Friday, December 30, 2022

736. பகைவரும் நண்பராகலாம்!

பல ஆண்டுகளாக சாலிய நாட்டுடன் பகை உணர்வு கொண்டிருந்த சுந்தர நாட்டு மன்னன் கலிவரதன் திடீரென்று சமாதானத்தை விரும்பி சாலிய நாட்டு மன்னன் மகிழ்வாணனுக்கு தூது அனுப்பினான்.

கலிவரதனின் சமாதானக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மகிழ்வாணன் கலிவரதனைத் தன் நாட்டுக்கு விருந்தாளியாக வரும்படி அழைத்தான்.

தன் நாட்டுக்கு விருந்தாளியக வந்த கலிவரதனுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பளித்த மகிழ்வாணன் கலிவரதனைத் தன் நாட்டின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று காட்டினான்.

"மகிழ்வாணரே! தங்களைச் சந்தித்து நம் பிரச்னைகளைப் பேசித் தீர்க்கத்தான் நான் தங்கள் அழைப்பை ஏற்றுத் தங்கள் நாட்டுக்கு வந்தேன். ஆனால் தாங்கள் என்னைத் தங்கள் நாடு முழுவதற்கும் சுற்றுப்பயணம் அழைத்துச் சென்று விட்டீர்களே!" என்றான் கலிவரதன் மகிழ்ச்சியுடன்.

மகிழ்வாணன் புன்னகை செய்தபடி, "எங்கள் நாடு எப்படி இருக்கிறது கலிவரதரே!" என்றான்.

"மிகவும் வளமாக இருக்கிறது. மக்களிடையே உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது. விவசாயமும், தொழில்களும் சிறப்பாக நடந்து வருவதாகத் தோன்றுகிறது!" என்ற கலிவரதனின் முகம் சட்டென்று வாடியது.

"என்ன ஆயிற்று கலிவரதரே!"

"இல்லை மகிழ்வாணரே! என் நாட்டின் நிலையை நினைத்துப் பார்த்தேன். அடிக்கடி நிகழும் போர்களால் எங்கள் நாடு சீரழிந்திருக்கிறது. மக்களிடையே வறுமை மிகுந்திருக்கிறது. ஆனால் நீங்களும்தானே போர்களில் ஈடுபட்டு வந்திருக்கிறீர்கள்? உங்கள் நாட்டில் போரினால் பாதிப்பு ஏற்படவில்லையா?"

"ஏற்பட்டது. ஆனால் அவற்றைச் சரிசெய்து விட்டோம். நாங்கள் போரைத் தவிர்க்கவே விரும்புகிறோம். உங்கள் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டுடனும் போர் செய்யும் அவசியம் எங்களுக்கு ஏற்படவில்லை!" என்று கூறி கலிவரதனின் முகத்தைப் பார்த்தான் மகிழ்வாணன்.

"புரிகிறது. ஆனால் நாங்கள் எங்கள் அண்டை நாடுகள்பலவற்றுடனும் போரில் ஈடுபட்டு வந்திருக்கிறோம். அடிக்கடி நடக்கும் போர்களால் எங்கள் நாடு சீரழிந்து வருவதை உணர்ந்துதான் இனியாகிலும் போரைத் தவிர்க்க வேண்டும் என்று சமாதான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறேன்!" என்றான் மகிழ்வாணன். அவன் குரலில் அவமான உணர்ச்சி தொனித்தது.

"கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்திருந்தாலும் இனி போரைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்ததற்கு உங்களைப் பாராட்டுகிறேன். துணிச்சலுடனும், மனத் தெளிவுடனும் இந்த முடிவை எடுத்ததற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும். நீங்கள் என் நண்பர் ஆகி விட்டது குறித்து நானும் பெருமைப்படுகிறேன்!" என்றான் மகிழ்வாணன் கலிவரதனின் தோள்களை நட்புடன் பற்றியபடி. 

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 736:
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

பொருள்: 
பகைவரால் கேடு ஏற்படாததாய், கேடு ஏற்பட்டபோதும், வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்..
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...