Sunday, January 1, 2023

738. ஐந்து கேள்விகள்

புருஷோத்தமன் அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் நான்காண்டுப் பதவிக்காலம் முடியும் தறுவாயில், அடுத்து வரப்போகும் தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார். 

அவருடைய நான்காண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம். சீரழிந்தது. புருஷோத்தமனுக்கு நெருக்கமான சில தொழிலதிபர்களின் அசுர வளர்ச்சியைத் தவிர நாட்டில் வேறெந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

ஆயினும் புருஷோத்தமன்தான் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாம் முறையும் அதிபராவார் என்று ஊடகங்கள் கணித்தன. பெரும்பாலான ஊடகங்கள் பருஷோத்தமனின் கட்டுப்பாட்டில் இருந்தன என்பது வேறு விஷயம்!

புருஷோத்தமனுக்கு எதிராகக் களமிறங்கினார் கேசவ்!

'கேசவ் ஒரு விளையாட்டுப் பிள்ளை. ஐந்து வயதுக் குழந்தைக்கு இருக்கும் அறிவு கூட அவருக்கு இல்லை. அவரால் எப்படிப் புருஷோத்தமனை வெல்ல முடியும்?' என்று ஊடகங்கள் எள்ளி நகையாடின.

கேசவ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை அறிவித்தார்.

"ஒரு ஐந்து வயதுச் சிறுவனின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இத்தனை ஊடகவியலாளர்கள் வந்திருப்பதற்கு நன்றி!" என்று துவங்கினார் கேசவ்.

"மக்கள் செல்வாக்குப் பெற்றிருக்கும் புருஷோத்தமனை எதிர்க்க உங்களிடம் என்ன ஆயுதம் இருக்கிறது?" என்றார் ஒரு ஊடகவியலாளர்.

"என்னிடம் ஆயுதங்கள் இல்லை. அரசின் பாதுகாப்புப் படையினர் என்னைப் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தித்தான் இந்த அரங்குக்குள் அனுமதித்தார்கள்!" என்று இரண்டு கைகளையும் தூக்கிக் காட்டினார் கேசவ்.

இலேசான சிரிப்பு எழுந்தது.

"ஊடகவியலாளர்களே! நீங்கள் என்னிடம் பல கேள்விகளைக் கேட்கக் காத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் சில கேள்விகளுக்கு எனக்கு பதில் சொல்ல வேண்டும்.. இப்போது நீங்கள் என்னிடம் கேள்விகள் கேட்கலாம்!" என்றார் கேசவ்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஊடகவியலாளர்கள் கேசவைக் கேள்விகளால் துடைத்தெடுத்தனர். பல கேள்விகள் அவரைக் கேலி செய்வதாகவும், அவமானப்படுத்துவதாகவும் இருந்தன. ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் அவர் அமைதியாகப் புன்னகை மாறாமல் பதில் கூறினார்.

மேலும் கேட்க ஏதும் கேள்விகள் இல்லாத நிலை ஏற்பட்டபோது ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொண்டனர்.

"நீங்கள் என்னிடம் ஏதோ கேள்விகள் கேட்கப் போவதாகச் சொன்னீர்களே!" என்றார் ஒரு ஊடகவியலாளர்.

"ஆமாம். ஆனால் கேள்விகள் உங்களுக்கல்ல. இந்த நாட்டை நான்கு ஆண்டுகளாக ஆண்டு வரும் அதிபருக்கு! இந்தக் கேள்விகளை நான் பலமுறை எழுப்பியும் அவர் இதற்கு பதில் சொல்லவில்லை. என்னை விளையாட்டுப் பிள்ளை என்று எள்ளி நகையாடினார். உங்களில் பலரும் கூட என்னை எள்ளி நகையாடி மகிழ்ந்தீர்கள். இப்போது உங்கள் மூலம் நம் நாட்டு அதிபரிடம் நான் ஐந்து கேள்விகள் கேட்கப் போகிறேன்.

"1. கடந்த நான்கு ஆண்டுகளாக நம் நாட்டின் வளர்ச்சி குன்றி, வேலையின்மை அதிகரித்து லட்சக் கணக்கான மக்கள் ஏழ்மைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு உங்கள் ஆட்சிதான் பொறுப்பு. இதைச் சரி செய்ய என்ன செய்யப் போகிறீர்கள்?

"2. நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு சரியாகப் பராமரிக்கப்படவில்லை. நோய்கள் அதிகரித்து விட்டன. நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான மருத்துவமனைகள் இல்லை. இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன? இதற்கு உங்கள் தீர்வு என்ன?

"3. விவசாயிகள் ஏழைகளாகி வருகிறார்கள். விளைபொருளுக்குச் சரியான விலை கிடைக்காததால் விவசாயம் சீரழிந்து வருகிறது. விவசாயிகளின் வருமானம் குறைந்து, அவர்கள் கடனாளிகளாகி, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னையை நீங்கள் ஏன் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறீர்கள்?"

"4. நாட்டின் பாதுகாப்பில் நீங்கள் அக்கறை காட்டவில்லை. அதனால் நம் அண்டை நாடுகள் துணிவு பெற்று நம் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி ஊடுருவி நம் வீரர்களைத் தாக்குகிறார்கள். அந்தத் தாக்குதல்களில் சில வீரர்கள் உயிரிழந்து விட்டார்கள். நாட்டின் பாதுகாப்பில் நீங்கள் கவனம் செலுத்தாதது ஏன்?

"5. இது போன்ற பல பிரச்னைகளால் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக ழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையை ஏற்படுத்திய நீங்கள் எந்த அடிப்படையில் மீண்டும் நான்காண்டுகளுக்குப் பதிவியில் தொடர விரும்புகிறீர்கள்?"

சில கணங்கள் மௌனத்துக்குப் பின், ஒரு ஊடகவியலாளர், "குற்றம் சொல்வதும், குறை காண்பதும் எல்லோருக்கும் எளிது. இந்தப் பரச்னைகளுக்கு உங்களிடம் தீர்வு இருக்கிறதா?" என்றார் 

"இருக்கிறது. என் தேர்தல் அறிக்கையே இந்த ஐந்து பிரச்னைகள் பற்றியும் அவற்றுக்கு நான் எவ்வாறு தீர்வு காணப் போகிறேன் என்பதை மையப்படுத்தித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. உங்கள் முன் என் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்!" என்ற கேசவ் மேஜை மீதிருந்த அட்டைப் பெட்டியைக் கத்தரிக் கோலால் வெட்டித் திறந்து அதற்குள் இருந்த  தேர்தல் அறிக்கைப் புத்தகங்களை வெளியே எடுத்து அனைவருக்கும் விநியோகித்தார்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 738:
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

பொருள்: 
நோயில்லாமை, செல்வம், நல்ல விளைச்சல், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...