Thursday, March 16, 2023

680. முடிவை மாற்றிக் கொண்ட மன்னன்

"கப்பம் கட்டுவதா? போரிட்டு நாம் அனைவரும் மடிந்து போனாலும் சரி, இன்னொரு நாட்டுக்குக் கப்பம் கட்டுவது என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது!" என்றான் ராஜவர்மன்

"அரசே! தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் நம் நாடு சிறியது. சோளிங்க நாடு நம் மீது படையெடுத்தால் நம் படைகளால் இரண்டு நாட்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது. சோளிங்க நாட்டுடன் சமாதானமாகப் போனால் நீங்கள் நம் நாட்டின் மன்னராகத் தொடரலாம்!" என்றார் அமைச்சர்.

"சோளிங்க நாட்டுக்குக் கப்பம் கட்டிக் கொண்டு இந்த நாட்டு மன்னன் என்ற பெயரில் அவர்களுடைய அடிமையாக ஆட்சி செய்ய நான் விரும்பவில்லை!" என்றான் ராஜவர்மன்.

"அமைச்சரே! நீங்கள் அன்று சொன்னதுதான் சரி. சோளிங்க நாட்டுடன் சமாதானமாகப் போவதென்று முடிவு செய்து விட்டேன்!" என்றான் ராஜவர்மன்.

"நல்ல முடிவுதான் அரசே! ஆனால் இந்த முடிவுக்கு நீங்கள் வந்ததற்கான காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?" என்றார் அமைச்சர்.

"நிச்சயமாக அமைச்சரே! அன்று உங்களிடம் என் முடிவைக் கூறிய பிறகு, நம் நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள நான் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றேன். பல்வேறு மக்கள் பேசிக் கொண்டதைக் கேட்டேன். நாம் போரில் தோற்று நம் நாடு சோளங்க நாட்டின் வசம் வந்து விட்டால் அவர்கள் ஆட்சி எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதைப் பற்றிப் பலரும் அச்சமும், கவலையும் கொண்டிருப்பதை அறிந்தேன். 'நாம் வேண்டுமானால் அதிக வரி கொடுத்து விடலாம், அந்தப் பணத்தை வைத்து நம் அரசர் சோளிங்க நாட்டுக்குக் கப்பம் செலுத்தி விட்டு, அவரே நம்மை ஆண்டால் நாம் நிம்மதியாக இருக்கலாமே!' என்று மக்கள் பேசிக் கொண்டதைக் கேட்டபோது, மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், அன்பையும் கண்டு பெருமையாக இருந்தாலும், மக்களுக்கு இத்தகைய அச்சம் இருக்கும்போது எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் சோளிங்க நாட்டின் ஆட்சிக்குக் கீழ் வருவதற்கு நான் அனுமதிக்கக் கூடாது என்று முடிவுக்கு வந்தேன். கப்பம் கட்டுவது இழிவு என்றாலும், நம் மக்களின் நலம் கருதி, அவர்கள் அச்சத்தைக் கருத்தில் கொண்டு, சோளிங்க நாட்டுடன் சமாதானமாகப் போவது என்று முடிவு செய்து விட்டேன்" என்றான் ராஜவர்மன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 680:
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

பொருள்:
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி, பலன் கிடைக்குமானால் அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...