Saturday, June 11, 2022

600. அப்பா வளர்த்த மரங்கள்!

"வயசு இருபத்தைஞ்சு ஆகப் போகுது! இன்னும் ஒரு வேலையைத் தேடிக்காம உக்காந்திருக்கியே!" என்றாள் திலகம்.

"தேடிக்கிட்டுத்தானே இருக்கேன்!" என்றான் நடராஜன்.

"என்னத்தைத் தேடற? அதிகம் படிக்காத நான் பேப்பர்ல வர வேலை அறிவிப்புகளைப் பாத்து உனக்கு ஏற்றதா இருந்தா அப்ளை பண்ணச் சொல்லி உங்கிட்ட சொல்ல வேண்டி இருக்கு. அதிலேயும் நீ ஒண்ணு ரெண்டுக்குத்தான் அப்ளை பண்றே!"

"எனக்கு ஏற்ற வேலைன்னு எனக்குத்தானே அம்மா தெரியும்? நீ சொன்னதுக்காக எல்லா வேலைக்கும் நான் அப்ளை பண்ண முடியாது."

"சரி, தெரிஞ்சவங்க யார்கிட்டயாவது சொல்லி அவங்க மூலமா ஏதாவது வேலை தேடிக்கலாம் இல்ல? நான் யார்கிட்டயாவது சொன்னாலும் நீ அவங்களைப் போய்ப் பாக்க மாட்டேங்கற!"

"நீ சொல்ற ஆட்களையெல்லாம் போய்ப் பாத்து அவங்ககிட்ட நான் வேலைப் பிச்சை கேட்க முடியாது!" என்றான் என்றான் நடராஜன் கோபத்துடன். தொடர்ந்து, "இப்ப என்ன நாம சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டா இருக்கோம்?" என்றான்.

"இப்படியே இருந்துட முடியுமா? நாளைக்கே உனக்குக் கல்யாணம் ஆகி, குடும்பம் உண்டாயிடுச்சுன்னா நிலையான வருமானம் வேண்டாமா? சின்ன வயசிலேயே உன்னை எங்கிட்ட விட்டுட்டு உங்கப்பா போய்ச் சேர்ந்துட்டாரு. நான் கஷ்டப்பட்டு உன்னை வளர்த்தேன். படிக்கிற காலத்திலேயுயும் ஒழுங்காப் படிக்க மாட்டேன்னுட்ட. உன்னை காலேஜில படிக்க வைக்கணும்னு கஷ்டப்பட்டு காசு சேர்த்தேன், ஆனா நீ பள்ளிக் கூடத்தைத் தாண்டல. இப்ப வேலைக்கும் சரியா முயற்சி செய்ய மாட்டேங்கற. உன் எதிர்காலத்தை நினைச்சா எனக்கு பயமா இருக்கு. ஆனா உனக்கு அந்த பயம் கூட இல்லையே!" என்று பொரிந்து தள்ளினாள்.திலகம்.

நடராஜன் கோபத்துடன் எழுந்து சென்று விட்டான்.

திலகம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சிவகாமி வந்தாள்.

"என்ன திலகம் உன் பையனுக்கு வேலை கிடைச்சுதா?" என்றாள் சிவகாமி.

"இல்லை. இன்னும் தேடிக்கிட்டிருக்கான்!" என்றாள் திலகம்.

"இந்த மரம் எல்லாம் நல்லா வளர்ந்துடுச்சே!" என்றாள் சிவகாமி.

"எல்லாம் அவர் இருந்தப்ப வச்ச செடிகள். இப்ப மரமா வளர்ந்துடுச்சு!" என்றாள் திலகம். அப்போது வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த நடராஜனைப் பார்த்த திலகம் அவனுக்கும் இந்த மரங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைத்துக் கொண்டாள்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

குறள் 600:
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

பொருள்:
ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...