சச்சிதானந்தம் இறந்து விட்டார். அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்.
சச்சிதானந்துக்கு அஞ்சலி செலுத்தப் பலர் வந்து போனார்கள். வந்தவர்களில் பலர்,அவர் உடல் அருகே சில விநாடிகள் நின்று விட்டு, அருகிலிருந்த அவர் உறவினர்களிடம் ஒன்றிரண்டு அனுதாப வார்த்தைகளைப் பேசி விட்டுப் போய் விட்டனர்.
அவர் அலுவலக ஊழியர்கள் சிலர் மட்டும் வெளியே வராந்தாவில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.
அவர்களில் சிலர் தங்களுக்குள் மெதுவான குரலில் பேசிக் கொண்டனர்.
"இருபது வருஷம் அவர்கிட்ட வேலை செஞ்சிருக்கேன். ஒரு தடவை கூட அவர் என் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டதில்ல. ஏதாவது சொல்ல ஆரம்பிச்சாலே, 'நான் சொன்னதைச் செய், எங்கிட்ட வேற பேச்சு எதுவும் வேண்டாம்'னு கடுமையா சொல்லிடுவாரு. உயிர் போகப் போகிற நிலைமைன்னா கூட, 'நான் சொன்னதைச் செஞ்சுட்டு, அப்புறம் செத்துப் போ!'ன்னு சொல்ற ஆளு! இப்படிப்பட்ட ஒரு கல்நெஞ்சக்காரரை நான் பார்த்ததே இல்லை."
"நான் அவர்கிட்ட டைப்பிஸ்டா இருந்தேன். நான் வேலையில ரொம்ப ஸ்லோன்னு சொல்லி என்னை வேற ஊருக்கு மாத்திட்டாரு. 'இந்த ஆஃபீஸ்லேயே வேற எங்கேயாவது போடுங்க சார்'னு கெஞ்சினேன். கஷ்டப்பட்டாதான் நீ உன்னை இம்ப்ரூவ் பண்ணிப்பேன்னு இரக்கமில்லாம சொல்லிட்டாரு. ஒரு பெண் ஊழியரை வெளியூருக்கு மாத்த வேண்டாம்னு ஆஃபீஸ்ல சில பேர் சொல்லிப் பாத்தாங்க. 'மத்த விஷயங்களிலெல்லாம் சமத்துவம் கேக்கறாங்க இல்ல, இதில மட்டும் என்ன சலுகை?'ன்னு கிண்டலா பதில் சொன்னாரு. ஆறு மாசம் என் குடும்பத்தை விட்டுட்டு வெளியூர்ல போய் வேலை செஞ்சுட்டு, அப்புறம் ஹெட் ஆஃபீஸ்ல கேட்டுத் திரும்பவும் இங்கே மாத்திக்கிட்டு வந்தேன். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்! அப்ப என் குழந்தைங்க ரெண்டு பேரும் சின்னவங்க. வேலையை விடவும் முடியல. அப்பப்பா! இப்படியா ஒத்தர் இரக்கம் இல்லாம நடந்துப்பாரு!"
"நான் அவர்கிட்ட உதவியாளராவே இருந்திருக்கேன். எவ்வளவு பேருக்கு இன்கிரிமென்ட் கட் பண்ணி இருப்பாரு, எத்தனை பேரோட புரோமஷனைத் தடுத்திருப்பாரு, எத்தனை பேரை வேற ஊருக்கு மாத்தி இருப்பாரு! அத்தனை ஆர்டரையும் நான்தானே டைப் பண்ணி இருக்கேன்! எனக்கே பரிதாபமா இருக்கும். ஆனா அவர் ஈவு இரக்கமே பாக்க மாட்டாரு. எத்தனையோ பேர் அவர்கிட்ட வந்து கெஞ்சி இருக்காங்க. 'இந்த ஒரு தடவை மன்னிச்சுடுங்க சார், இன்கிரிமென்ட் கட் பண்ணினீங்கன்னா, என் ஃபைல்ல ரிகார்ட் ஆகி என் எதிர்காலமே கெட்டுப் போயிடும்'னு கெஞ்சுவாங்க. கொஞ்சமாவது இரக்கம் காட்டணுமே! மனுஷனோட இதயத்தைக் கடவுள் கல்லால செஞ்சிருப்பார் போலருக்கு."
இது போல் இன்னும் சிலர் அவருடனான தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
சற்றுத் தள்ளி அமர்ந்து அவற்றை கவனித்துக் கொண்டிருந்த ஒரு நபர், தன் அருகில் அமர்ந்திருந்தவரிடம், "என்ன இது? ஒத்தர் இறந்து போயிருக்காரு. இன்னும் அவர் உடலைக் கூட எடுக்கல. அவரைப் பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்லாட்டாக் கூடப் பரவாயில்ல. இப்படியா மோசமாப் பேசறது?" என்றார், அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்
"அவங்கள்ளாம் அவர்கிட்ட வேலை செஞ்சவங்க. நான் அவரோட அலுவலகத்துக்குப் பல தடவை போயிருக்கேன். அவர் கொஞ்சம் கூட இரக்கமில்லாம நடந்துக்கறதைப் பாத்திருக்கேன். அவர் உயிரோட இருந்தப்ப, இவங்கள்ளாம் வேற வழியில்லாம, அவரை சகிச்சுக்கிட்டுத்தான் இருந்திருக்காங்க. அவர் இறந்து போனதால, ஒரு மரியாதைக்கு அவங்கள்ளாம் வந்திருக்காங்க. ஆனா, அவங்களுக்கு அவர் மேல மதிப்பு எப்படி இருக்கும்?" என்றார் அவர்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)
குறள் 572:
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
No comments:
Post a Comment