Saturday, April 23, 2022

573. புதிய இசையமைப்பாளர்

"என்னய்யா மியூசிக் போட்டிருக்க? பாடல் வரிகள் சோகமா இருக்கு. உன் மியூசிக் சந்தோஷத்தில துள்ளிக் குதிக்கிற மாதிரி இருக்கு!" என்றார் இயக்குனர் கன்னியப்பன், கோபத்துடன்.

"இல்ல சார்.வேற டியூன் போட்டுடறேன்!" என்றான் நாதன், பதட்டத்துடன். முதல்முறையாக அவனுக்குத் திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக் கிடைத்து, அவன் இசையமைத்த முதல் பாடல் அது.

"நீ என்னிக்கு வேற டியூன் போட்டு, நான் எப்ப ஷூட் பண்றது?" என்று கோபமாகக் கத்திய கன்னியப்பன், தனக்கு அருகில் அமர்ந்திருந்த தயாரிப்பாளர் வேணுவிடம், "சார்! இவன் வேண்டாம். நீங்க சுந்தரையே போட்டுடுங்க!" என்றார்.

தயாரிப்பாளர் வேணு, இயக்குநர் அருகில் குனிந்து, "பையன் புதுசு. அவங்கிட்ட நிறைய திறமை இருக்கு, ஆனா அனுபவம் இல்ல. இது அவனோட முதல் பாட்டு. வாய்ப்புக் கிடைச்ச உற்சாகத்தில, நல்ல டியூன் போடணும்னு நினைச்சுப் போட்டிருக்கான். அதான் வேற டியூன் போடறேங்கறானே, இன்னொரு வாய்ப்புக் கொடுக்கலாம்!" என்றார், அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்.

"சார்! உங்களுக்கு இவன்தான் முக்கியம்னா, வேற டைரக்டரை வச்சுப் படம் எடுத்துக்கங்க!" என்று கோபமாகக் கூறிய இயக்குனர் கன்னியப்பன், "பேக் அப்!" என்று இரைந்து கூறி விட்டு, எழுந்து சென்று விட்டார்.

வெலவெலத்துப் போய் நின்றிருந்த இசையமைப்பாளர் நாதனைப் பார்த்து, "நீ கவலைப்படாதே தம்பி! அவர் பெரிய டைரக்டர், அப்படித்தான் பேசுவாரு. நான் அப்புறம் அவர்கிட்ட பேசறேன். அப்படி அவர் ஒத்துக்கலேன்னா, உனக்கு என் அடுத்த படத்தில வாய்ப்புக் கொடுக்கறேன். உங்கிட்ட திறமை இருக்கு. அதனால, நீ நிச்சயம் முன்னுக்கு வருவே. எதுக்கும் இந்த லிரிக்ஸை வாங்கிக்கிட்டுப் போய், வேற டியூன் யோசிச்சு வை. உனக்கு இந்தப் படத்தில வாய்ப்பு இல்லாட்டாலும், உனக்குக் கொடுத்த அட்வான்ஸை நான் திரும்பக் கேக்க மாட்டேன். போயிட்டு வா!" என்றார் வேணு, ஆதரவான குலில்.

நாதன் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, அங்கிருந்து அகன்றான்.

"என்னங்க, இந்த டைரக்டர் உங்களையே மதிக்காம பேசறாரு!" என்றான் வேணுவின் உதவியாளன் சக்திவேல்.

"என்ன செய்யறது? அவருக்கு மார்க்கெட் இருக்கு. அந்தத் திமிர்ல பேசறாரு. என்னையே மதிக்காதவர், நாதன் மாதிரி புது ஆளுங்களையா மதிக்கப் போறாரு? பாவம் அந்தப் பையன்! இவர் போட்ட கூச்சல வெலவெலத்துப் போயிட்டான். பாடல் வரிகளுக்கு இசை பொருத்தமா இல்லேன்னு சொல்றாரே, இது மாதிரி மத்தவங்ககிட்ட இரக்கமோ, கருணையோ, புரிதலோ இல்லாம நடந்துக்கிறது மனிதத் தன்மைக்குப் பொருத்தமா இருக்கான்னு இவர் ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டேங்கறாரே!" என்றார் வேணு, வருத்தத்துடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 573:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்..

பொருள்: 
பாடலோடு பொருந்துதல் இல்லையானால், இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால், கண் என்ன பயனுடையதாகும்?

Read 'The Novice Composer' the English version of this story by the same author.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...