Monday, March 7, 2022

554. கருத்துக் கணிப்புகள்!

ஆளும் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 "நம் கட்சி ஆட்சிக்கு வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. அரசியல் நேர்மை, திறமையான நிர்வாகம், மக்களுக்கு அதிகாரம் என்கிற மூணு விஷயங்களை வாக்குறுதியாக் கொடுத்துத்தான் நாம் பதவிக்கு வந்தோம்" என்றார் சியாம பிரசாத்.

"யார் இல்லேன்னு சொன்னாங்க?" என்றார் கட்சித் தலைவர் அமர்நாத்.

"ஆனா, நம் ஆட்சி அப்படியா நடக்குது?" என்றார் சியாம பிரசாத்.

"அவர் பிரதமரைத் தாக்கிப் பேசறாரு. இதை அனுமதிக்கக் கூடாது!" என்று உரத்த குரலில் கூறினார் பிரதமரின் ஆதரவாளர் ஒருவர்.

"இல்ல. அவர் பேசட்டும்" என்ற பிரதமர் மாகாதேவ், "சியாம பிரசாத்! நீங்க கட்சியில ஒரு மூத்த உறுப்பினர். உங்க கருத்துக்களைக் கேட்டு, என்னை நான் திருத்திக்கத் தயாரா இருக்கேன். என்னோட ஆட்சியில என்ன குறைகள் இருக்குங்கறதைச் சொல்லுங்க!" என்றார் பணிவான குரலில்.

சியாம பிரசாதின் அருகில் அமர்ந்திருந்த அவர் நண்பர் காளிதாஸ், "இது ஒரு டிராப். உங்களைப் பேசவிட்டு, அதையே காரணமா வச்சு, உங்க மேல நடவடிக்கை எடுக்கப் பாக்கறாங்க. இதில சிக்கிக்காதீங்க!" என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தார்.

"அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை!" என்று அவரிடம் கூறிய சியாம பிரசாத், பிரதமரைப் பார்த்து, "மகாதேவ்! நீங்க என்ன செய்யறீங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? நம் கட்சியோட மூணு கோட்பாடுகளுக்கும் எதிராதான் உங்க ஆட்சி நடக்குது. ஊழல் அதிகமா இருக்கு, வெளிப்படைத் தன்மை இல்லை. சாதாரண மக்களை பாதிக்கற மாதிரி சட்டங்களைப் போடறீங்க.  அரசாங்கத்துக்கு எதிராப் போராட்டம் நடத்தறவங்க, உங்களை விமரிசனம் பண்றவங்க மேல எல்லாம் அடக்குமுறையை ஏவி விடறீங்க. ஒரு சில தொழிலதிபர்களுக்கு மட்டும் பலன் கிடைக்கிற மாதிரி பல விஷயங்களை நீங்க செய்யறதால, நம் நாட்டுப் பொருளாதாரமே பெரிய ஆபத்தில இருக்கு" என்றார்.

"நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க, சியாம பிரசாத்? மகாதேவ் மாதிரி ஒரு தலைவர் இதுவரையிலும் எந்த நாட்டிலேயும் இருந்ததில்லைன்னு எல்லா மீடியாவும் சொல்றாங்க. கருத்துக் கணிப்புகள் எல்லாம், 80 சதவீத மக்கள் நம் பிரதமரை ஆதரிக்கிறதா சொல்லுது. அடுத்த தேர்தல்ல மட்டும் இல்ல, அதுக்கப்பறம் வரப் போகிற எல்லாத் தேர்தல்களிலேயும் நாம்தான் வெற்றி பெறப் போறோம், மகாதேவ்தான் நம் நாட்டோட நிரந்தரப் பிரதமர்னெல்லாம் தினமும் பத்திரிகைகள்ள எழுதறாங்களே, அதையெல்லாம் நீங்க படிக்கிறதில்லையா?" என்றார் கட்சித் தலைவர் அமர்நாத்.

"அரசாங்கத்தை விமரிசனம் பண்றவங்களையெல்லாம் தேசவிரோதச் செயல்கள்ள ஈடுபடறதா சொல்லிச் சிறைக்கு அனுப்பிட்டு, அரசாங்கத்துக்குத் துதி பாடற மீடியா மட்டுமே இருக்க முடியுங்கற நிலைமையை உருவாக்கி இருக்கீங்க. அவங்களோட போலியான புகழ்ச்சியில மயங்கிக் கிடக்கிறீங்க! உண்மை நிலவரம் என்னங்கறது உங்களுக்கே தெரியாது!" என்றார் சியாம பிரசாத்.

"சியாம பிரசாத்! நம் எதிரிகள் சொல்றதையெல்லாம் நீங்க சொல்றதைக் கேக்க எனக்கு வருத்தமா இருக்கு. உங்க கருத்துக்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன். ஆனா, இந்தக் குழுவில ஒத்தர் கூட உங்க கருத்தை ஏத்துக்காததால, நாம மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசலாம்னு நினைக்கிறேன்!" என்றார் மகாதேவ்.

டுத்த நாள், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக சியாம பிரசாத் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அன்றே, அவர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. ஆனால், சோதனையில் எதுவும் சிக்கவில்லை. 

சியாம பிரசாத் சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தை விமரிசித்து வந்தார். பதிலுக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர் மீது பல அவதூறுகளைக் கூறி, அவரைத் தரக் குறைவாக விமரிசித்தனர்.

அடுத்த மூன்று ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் சரிந்து கொண்டே வந்தது. ஆயினும் அரசாங்கத்தின் வருடாந்தர நிதிநிலை அறிக்கைகளில், நாட்டின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி பெற்று வருவதான தோற்றம் தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது.

டுத்த தேர்தல் நெருங்கி வந்தது. கருத்துக் கணிப்புகள் பிரதமர் மகாதேவின் மக்கள் ஜனநாயகக் கட்சி முந்தைய தேர்தலில் பெற்ற வெற்றியை விடப் பெரிய வெற்றியைப் பெறும் என்று கூறின.

தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளும், ஆளும் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று அடித்துக் கூறின.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது, யாருமே எதிர்பாராத வகையில், மக்கள் ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வி அடைந்திருந்தது. பிரதமர் மகாதேவே, அவருடைய தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தேர்தலுக்குப் பின் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம், நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதையும், முந்தைய அரசு பொருளாதார நிலை பற்றிப் பொய்யான தகவல்களைக் கொடுத்திருப்பதையும், புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்தியது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை

குறள் 554:
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

பொருள்:
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒருசேர இழந்து விடுவான்.

Read 'Opinion Polls' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...