Sunday, March 20, 2022

557. நாடு விட்டு நாடு வந்து...

"குருவே! இந்த மரகத நாட்டில் மக்கள் படும் துயரத்தைப் பார்த்து என் மனம் துடிக்கிறது" என்றான் சீடன்.

"ஆமாம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நிலையை அடைந்து விட்டதாகக் கருதப்படும் எனக்குக் கூட மக்கள் படும் துயரத்தைப் பார்க்கும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. உலகில் எல்லாக் கொடுமைகளையும் விட மழை பொய்ப்பதால் ஏற்படும் கொடுமைதான் மிகவும் கொடியது என்று நினைக்கிறேன்" என்றார் குரு.

"ஏன் இப்படி நடக்கிறது குருவே? கடவுள் ஏன் இந்த நாட்டு மக்களிடம் இப்படி இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்?" 

ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்ட குரு, பிறகு, "கடவுளின் மனத்தை நம்மால் புரிந்து கொள்ளவோ மதிப்பிடவோ முடிந்தால் அப்புறம் அவரைக் கடவுள் என்று குறிப்பிடுவதே பொருளற்றதாக ஆகி விடும்!" என்றார்.

பிறகு ஒரு புன்னகையுடன், "இப்போதைக்கு என்னால் இந்த விடையைத்தான் கூற முடியும். ஒருவேளை நான் இன்னும் சற்று முதிர்ச்சி அடைந்தால் இதை விடச் சிறப்பான ஒரு விடையைக் கூறலாம்!" என்றார் தொடர்ந்து.

சற்று நேரம் கழித்து குரு சீடனிடம், "மழை பொய்த்ததால் இந்த நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் நிலவுகிறது. ஆயினும் நாம் துறவிகள் என்பதால் சிலர் தங்களுக்குப் போதிய உணவில்லாத நிலையிலும் நமக்கு உணவளிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் இந்த நாட்டை விட்டு வேறு நாட்டுக்குச் செல்வதுதான் உகந்தது. வேறு நாட்டுக்குச் சென்ற பிறகும், இந்த மரகத நாட்டு மக்களுக்காக நாம் தொடர்ந்து பிரார்த்திப்போம். நம்மால் செய்யக் கூடியவை இந்த இரண்டும்தான்" என்றார்.

"இந்த கோமேதக நாட்டில் பயிர்கள் செழித்து வளர்ந்திருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது!" என்றான் சீடன்.

"ஆம். இந்தச் செழுமை  மரகத நாட்டுக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்" என்றார் குரு.

சில நாட்கள் கழித்து, சீடன் குருவிடம் "குருவே! இந்த நாடு செழிப்பாக இருக்கிறது, எல்லா வளங்களும் கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லையே! மழை பொய்த்ததால் போதிய உணவு கிடைக்காததால் ஏற்பட்ட துன்பத்தை அனுபவித்த மரகத நாட்டு மக்களின் முகத்தில் தெரிந்த அதே சோகத்தை நான் இந்த கோமேதக நாட்டு மக்களிடமும் பார்க்கிறேன்" என்றான்.

"இந்த நாட்டு மக்களிடம் அதே சோகம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதை விட அதிகமான சோகம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது!" என்றார் குரு.

"ஏன் குருவே அப்படி? இவ்வளவு வளம் இருந்தும் மக்கள் ஏன் சோகமாக இருக்கிறார்கள்?"

"எவ்வளவு வளம் இருந்து என்ன? நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடக்கும்போது மக்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?"

"என்ன சொல்கிறீர்கள் குருவே?"

"இந்த கோமேதக நாட்டு மன்னன் ஒரு கொடுங்கோலன். மழை இல்லாவிட்டால் பயிர்கள் எப்படி வாடுமோ, அதுபோல் இந்த நாட்டு மக்கள் இந்த மன்னனின் அடக்குமுறை ஆட்சியின் கீழ் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள்."

"ஆனால் மக்கள் மன்னரைப் புகழ்ந்து பேசுகிறார்களே!"

"இரண்டு விதமான மனிதர்கள் அப்படிப் புகழ்வார்கள். கண்மூடித்தனமாக இந்த அரசனை ஆதரிப்போர் ஒருவகை. அரசனைப் புகழ்ந்து பேசாவிட்டால் தங்களை ராஜத்துரோகி என்று சொல்லிப் பாதாளச் சிறையில் அடைத்து விடுவார்களோ என்ற அச்சத்தினால் அரசனைப் புகழ்வோர் ஒருவகை. இந்த இரண்டிலும் சேராமல் அரசனின் கொடுங்கோலைப் பார்த்து மனம் வருந்தி இது முடியும் நாள் எப்போது வரும் என்று மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயி போல் காத்திருக்கும் மூன்றாவது வகை மனிதர்களும் இருப்பார்கள். அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாததால் அவர்களை நம்மால் இனம் காண முடியாது" என்றார் குரு பெருமூச்சு விட்டபடி.

"இப்போது நாம் என்ன செய்வது குருவே!"

"மரகத நாட்டில் மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்திப்பது போல் இந்த கோமேதக நாட்டில் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்து நல்லாட்சி மலர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். நம்மால் வேறென்ன செய்ய முடியும்?" என்றார் குரு.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை

குறள் 557:
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

பொருள்:
மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...