Thursday, November 25, 2021

533. கண்டு பிடித்தது எப்படி?

"சில வருஷங்களுக்கு முன்னால நடந்தது இது. ஒரு அரசியல் கட்சியில ஒரு தலைவர் கீழ்மட்டத்திலேந்து வேகமா முன்னேறி மேல வந்துக்கிட்டிருந்தாரு. அந்தக் கட்சியோட மூத்த தலைவர் திடீர்னு இறந்ததும் அவர் கட்சித் தலைவராகவும் ஆயிட்டாரு. அப்ப அந்தக் கட்சி ஆட்சியில இல்ல, ஆனா அடுத்த தேர்தல்ல அவங்கதான் ஆட்சிக்கு வருவாங்கன்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. அவர்தான் அடுத்த முதல்வர்னு எதிர்பார்க்கப்பட்ட நிலையில தேர்தல்ல அவர் கட்சி ஜெயிச்சுடுச்சு. ஆனா அவரால முதல்வர் ஆக முடியல!"

"ஏன்?"

"ஏன்னா அவர் போட்டியிட்ட தொகுதியில அவர் தோத்துட்டாரு, அதுவும் அதிக வாக்கு வித்தியாசத்தில மோசமாத் தோத்துட்டாரு."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன? அதோட அவர் அரசியல் வாழ்க்கை முடிஞ்சுடுச்சு!"

"இன்டரஸ்டிங்! அவர் தோத்ததுக்கு  என்ன காரணம்னு நான் கேட்க மாட்டேன், ஏன்னா அது எனக்குத் தெரியும்!"

"உனக்கு எப்படித் தெரியும்? நான் குறிப்பிட்ட தலைவர் யார்னே உனக்குத் தெரியாதே! இது எந்த மாநிலத்தில நடந்ததுன்னும் உனக்குத் தெரியாது. உனக்கு அரசியல்ல ஆர்வமே கிடையாதே!"

"அவர் யார்னு எனக்குத் தெரியாதுதான். ஆனலும் நான் சொல்றேன். சரியான்னு பாரு. அவர் வேகமா முன்னேறி வந்ததுக்கு அவருக்குப் பல கட்டங்கள்ள பல பேர் உதவி செஞ்சிருப்பாங்க. ஆனா வெற்றியோட மதர்ப்பில அவர் அவங்களையும் மறந்திருப்பாரு. அவங்க செஞ்ச உதவிகளையும் மறந்திருப்பாரு. அதனாலதான் அவர் தேர்தல்ல போட்டி போட்டப்ப கட்சிக்காரங்க அவருக்காக ஆர்வமா வேலை செஞ்சிருக்க மாட்டாங்க. அப்படித்தானே?"

"அடப்பாவி! நாங்கள்ளாம் களத்துக்குப் போய் ஆய்வு பண்ணி கண்டு பிடிச்சதை கண்ணால பார்த்த மாதிரி சொல்றியே! எப்படி?"

"உன்னை மாதிரி நானும் ஒரு பத்திரிகையாளன்தானே! நீ அரசியல்ல கவனம் செலுத்தற. நான் தொழில், வியாபாரம் இவற்றில கவனம் செலுத்தறேன். இதே மாதிரி ஒரு தொழிலதிபருக்கு நடந்தது. அவர் சின்னதா ஒரு தொழிலை ஆரம்பிச்சு முன்னேறி பெரிய தொழிலதிபரா ஆனவர். ஆனா அவருக்கு ஆர்டர் கொடுத்து, கடனுக்குப் பொருள்கள் கொடுத்து, வங்கியில கடன் வாங்க உதவி செஞ்சு இது மாதிரி பல பேர் பல விதங்கள்ள உதவி செஞ்சிருக்காங்க. ஆனா அவர் அதையெல்லாம் நினைச்சுப் பாக்கல. தன்னோட வெற்றியோட மமதையில இருந்தாரு. தனக்கு உதவி செஞ்சவங்ககிட்ட அவர் நன்றியோடயும் இல்ல, அவங்களோட நெருக்கமாகவும் இல்ல. அதனால அவருக்கு நண்பர்களே இல்லாம போயிட்டாங்க. பின்னால அவருக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டப்ப அவரால யார்கிட்டேயும் போய் உதவி கேட்கக் கூட முடியல. பரமபத விளையாட்டில ஏணியில ஏறி பாம்பில சறுக்கற மாதிரி சறுக்கிக் கீழே விழுந்துட்டாரு. அந்த உதாரணத்தை வச்சுத்தான் நீ குறிப்பிட்ட தலைவர் விஷயத்தில என்ன நடந்திருக்கும்னு ஊகிச்சேன்."

"ஆச்சரியமா இருக்கே! துறைகள் வெவ்வேறா இருந்தாலும் நிகழ்வுகள் ஒரே மாதிரி இருக்கே!"

"வேற பல துறைகளை நெருக்கமா ஆய்வு செய்யறவங்களைக் கேட்டாலும் அவங்ககிட்டேயும் இதே மாதிரி உதாரணங்கள் கிடைக்கலாம். வாழ்க்கையோட உண்மைகள் எல்லா இடங்களிலேயும் ஒரே மாதிரிதானே இருக்கணும்!"

"பத்திரிகையாளனா இருந்து இப்ப ஒரு தத்துவஞானியாவும் ஆயிட்ட போல இருக்கே!"

இருவரும் சிரித்தனர்,

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 533:
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு..

பொருள்:
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை. இது உலகில் எல்லாத் துறைகளிலும் உள்ள அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...