Saturday, December 31, 2022

737. மழைவளமும், மண்வளமும்

சாந்தவி தன் மகன் அனந்தனுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவளைக் காண வந்த கருவேலர், உள்ளே நுழையும்போதே, "அன்னையே! தங்கள் மகன் அரியணை ஏறும் காலம் வந்து விட்டது!" என்று கூறிக் கொண்டே வந்தார்.

"என்ன சொல்கிறீர்கள் கருவேலரே? என் மைத்துனர் மருதர் மனம் மாறி, இளவரசனான என் மகன்தான் அரியணை ஏற வேண்டும் என்று முடிவு செய்து அவனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாரா என்ன?" என்றாள் சாந்தவி.

"மருதனாவது மனம் மாறுவதாவது? பதவி வெறி பிடித்து இளவரசரைக் கொலை செய்ய முயன்றவன்தானே அந்தக் கருநாகம்!" என்றார் கருவேலர், கோபத்துடன்.

"அரசராக இருந்த என் கணவர் மறைந்ததும், அனந்தன் சிறுவன் என்பதால் அவன் அரியணை ஏறும் வயது வரும் வரை தான் தற்காலிக அரசராக இருப்பதாகக் கூறிப் பதவியேற்ற என் கணவரின் தம்பி மருதர் என் மகன் அனந்தனை நயவஞ்சகமாகக் கொல்ல முயன்றபோது, தாங்கள் அந்த முயற்சியை முறியடித்து, எங்கள் இருவரையும் நாட்டின் எல்லைப்புறத்தில் இருக்கும் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்து, எங்களை இங்கே ரகசியமாக வைத்துப் பதுகாத்து வருகிறீர்கள். இந்த நிலையில், என் மகன் அரியணை ஏறும் காலம் வந்து விட்டது என்று திடீரென்று கூறினால், நான் என்ன புரிந்து கொள்வது?" என்றாள் சாந்தவி.

"அன்னையே! இந்தப் பகுதி நம் நாட்டின் ஒரு பகுதி என்றாலும், மருதன் முறையற்ற விதத்தில் அரியணை ஏறினான் என்பதால், இங்குள்ள மக்கள் மருதனை மன்னராக ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. ஆரம்ப முதலே அவர்கள் மருதனை எதிர்த்து வந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் மருதனின் படை வீரர்கள் எவரும் நுழைய இப்பகுதி மக்கள் அனுமதிக்கவில்லை. 

"அது மட்டுமல்ல. மருதனின் அரசுக்கு வரி கட்ட மறுத்து, உள்ளூரிலேயே சிலர் வரி வசூலித்து இந்தப் பகுதி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். அதாவது, இந்தப் பகுதி மருதனின் ஆட்சிக்கு உட்படாத ஒரு தனி நாடாகவே இருந்து வந்திருக்கிறது. 

"இளவரசர் இங்கே இருப்பதை அறிந்து கொண்ட இப்பகுதி மக்கள் சிலர் இந்தப் பகுதிக்கு அரசராக நம் அனந்தனே முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்! இதை இங்குள்ள எல்லா மக்களும் ஒருமனதாக ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள் "

சாந்தவி ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு யோசிப்பது போல் இருந்தாள்.

"என்ன அன்னையே! இந்த நாட்டையே ஆள வேண்டிய அரசகுமாரன் அனந்தன் இந்தச் சிறுபகுதிக்கு அரசனாக இருக்க வேண்டுமா என்று யோசிக்கிறீர்களா?" என்றார் கருவேலர்.

"இல்லை கருவேலரே! இந்தப் பகுதி எவ்வளவு உயர்வானது! இந்தப் பகுதியில் மழை பருவம் தவறாமல் பெய்து இந்த மண்ணை வளமாக்குகிறது. மறுபுறம், எங்கும் நிறைந்திருக்கும் நிலத்தடி நீர் ஊற்றாகப் பெருகி வளம் சேர்க்கிறது. அடர்ந்த மலைப்பகுதி, அதிலிருந்து பெருகி வரும் ஆறு என்று இயற்கையின் செல்லப் பிள்ளை போல் அல்லவா விளங்குகிறது இந்தப் பகுதி! ஒருபுறம் மலைகள், இருபறம்  காடுகள், இன்னொரு புறம் ஆறு என்று நாற்புறமும் அரண்கள் கொண்ட பகுதி அல்லவா இது? இதை ஒரு நாடாக அறிவித்து, அதற்கு என் மகன் அரசனாகப் போவதை நினைத்தால் எனக்குப் புளகாங்கிதம் ஏற்படுகிறது. இந்தப் பகுதி மக்களுக்கு எங்கள் மீது இருக்கும் அன்பை எண்ணிக் கண்ணை மூடி அவர்களுக்கு நன்றி செலுத்தினேன். உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். சிறிய நாடாக இருந்தாலும் சிறந்த நாடான இதற்கு என் மகனை அரசனாக்க நீங்கள் செய்த முயற்சிகளுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன்!" என்றாள் சாந்தவி.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 737:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

பொருள்: 
ஊற்றும், மழையும் ஆகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...