Tuesday, May 17, 2022

585. 'பயண' அனுபவம்

மணிமாறன் பொன்னி நாட்டுக்குள் அடியெடுத்து வைத்து ஒரு வாரம் ஆகி விட்டது. ஒரு சுற்றுப் பயணியாக அவன் பல இடங்களுக்கும் சென்று வந்தான்.

அன்று அவன் அந்த மலைக்கோயிலில் சிற்பங்களை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவன் முதுகில் யாரோ தட்டினார்கள்.

மணிமாறன் திரும்பிப் பார்த்தான். அந்த நாட்டின் காவல் வீரர்கள் இருவர் நின்று கொண்டிருந்தனர்.

"தம்பி! எங்கள் தலைவர் உங்களைப் பார்க்க வேண்டுமாம். கொஞ்சம் எங்களுடன் வருகிறாயா?" என்றான் ஒருவன்.

"நான் அழகாபுரியிலிருந்து வந்திருக்கும் ஒரு சுற்றுப் பயணி" என்றான் மணிமாறன் அமைதியாக.

"நீ யார் என்று நான் கேட்கவில்லையே! பேசாமல் எங்களுடன் வா!" என்றான் காவலன்.

காவல் தலைவர் முன்னிலையில் மணிமாறன் கொண்டு நிறுத்தப்பட்டதும், காவல் தலைவர் மணிமாறனை நீண்ட நேரம் விசாரித்தார். 

மணிமாறன் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னான்.

"மிகவும் பொறுமையாக, திறமையாக பதில் சொன்னாய் தம்பி! இப்போது நீ போகலாம்!" என்ற காவல் தலைவர், "சிறைச்சாலைக்கு!" என்றார் தொடர்ந்து, சிரித்துக் கொண்டே.

"ஐயா! நான் சொன்னதெல்லாம் உண்மைதான். அழகாபுரி பொன்னி நாட்டின் நட்பு நாடு. என் மீது சந்தேகப்படுகிறீர்களே!" என்றான் மணிமாறன்.

"நீ எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தால் என்ன? நீ ஒற்று வேலை செய்ய வந்திருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். இப்போது உண்மையைச் சொன்னால் சித்திரவதையிலிருந்து தப்பலாம்!" என்றார் காவல் தலைவர்.

"ஐயா! உண்மை என்பது ஒன்றுதான். அது மாறாது. அதை நான் முன்பே உங்களிடம் சொல்லி விட்டேன். நான் அழகாபுரி நாட்டைச் சேர்ந்தவன். நான் கலை ஆர்வம் உள்ளவன். பல நாடுகளிலும் உள்ள கலைப் பொக்கிஷங்களைக் காண வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். எங்கள் அண்டை நாடான உங்கள் நாட்டில் கலை அம்சம் உள்ள பல இடங்கள் இருப்பதாக எங்கள் நாட்டில் பலரும் கூறுவதால் அவற்றைக் காண வேண்டும் என்ற ஆவலில் இங்கே வந்திருக்கிறேன். ஒரு விருந்தாளியையே சந்தேகப்படுகிறீர்களே!" என்றான் மணிமாறன் பொறுமையாக.

"நீ எங்கள் நாட்டுக்கு விருந்தாளியாகத்தான் வந்திருக்கிறாய் . அதனால்தான் உன்னை அரசாங்க விருந்தாளியாக்கி பலமான விருந்து படைக்கப் போகிறோம்" என்று கூறிப் பெரிதாகச் சிரித்தார் காவல் தலைவர்.

காவலர்கள் மணிமாறனைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

டுத்த சில நாட்களுக்கு காவல் தலைவர் கூறியபடி மணிமாறனுக்கு பலமான 'விருந்து' பரிமாறப்பட்டது. நீண்ட நேரம் உணவு, தண்ணீர் கொடுக்காமல் தவிக்க வைத்தல், கசையடி, பிரம்படி என்று அவனைக் காயப்படுத்தித் துடிக்க வைத்தல் என்று பல்வேறு 'விருந்துகள்' பரிமாறப்பட்டன.

ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு மணிமாறன் விடுவிக்கப்படான். காவல் தலைவர் அவனிடம் வருத்தம் தெரிவித்தார். 

அடுத்த இரண்டு நாட்களுக்கு மணிமாறன் அரண்மனை விடுதியில் தங்க வைக்கப்பட்டு உண்மையாகவே அரசாங்க விருந்தாளியாக நடத்தப்பட்டான். 

அரசாங்க மருத்துவர் அவன் காயங்களுக்கு சிகிச்சை அளித்தார். அறுசுவை உணவு, பஞ்சணையில் ஓய்வு என்று நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு மாற்றப்பட்டது போல் இருந்தது மணிமாறனுக்கு.

அதற்குப் பிறகு அவனை ஒரு குதிரையில் ஏற்றி அழகாபுரி நாட்டின் எல்லையில் கொண்டு விட்டார்கள்..

