Wednesday, May 3, 2023

764. வெல்ல முடியுமா?

"ஒற்றர்படைத் தலைவரே! நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது நீங்கள் காவிரி நாட்டின் குடிமகனோ என்று தோன்றுகிறது!" என்றார் அரசர் சுக்ரகேது சற்று எரிந்நலுடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! தங்கள் உத்தரவுப்படி நம் ஒற்றர்கள் சிலர் காவிரி நாட்டுக்குப் பயணிகள் போல் சென்று அங்கே சிறிது காலம் தங்கிப் பலரிடமும் பேசித் திரட்டிய விவரங்களைத்தான் தங்களிடம் கூறுகிறேன் !" என்றார் ஒற்றர்படைத் தலைவர்.

"காவிரி நாட்டுப் படை போரில் தோற்றதே இல்லையா என்ன?"

"தோற்றிருக்கிறார்கள் அரசே!"

"பிறகு எப்படி அவர்கள் படைகளும், படைக்கலன்களும் முன்பிருந்த நிலையிலேயே எப்போதும் இருப்பதாகக் கூறுகிறீர்கள்?"

"அரசே! ஒரு போர் முடிந்ததும் அவர்கள் உடனே செய்வது, போரில் அதிகம் காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து, அவர்களை ஓய்வு பெறச் செய்து விட்டு, புதிய வீரர்கள் மற்றும் புதிதாகத் தயாரிக்கப்படும் படைக்கலன்கள் மூலம் படையின் வலுவை முன்பிருந்த அளவுக்கு உயர்த்துவதுதான்!"

"சரி. அவர்களை எந்தவித வஞ்சனையின் மூலமும் பலவீனப்படுத்த முடியாது என்கிறீர்களே, அது எப்படி?"

"அரசே! என் ஒற்றர்கள் கண்டறிந்தபடி முந்தைய போர்களில் அவர்களுக்கு எதிராகப் போரிட்டவர்கள் அவர்கள் படைகளை வஞ்சகமாகப் பிரித்தல், அவர்களை வஞ்சகமான முறையில் அபாயமான இடங்களுக்கு இட்டுச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுத் தோற்றிருக்கிறார்கள். படைவீரர்கள் எத்தகைய வஞ்சனைகள் மற்றும் சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி ஆகியவை பற்றிக் காவிரி நாட்டுப் படைகளுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுகிறதாம்!"

"அது சரி. அவர்கள் படைகள் தொன்று தொட்டு வரும் வீரத்துடன் விளங்குவதாகச் சொல்கிறீர்களே, அது எப்படி?" என்றார் அரசர்.

"அரசே! தக்கோலத்தில் நடந்த போரில் யானை மீது அமர்ந்து போரிட்டு வீர மரணம் எய்திய ராஜாதித்த சோழரை 'ஆனை மேல் துஞ்சிய தேவர்' என்று சோழர்கள் போற்றி வருவதை நாம் அறிவோம். அது போல் கடந்த காலத்தில் போர்களில் தீரச் செயல்கள் செய்த காவிரி நாட்டு வீரர்களின் வரலாறுகள் அங்கே பரம்பரை பரம்பரையாய் எடுத்துச் செல்லப்பட்டு வீரர்களுக்கு போதிக்கப்படுகின்றன. இந்த வரலாறுகள் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தையும், சக்தியையும் அளிக்கின்றன."

"என்ன அமைச்சரே! ஒற்றர்படைத் தலைவர் கூறுவதைப் பார்த்தால் நம்மால் எக்காலத்திலும் காவிரி நாட்டைப் போரில் வெல்ல முடியாது போலிருக்கிறதே!" என்றார் அரசர் அமைச்சரைப் பார்த்து.

"அரசே! ஒற்றர்படைத் தலைவர் கண்டறிந்து சொன்ன விவரங்களின் அடிப்படையில் நம் படைகளை வலுப்படுத்தும் முயற்சியில் நாம் ஈடுபடுவோம். சில ஆண்டுகளில் படைகளை வலுப்படுத்திய பிறகு, நம் படைகளால் எந்த நாட்டுப் படையையும் போரில் வெல்ல முடியும்!" என்றார் அமைச்சர், காவிரி நாட்டைத் தங்களால் வெல்ல முடியுமா என்ற கேள்விக்கான விடையைத் தவிர்த்து!

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 764:
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

பொருள்: 
(போர் முனையில்) அழிவு இல்லாததாய், பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த வீரம் உள்ளதாய் இருப்பதே (சிறப்பான( படையாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...