர் நம் படை சிறியது என்று கூறுகிறார். நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்றார் அரசர், படைத்தலைவரைப் பார்த்து, கோபம் தணியாமல்.
படைத்தலைவர் பதில் சொல்லத் தயங்குவது போல் மௌனமாக இருந்தார்.
"அரசே! இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. படைத்தலைவர் அதை உங்களிடம் சொல்லத் தயங்குகிறார்!" என்றார் அமைச்சர்.
"அது என்ன பிரச்னை?"
"நம் படைவீரர்களுக்கு நாம் மிகக் குறைந்த ஊதியமே வழங்குவதால், அவர்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள். அதனால் ஊட்டமான உணவு உட்கொள்ள முடியாமல், அவர்கள் உடல் வலிமை குறைந்து, அதனாலும் அவர்கள் போர் வலிமை குறைந்திருக்கிறது!" என்றார் அமைச்சர்.
"சரி. உங்கள் யோசனைப்படியே ஒரு சமாதானத் தூதுவரை அனுப்பலாம். சமாதானத் தூதுவரிடம் நாம் என்ன சொல்லி அனுப்ப வேண்டும் என்பதை ஆலோசித்து என்னிடம் கூறுங்கள்!" என்றார் அரசர்.
அரசவையிலிருந்து வெளியே வந்தபோது, "அமைச்சரே! நான் சொல்லத் தயங்கிய உண்மையை நீங்கள் அரசரிடம் சொல்லி விட்டீர்கள். ஆனால், இன்னொரு உண்மையை நீங்கள் அரசரிடம் சொல்ல வில்லையே!" என்றார் படைத்தலைவர்.
"நம் நாட்டு மக்களைப் போலவே, நம் படைவீரர்களும் அரசரின் செயல்பாடுகளால் வெறுப்படைந்திருக்கிறார்கள், அந்த மனநிலையில், அவர்களால் தங்கள் முழு மனத்துடன் போராட முடியாது என்ற உண்மையை அரசரிடம் என்னால் எப்படிச் சொல்ல முடியும்?" என்றார் அமைச்சர், சிரித்தபடி.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி
குறள் 769:
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
No comments:
Post a Comment