"அற்புதம் மணிமாறா! நீ சோதனையில் தேறி விட்டாய். ஒற்றனாகத் தகுதி பெற்று விட்டாய்!" என்றார் ஒற்றர் படைத் தலைவர்.

"தகுதி பெற்று விட்டேனா? ஏற்கெனவே என்னை ஒற்றனாகத்தானே பொன்னி நாட்டுக்கு அனுப்பினார்கள்?" என்றான் மணிமாறன்.

"இல்லை மணிமாறா. ஒற்றர்களாகப் பணியாற்ற விரும்புபவர்களுக்கு நாங்கள் வைக்கும் சோதனை இது. பொன்னி நாட்டுடன் எங்களுக்கு ஒரு ஏற்பாடு இருக்கிறது. பயிற்சிக்காக ஒற்றர்களை நாம் அங்கு அனுப்புவோம், அவர்கள் ஒற்றர்களை இங்கே அனுப்புவார்கள். 

"பயிற்சி என்றால் நடைமுறைப் பயிற்சி. உன்னைப் பொன்னி நாட்டுக்கு அனுப்பும்போதே உன்னைப் பற்றிய ஓலையைப் பொன்னி நாட்டின் ஒற்றர்படைத் தலைவருக்கு அனுப்பி விட்டேன். நீ அங்கே போனதிலிருந்து உன்னை அவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். நீ திரும்பி வருவதற்குள் உன்னைப் பற்றிய அறிக்கை ஓலையும் எனக்கு வந்து விட்டது. நீ தேர்ச்சி பெற்று விட்டாய்" என்றார் ஒற்றர்படைத் தலைவர் சிரித்தபடி.

"என்னைப் பற்றிய அறிக்கை ஒலையில் என்ன இருந்தது என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்றான் மணிமாறன் வியப்புடன்.

"நிச்சயமாக. நீ யாரும் சந்தேகிக்கப்பட முடியாத அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறாய். ஒரு வாரம் உன்னை கவனித்து முதல் கட்டத்தில் நீ தேறி விட்டாய் என்று தெரிந்ததும் இரண்டாவது கட்டமாக உன்னைக் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள். நீ பதட்டப்படமல் பொறுமை இழக்காமல் பதில் சொல்லி இருக்கிறாய். 

" மூன்றாவது கட்டமாக உன்னைச் சிறையிலடைத்துச் சித்திரவதை செய்திருக்கிறார்கள். உனக்கு இத்தகைய துன்பங்கள் ஏற்பட்டதற்காக நீ என் மீது கோபப்படலாம். ஆனால், ஒரு ஒற்றனாக எதிரி நாட்டில் நீ சிக்கிக் கொண்டால் இதுதானே நடக்கும்? அப்போதும் நீ துன்பங்களைத் தாங்கிக் கொண்டு உன்னைப் பற்றிய உண்மையைக் கூறாமல் இருந்திருக்கிறாய். பாராட்டுக்கள்!"

"தலைவரே! நீங்கள் என்னைப் பொன்னி நாட்டுக்கு அனுப்பியபோது, அது நம் நட்பு நாடாயிற்றே, அங்கே நாம் ஏன் வேவு பார்க்க வேண்டும் என்று நான் கேட்டது தங்களுக்கு நினைவிருக்கும்!" என்றான் மணிமாறன்.

"ஆமாம். நட்பு நாடாக இருந்தாலும், அவர்கள் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று பதில் சொன்னேன்!"

"தாங்கள் கூறியது உண்மைதான் தலைவரே! பொன்னி நாடு நம் எதிரியான சீதள நாட்டுடன் நெருக்கமாக இருக்க ஆரம்பித்து விட்டது. பொன்னி நாட்டில் நான் இருந்த குறுகிய காலத்தில் நான் கண்டறிந்த உண்மை இது. இதற்கான அடிப்படைகளையும், சான்றுகளையும் இந்த ஓலைச் சுவடிகளில் எழுதி இருக்கிறேன். எனவே பொன்னி நாட்டை இனியும் நாம் நட்பு நாடு என்று கருதாமல் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து" என்றபடியே தன் கையிலிருந்த ஓலைகளை ஒற்றர்படைத் தலைவரிடம் கொடுத்தான் மணிமாறன்.

ஓலைகளை வேகமாகப் புரட்டிப் பார்த்த ஒற்றர்படைத் தலைவர், "நான் உன்னைப் பயிற்சிக்காக அனுப்பியபோதே இவ்வளவு அற்புதமான ஒரு பணியைச் செய்திருக்கிறாயே! மன்னரிடம் கூறி உனக்குச் சிறப்பான பரிசு வழங்கும்படி கேட்கப் போகிறேன்" என்றபடியே மணிமாறனை அணைத்துக் கொண்டார் ஒற்றர்படைத் தலைவர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 59
ஒற்றாடல்

குறள் 585:
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

பொருள்: 
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களின் பார்வைக்கு  அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...