Wednesday, March 29, 2023

688. தூதரைப் பின்தொடர்ந்து...

"சித்திரச் செல்வனை முதல்முறையாக தூதராக அனுப்புகிறோமே, அவர் சரியாகச் செயல்படுவாரா?" என்றான் அரசன்.

"எவருக்கும் முதல்முறை என்று ஒன்று இருக்கிறது அல்லவா அரசே? நந்தி நாடு நம் நட்பு நாடுதானே! அங்கே சென்று வரும் அனுபவம் அவருக்குப் பயனுள்ளதாக இருக்கும்" என்றார் அமைச்சர்.

"சரி. போய்விட்டு வரட்டும். பார்க்கலாம்!" என்றார் அரசர்.

"அமைச்சரே! சித்திரச் செல்வன் தூது சென்று வந்து விட்டார். அவர் தன் பணியைச் சரியாகச் செய்திருப்பதாகத்தான் தோன்றுகிறது!" என்றான் அரசன்.

"ஆம் அரசே! அதை என்னால் உறுதியாகவே சொல்ல முடியும்" என்றார் அமைச்சர்.

"அது எப்படி?"

"அரசே! என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் அனுமதி இல்லாமல் தூதரைக் கண்காணிக்க ஒரு ஏற்பாடு செய்தேன்!" என்றார் அமைச்சர்.

"அது என்ன ஏற்பாடு?"

"நந்தி நாட்டில் இருக்கும் நம் ஒற்றன் ஒருவனிடம் சித்திரச் செல்வனைக் கண்காணிக்கச் சொல்லிச் செய்தி அனுப்பினேன். சித்திரச் செல்வன் நந்தி நாட்டில் அடி வைத்தது முதல் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் அந்த ஒற்றன் கண்காணித்திருக்கிறான். சித்திரச் செல்வன் திரும்பி வருவதற்குள் சங்கேத மொழியில் அந்த ஒற்றன் அனுப்பிய ஓலை எனக்கு வந்து சேர்ந்து விட்டது."

"தூதரை ஒற்றன் மூலம் கண்காணிக்கச் செய்தது முறையற்றதல்லவா?"

"உண்மைதான் அரசே! ஆனால் முதல்முறை தூதராகச் செல்பவர் எப்படிச் செயல்படுகிறார் என்று அறிந்து கொள்ள வேண்டாமா? நீங்கள் கூட இது பற்றிக் கவலை தெரிவித்தீர்களே!" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"சரி, இருக்கட்டும். ஒற்றன் சொன்ன தகவல்களைக் கூறுங்கள்."

"நந்தி நாட்டில் இருந்தபோது தன் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் சித்திரச் செல்வன் மிகவும் முனைப்பாக இருந்திருக்கிறார். என் ஒற்றனே அவரிடம் ஒரு விலைமகளை அனுப்பி அவரைச் சோதித்திருக்கிறான். சித்திரச் செல்வன் அவளிடம் மயங்காமல் அவளைத் திருப்பி அனுப்பி விட்டார்.

"இரண்டாவதாக, அந்த நாட்டில் தனக்கு உதவ, அறிவும், துணிவும் மிகுந்த ஒரு உள்ளூர் மனிதருடன் சித்திரச் செல்வன் நட்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

"மூன்றாவதாக நந்தி நாட்டு மன்னரிடம் தாங்கள் அனுப்பிய செய்தியைச் சொல்லும்போது துணிவுடன் செயல்பட்டிருக்கிறார். மன்னர் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான விடைகளைக் கூறி இருக்கிறார். அவர் தெரிவிக்கக் கூடாத சில விவரங்களை மன்னர் துருவிக் கேட்டபோது அவை தனக்குத் தெரியாது என்றும், தெரிந்தாலும் தான் அவற்றை வெளிப்படுத்த மாட்டேன் என்றும் துணிவுடன் கூறி இருக்கிறார்."

"நல்லது அமைச்சரே! தூதரைப் பற்றிய இந்த விவரங்களை நீங்கள் கண்டறிந்தது பற்றி மகிழ்ச்சி. ஆயினும் தூதரைப் பின்தொடர்ந்து ஒரு ஒற்றரை அனுப்பினீர்களே, அதை..." என்றான் அரசன்.

அமைச்சர் மௌனமாக அரசரின் முகத்தைப் பார்த்தார்.

"அதை என்னால் குற்றம் என்று கருத முடியாது. ஏனெனில் நானும் அதே குற்றத்தைச் செய்திருக்கிறேன்!" என்றான் அரசன்.

"என்ன சொல்கிறீர்கள் அரசே?" என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"தூதரின் செயல்பாட்டைக் கண்காணிக்க நீங்கள் ஒரு ஒற்றனை அனுப்பியது போல் நானும் ஒரு ஒற்றனை அனுப்பினேன்.  நான் அனுப்பிய ஒற்றனும் நீங்கள் அனுப்பிய ஒற்றன் கூறிய அதே தகவல்களைத்தான் கூறினான்" என்றான் அரசன் சிரித்தபடி.

பொருட்பால்
அதிகாரம் 69
தூது

குறள் 688:
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

பொருள்:
தூய ஒழுக்கம், நல்ல துணை, துணிவு இம்மூன்றுடன் சேர்ந்த வாய்மை இவற்றைக் கொண்டு தூதுரைப்பதே தூதரின் பண்பு.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...