Tuesday, March 1, 2022

551. மூன்று தீர்ப்புகள்

"இந்தக் கொடுங்கோல் ஆட்சியில, பத்திரிகையாளர்களைக் கைது செஞ்சு சிறையில அடைக்கிறது வழக்கமாப் போச்சு. இதுக்கு பயந்தே, பல பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமரிசனம் செய்யறதை நிறுத்திட்டாங்க. ஆனா, இந்த மூர்த்தி இப்படி மாட்டிக்கிட்டாரேன்னு நினைச்சாதான் வருத்தமா இருக்கு!"

"என்ன செய்யறது? பெரும்பாலான பத்திரிகையாளர்கள், அரசாங்கம் செய்யற அக்கிரமங்களையெல்லாம், ஏதோ நாட்டுக்கான நல்ல திட்டங்கள் மாதிரி கூசாம புகழ்ந்து, அரசாங்கத்துக்கிட்ட நல்ல பேரு வாங்கிக்கிட்டு, தங்களுக்கு வேண்டிய சலுகைகளையும் வாங்கிக்கறாங்க. 

"உன்னை மாதிரியும், என்னை மாதிரியும் சில பேர் அரசாங்கத்துக்கு வால் பிடிக்காம, அதே சமயம் அரசாங்கத்தைக் குறையும் சொல்லாம, கம்பி மேல நடக்கற மாதிரி கவனமா எழுதி ஒரு மாதிரி சமாளிச்சுக்கிட்டிருக்கோம். 

"ஆனா, மூர்த்தி மாதிரி சில பேர் இந்த அரசாங்கத்தோட தவறுகளை தைரியமா தட்டிக் கேக்கறாங்க. அவங்கள்ளாம் ஏதோ தேச விரோதிகள் மாதிரி சித்தரிக்கப்பட்டு, ஏதோ ஒரு காரணத்துக்காக் கைது செய்யப்பட்டு, மாசக்கணக்கா சிறையில இருந்துட்டு வராங்க.

"நம்மால என்ன செய்ய முடியும், இப்படித் தனியா புலம்பறதைத் தவிர? அதைக் கூட, யார் காதிலேயாவது விழுந்துடுமோன்னு பயந்து பயந்து செய்ய வேண்டி இருக்கு!"

"மூர்த்தியோட ஜாமீன் மனு மேல நாளைக்கு தீர்ப்பு சொல்லப் போறாங்க. என்ன ஆகுதோ, பார்க்கலாம்!"

"நாளைக்கு இன்னொரு வழக்கிலேயும் தீர்ப்பு வரப் போகுது, தெரியுமா?"

"அந்த முக்கியமான மனிதர் செஞ்ச ஊழலைப் பத்தி விசாரிக்கணும்னு ஒத்தர் பொதுநல வழக்கு போட்டிருக்காரே, அந்த வழக்குதானே?"

"ஆமாம்!"

"அதில என்ன தீர்ப்பு வரும்னு தெரியாதா? அநேகமா, தீர்ப்பு வந்த சில நாள் கழிச்சு. அந்தப் பொதுநல வழக்கு போட்டவரே ஏதாவது ஒரு  காரணத்துக்காகக் கைது செய்யப்படுவார்னு நினைக்கிறேன்!"

"ஆமாம். அப்படி நடக்க வாய்ப்பு இருக்கு. 'பேய் அரசாட்சி செய்தால்'னு பாரதியார் பாடினதை நாம நேரடியா அனுபவிச்சுக்கிட்டிருக்கோம். அடுத்த தேர்தல்ல ஏதாவது அதிசயம் நடந்தாத்தான் உண்டு!"

"சரி. நாளைக்கு சாயந்திரம் மறுபடி சந்திக்கலாம்."

"ரெண்டு தீர்ப்புமே வந்துடுச்சே! நாம எதிர்பார்த்த மாதிரிதான் நடந்திருக்கு!"

"ஆமாம். முக்கியமான நபர் மேல ஊழல் வழக்கு தொடுக்க முகாந்தரம் எதுவும் இல்லேன்னு நீதிபதி சொல்லிட்டாரு."

"அது அப்படித்தானே வந்திருக்க முடியும்? ஆனா, மூர்த்திக்கு ஜாமீன் இல்லேன்னு சொல்லிட்டாங்களே, அதுதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு."

"ஆமாம், மூர்த்தி ஜாமீன்ல வெளியில வந்தா, நாட்டைப் பிளவு படுத்தற வேலைகள்ள ஈடுபடுவார்னு அரசாங்க வக்கீல் சொன்னதை நீதிபதி ஏத்துக்கிட்டாரு."

"இந்த ரெண்டு தீர்ப்பைத் தவிர, மூணாவதா ஒரு தீர்ப்பு வந்திருக்கு, பாத்தியா?"

"அது என்ன தீரப்பு?"

"கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒத்தனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்காங்க."

"அடப்பாவமே!"

"கொலைகாரனுக்குப் போய்ப் பரிதாபப்படறியே!"

"பரிதாபப்படல. கொலையை விடக் கொடுமையான விஷயங்கள்ளாம் இங்கே நடந்துக்கிட்டிருக்கு. அதைச் செய்யறவங்களுக்கு தண்டனை இல்லை, பாதிக்கப்பட்ட மூர்த்தி போன்றவர்களுக்கும் நிவாரணம் இல்லை! அதை நினைச்சுத்தான் அப்படிச் சொன்னேன்."

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை

குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

பொருள்:
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

Read 'Three Judgements' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...