"நீ இந்த விவரங்களைச் சேகரித்து வந்திருப்பது நமக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்!" என்றான் படைத்தளபதி வல்லவராயன்.
"காண்டவ நாட்டுப் படை நம் எல்லையில் போருக்குத் தயாராக நிற்கிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலைத் துவக்கலாம்!"
"நம் படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நிற்கின்றனவே!"
"ஆனால் நம் சிறிய காலாட்படையை வைத்துக் கொண்டு அவர்களுடைய பெரிய காலாட்படையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?" என்ற மணிமாறன், சற்றுத் தயங்கி விட்டு, "எனக்குஒரு யோசனை தோன்றுகிறது!" என்றான்.
"சொல்!" என்றான் வல்லவராயன்.
"நாம் குதிரைப்படையை முன்னால் நிறுத்தினால் என்ன? அப்படிச் செய்தால் அவர்கள் காலாட்படைக்கு நம்மால் பெரும் சேதத்தை விளைவிக்க முடியுமே!"
"நாம் குதிரைப்படையை முன்னே நிறுத்தினால் அவர்களும் குதிரைப்படையை முன்னே நிறுத்துவார்கள்! அவர்கள் குதிரைப்படையும் நம்முடையதை விடப் பெரியதுதானே! அதனால் நம் குதிரைப்படையை அவர்களால் எளிதாக முறியடிக்க முடியும்!" என்ற வல்லவராயன், "ஆயினும் உன் யோசனை சரியானதுதான்" என்றான், மணிமாறனை ஊக்குவிப்பது போல்
"சாதிக்க முடியாததைச் சாதித்து விட்டீர்கள் தளபதி! அணியாக நின்ற நம் காலாட்படை வீரர்கள் விரைவாகப் பக்கவாட்டில் நகரப் பயிற்சி அளித்து, அவர்கள் அவ்வாறு நகர்ந்ததும ஏற்பட்ட இடைவெளி வழியே நம் குதிரைப்படையை வர வைத்து காண்டவ நாட்டின் காலாட்படையின் மீது எதிர்பாராத விதத்தில் தாக்குதல் நடத்தி அவர்களைச் சிதறி ஓட வைத்து விட்டீர்கள்!" என்றான் மணிமாறன் உற்சாகத்துடன்.
"நீ சொன்ன யோசனைதான் மணிமாறா! ஆனால் எதிர்ப் படைகள் எதிர்பாராத விதத்தில் இதை விரைவாக முடிக்க வேண்டும். அதற்கான பயிற்சியைக் குறைந்த நேரத்திலேயே நம்மால் அளிக்க முடிந்ததால் நம் படைக்கு வெற்றி கிடைத்தது!" என்றான் வல்லவராயன்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி
குறள் 767:
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
No comments:
Post a Comment