"அரசே! தங்கள் தந்தையார் ஏற்படுத்திய அமைப்புதான் இது. நம் நாடு சிறியது என்பதைக் கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ற வகையில்தான் தங்கள் தந்தை படைகளை அமைத்திருந்தார். யானைப்படை, தேர்ப்படை ஆகியவை குறைந்த அளவிலேயே அமைந்தால் போதும் என்பது அவருடைய கருத்து. நாம் செய்யக் கூடிய போர்களுக்கு ஏற்ற வகையில்தான் நம் படையை வடிவமைத்திருந்தார் தங்கள் தந்தை" என்றார் அமைச்சர்.
"நால்வகைப் படைகளும் சமமான அளவில் இருக்க வேண்டாமா?"
"சமமான அளவில் இல்லை அரசே, சரியான அளவில்!"
இதற்கு என்ன பதில் சொல்வதென்று அரசன் யோசித்துக் கொண்டிருந்தபோது, அமைச்சர், "அரசே! படைகளுக்கு நான்கு தன்மைகள் இருக்க வேண்டும் என்பதில் தங்கள் தந்தை உறுதியாக இருந்தார்!" என்றார் அமைச்சர், தொடர்ந்து.
"அவை என்ன?"
"முதலில் வீரம். இது அடிப்படையான விஷயம். இரண்டாவது, மானம். மானம் என்பது தன்மானம் மற்றும் தாய்நாட்டின் மானம் இரண்டையும் காப்பதில் உறுதி. மூன்றாவது, நேர்மையாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ளுதல். நான்காவது, அரசரின் நம்பிக்கையைப் பெற்றிருத்தல்!"
"வியப்பாக இருக்கிறதே! ஒரு படைக்குத் தேவை வீரமும், வலிமையும்தான் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். சரி, இந்தத் தன்மைகளைப் படையிடம் எப்படி உருவாக்குவது?"
"படைவீரர்களைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்தல், பல நிலைகளிலும் உள்ள படைத்தலைவர்கள் தங்கள் நடத்தை மூலம் படைவீரர்களுக்கு வழிகாட்டுதல் வரை பல வழிமுறைகளைப் பின்பற்றித்தான் இவற்றை உருவாக்க முடியும்" என்ற அமைச்சர், சற்றுத் தயங்கி விட்டு, "ஒரு சிறந்த படைத்தலைவரை நியமிப்பதுதான் இந்தத் தன்மைகளை உருவாக்குவதற்கான அடிப்படை விஷயம்!" என்றார்.
"எனக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு வீரனைப் படைத்தலைவனாக நான் நியமித்ததில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் அறிவேன். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட நான்காவது தன்மையான அரசரின் நம்பிக்கையைப் பெற்றிருத்தல் என்பது முக்கியம் அல்லவா?" என்றான் அரசன், அமைச்சரை மடக்குவது போல்.
"அரசே! அரசரின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர் படைத்தலைவர் ஆவதை விட, படைத்தலைவராக நியமிக்கப்பட்ட ஒரு நபர் தன் செயல்பாடுகள் மூலம் அரசரின் நம்பிக்கையைப் பெறுவது சிறப்பல்லவா? தங்கள் தந்தை குறிப்பிட்ட நம்பிக்கை என்பது மொத்தப் படைக்குமானது, படைத்தலைவருக்கு மட்டுமானதல்ல. ஒரு சிறந்த படைத்தலைவரால்தான் படைவீரர்களுக்கு முதல் மூன்று தன்மைகளையும் புகட்டி, அந்தப் படையை அரசரின் நம்பிக்கைக்கு உரியதாக ஆக்க முடியும். ஒரு நாட்டைப் பாதுகாப்பது அந்த நாட்டின் படை. ஆனால், அந்தப் படையைப் பாதுகாப்பது இந்த நான்கு தன்மைகள்தான். இவைதான் படைகளைப் பாதுகாக்கும் நான்கு அரண்கள் என்று உங்கள் தந்தை கூறுவார். இதை ஒரு தத்துவம் போல் அவர் விளக்குவதைக் கேட்டு நான் புளகாங்கிதம் அடைந்திருக்கிறேன். அவர் விளக்கியதைப் போல் தெளிவாக விளக்கும் திறன் எனக்கு இல்லை!" என்றார் அமைச்சர்.
அரசன் சற்று யோசித்து விட்டு, "சரி. நம் படைகளுக்கு அரண்கள் அமைக்கும் பணியை உடனே தொடங்குவோம். முதல் பணியாக, ஒரு பொருத்தமான படைத்தலைவரை நியமிப்பது பற்றிக் கலந்தாலோசித்து முடிவு செய்வோம்!" என்றான், புன்னகையுடன்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி
குறள் 766:
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
No comments:
Post a Comment