Saturday, March 18, 2023

743. புலவர் சொன்ன செய்தி

"வாருங்கள் புலவரே! செண்பக நாட்டுச் சுற்றுப் பயணம் எப்படி இருந்தது?"

"சிறப்பாக இருந்தது அரசே! செண்பக நாட்டு மக்களின் விருந்தோம்பல் அற்புதமாக இருந்தது."

"செண்பக நாட்டு மக்களின் விருந்தோம்பலைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக உங்களை நான் அங்கே அனுப்பி வைக்கவில்லை என்று நினைக்கிறேன்!"

"மன்னிக்க வேண்டும் அரசே! செண்பக நாட்டைத் தாக்குவதற்கு முன்னேற்பாடாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை ஆய்வு செய்யத்தான் ஒரு சுற்றுப் பயணி போல் அங்கே சென்று வரும்படி நீங்கள் என்னை அனுப்பினீர்கள் என்பதை நான் மறக்கவில்லை."

"அப்படியானால் அதைப் பற்றிப் பேசுங்கள்!"

"மன்னிக்க வேண்டும் அரசே! நான் சொல்லப் போவது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது. அதனால்தான் பீடிகையாக அந்நாட்டு மக்களின் விருந்தோம்பலைப் பற்றி ஆரம்பித்தேன்!"

"சீதையைத் தேடிச் சென்ற அனுமன் 'கண்டேன் சீதையை' என்று ரத்தினச் சுருக்கமாக  ராமனுக்குச் செய்தி சொன்னது போல், நீங்களும் 'மகிழ்ச்சி அளிக்காது' என்ற இரண்டு சொற்களிலேயே எனக்கான செய்தியைச் சொல்லி விட்டீர்கள்! அப்படியானால் செண்பக நாட்டைப் போரில் வெல்வது அரிது என்று சொல்கிறீர்கள்?"

"அரிது என்று சொல்வதை விட இயலாது என்று சொல்வதுதான் உண்மை நிலைக்கு நெருக்கமாக இருக்கும்!"

"செண்பக நாடு ஒரு சிறிய நாடு. அதைப் போரில் வீழ்த்துவது எளிது என்று நினைத்தேன். சரி. அவர்களைப் போரில் வெல்ல முடியாது என்று ஏன் சொல்கிறீர்கள்?"

"அந்த நாட்டுக்கு அரணாக இருக்கும் கோட்டையை வைத்துத்தான். எவ்வளவு உயரம்! சுவர்கள் எவ்வளவு அகலம்! செயற்கையாக ஒரு மலையையே உருவாக்கியது போல் கோட்டையைக் கட்டி இருக்கிறார்கள். அதை எப்படிக் கட்டினார்கள் என்று தெரியவில்லை. அதன் பழமையைப் பார்க்கும்போது அது மிகவும் உறுதியாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பல முறை அந்தக் கோட்டையின் மீது தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும், எல்லாத் தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் கோட்டைக்குள் உள்ள கல்வெட்டுகளில் பொறித்து வைத்திருக்கிறார்கள். கோட்டை முற்றுகை இடப்பட்டால் நீண்ட காலம் கோட்டைக்குள்ளேயே இருந்து கொண்டு  முற்றுகையிட்டிருக்கும் படைகளை உள்ளிருந்தே தாக்கி முற்றுகையை எதிர்கொள்வதற்கான பல அமைப்புகளும் சாதனங்களும் கோட்டைச் சுவர்களில் அமைக்கப்பட்டுள்ளன."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால்  செண்பக நாட்டை வெற்றி கொள்ள எளிதான ஒரு வழி இருப்பது போல் தோன்றுகிறதே!"

"என்ன அரசே அது? அப்படி எதையும் நான் கூறவில்லையே!"

"அவர்கள் விருந்தோம்பலைப் பற்றிக் கூறினீர்களே! அவர்களுடன் நட்பு கொண்டு அவர்கள் மனங்களை வென்று அவர்களுடைய விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளும் வழியைத்தான் சொன்னேன்!"

தன் செய்தி அளித்த ஏமாற்றத்தைப் போக்கிக் கொள்ள அரசர் நகைச்சுவையை நாடி இருக்கிறார் என்பது புலவருக்குப் புரிந்தது.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 743:
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

பொருள்: 
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...