Monday, May 1, 2023

763. புதிய தளபதி

"படைத்தலைவரே! மேரு நாடு நமக்கு எப்போதுமே எதிரியாக இருந்திருக்கிறது. அவர்களுடைய படைபலம் மிகவும் பெரியது. அவர்களுடன் போரிடுவதைத் தவிர்த்து சில சமரசங்கள் செய்து கொண்டு அவர்களுடன் சமாதானமாக இருந்து வருகிறோம். 'அவர்களை எதிர்த்துப் போரிட்டால் நமக்குப் பெரும் தோல்வி ஏற்படும். அத்துடன் நம் படை வீரர்கள் பலரும் கொல்லப்படுவார்கள்' என்றுதான் உங்களுக்கு முன் படைத்தலைவர்களாக இருந்தவர்கள் கூறி வந்திருக்கிறீர்கள். இப்போதுதான் படைத்தலைவராகப் பொறுப்பேற்ற நீங்கள் மேரு நாட்டை நாம் போரில் வெல்லலாம் என்று கூறுவது விந்தையாக இருக்கிறது!" என்றார் குவளை நாட்டின்அரசர்.

"அரசே! பல வருடங்கள் ஒரு சாதாரணப் படை வீரனாக இருந்த நான் இன்று தங்கள் கருணையால் படைத்தலைவனாக ஆக்கப்பட்டிருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நம் படை வீரர்களுடன் நெருங்கிப் பழகியதில் அவர்களுடைய திறமை, வீரம், போர் செய்யும் ஆற்றல் ஆகியவற்றை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு தளபதி போரில் அவர்களை வழிநடத்தினால் அவர்களால் பல அற்புதங்களைச் செய்ய முடியும். எனக்கு முன்பிருந்த படைத்தலைவர்களிடம் மேரு நாட்டின் பெரும்படையை வெல்லும் திறமை நம்மிடம் இருக்கிறது என்று கூறி இருக்கிறேன். ஆனால் அவர்கள் என் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு இரண்டு மாதம் அவகாசம் கொடுங்கள். நம் வீரர்களைப் போருக்குத் தயார்ப்படுத்துகிறேன். அதற்குப் பிறகு மேரு நாட்டின் மீது நாம் போர் தொடுத்தால் வெற்றி நிச்சயம்!" என்றார் படைத்தலைவர் வாயுமைந்தன்.

ரண்டு மாதங்களுக்குப் பிறகு குவளை நாடு மேரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்றது. போர் தொடங்கிய இரண்டே நாட்களில் மேரு நாட்டின் பெரும்படை சிதறி ஓடியது. மீதமிருந்த படைவீரர்கள் சரணடைந்தனர். மேரு நாட்டு மன்னரைச் சிறைபிடித்துத் தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்தார் வாயுமைந்தன்.

"வாயுமைந்தரே! எப்படி இதைச் சாதித்தீர்கள்? நீங்கள் கூறியதால் நான் போருக்குச் சம்மதித்தேனே தவிர, எனக்கு வெற்றி பற்றி அவ்வளவு நம்பிக்கை இல்லை. பாராட்டுக்கள்!" என்றார் அரசர்.

"அரசே! நான் முன்பே கூறியபடி நம் படைவீரர்கள் வீரமும், தீரமும் நிரம்பப் பெற்றவர்கள். இத்தகைய வீரர்கள் நம்மிடம் இருக்கும்போது நாம் வெற்றி பெற்றதில் வியப்பில்லை!" என்றார் வாயுமைந்தர்.

அவையிலிருந்த அமைச்சர் சிரித்தபடி, "அரசே! படைத்தலைவர் அடக்கம் காரணமாகத் தன்னுடைய பங்கு பற்றிப் பேசாமல் இருக்கிறார். போர்க்களத்தில் நம் படைகளை வாயுமைந்தர் வழிநடத்திய விதம்தான் வெற்றிக்குக் காரணம் என்பதைப் போரில் கலந்து கொண்ட பல வீரர்களுடன் பேசி நான் அறிந்து கொண்டேன். வாயுமைந்தர் வீரமுழக்கமிட்டதைக் கேட்டு பாம்பின் சீறலைக் கண்டு எலிகள் அஞ்சி ஓடுவது போல் மேரு நாட்டின் பெரும்படை சிதறி ஓடிய அதிசயம் பற்றி எல்லா வீரர்களுமே வியந்து பேசுகிறார்கள்!" என்றார் படைத்தலைவரைப் பெருமையுடன் பார்த்தபடி.

"ஒரு வலுவான தளபதியால் ஒரு சிறிய படையையும் பெரிய படையை எதிர்த்து வெற்றி கொள்ளச் செய்ய முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களுக்கு இந்த நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும்!" என்ற அரசர் தன் அரியணையிலிருந்து இறங்கி வந்து வாயுமைந்தரைத் தழுவிக் கொண்டார்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 763:
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

பொருள்: 
பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...