Wednesday, September 1, 2021

508. தந்தையின் அடிச்சுவட்டில்...

"நீங்க ஓய்வு பெறப் போறது எங்களுக்கெல்லாம் ரொம்ப வருத்தமா இருக்கு, சார்!" என்றாள் பொன்மொழி.

"அம்மா! பொதுவா, அறுபது வயசில ஓய்வு பெறணும். எனக்கு எழுபது வயசாகுது. இப்ப கூட நான் ஓய்வு பெறாட்டா எப்படி?" என்றார் ஆதிகேசவன், சிரித்தபடியே.

"எழுபத்தஞ்சு வயசாகியும் ஒத்தர் இன்னும் ஒட்டிக்கிட்டிருக்காரே! அவரு போனா, நாங்க சந்தோஷப்படுவோம்!" என்றான் நாதன்.

"அவர் போறேன்னாலும், நம்ம முதலாளி போக விட மாட்டாரே!" என்றான் வேலு.

ஆதிகேசவன் மௌனமாக இருந்தார்.

"சார்! உங்களுக்குத் தெரியாதது இல்ல. இன்னிக்கு சாந்தகுமார் சார் லீவுங்கறதால நாங்க தைரியமாப் பேசலாம். முதலாளியும் இன்னும் ஆஃபீசுக்கு வரல. சாந்தகுமார் சார் மானேஜர்னுதான் பேரு. ஒரு சினிமாவில நாகேஷ் மானேஜர்ங்கறதை வாய் தவறி டேமேஜர்னு சொல்லுவாரு. அது இவருக்கு ரொம்பப் பொருத்தம்! அவரு கம்பெனியையும் நாசம் பண்ணிக்கிட்டு எங்க எல்லோரையும் கஷ்டப்படுத்திக்கிட்டும் இருக்காரு. 

"அவரோட செயல்பாடுகளால நம்ம கம்பெனிக்கு எத்தனையோ பிரச்னை வந்திருக்கு. ஆனா, முதலாளி அவர் சொல்றதைத்தான் வேதவாக்கா நினைச்சுச் செயல்படறாரு. அவரோட முடிவுகளால வர பிரச்னைகளையெல்லாம் நாங்க எதிர்கொள்ள வேண்டி இருக்கு. முதலாளிக்கு இது ஏன் புரியலேன்னு தெரியல" என்றான் மூர்த்தி என்ற இன்னொரு ஊழியன்.

"சார்! நீங்கதான் எங்களுக்குப் பெரிய ஆதரவா இருந்தீங்க. சாந்தகுமார் சாரோட தான்தோன்றித்தனமான செயல்களிலேருந்து, எங்களைப் பெரிய அளவில காப்பாத்திக்கிட்டிருந்தீங்க. முதலாளியும் உங்க பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பாரு" என்றாள் பொன்மொழி.

"இல்லம்மா. நான் சொன்னா, முதலாளி பொறுமையாக் கேட்டுப்பாரு. ஆனா, சாந்தகுமார் சொன்னபடிதான் நடந்துப்பாரு. என் வயசுக்கு மரியாதை கொடுத்தாரு, என் பேச்சுக்கு இல்லை!" என்றார் ஆதிகேசவன்.

"அது ஏன் சார் அப்படி? சாந்தகுமார் சாருக்கு முதலாளி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறாரு? அவருக்கு அதிகமா விஷயமும் தெரியாது, அனுபவமும் கிடையாது" என்றான் நாதன்.

"அவர் அனுபவம் முழுக்க நம்ம கம்பெனியிலதான். ஆனா, இங்கேயும் அவர் எதுவும் கத்துக்கிட்டதாத் தெரியல!" என்றான் வேலு.

"சொல்லுங்க சார்! அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? உங்களுக்கு இருக்கிற அறிவு, அனுபவத்தில கால் பங்கு கூட அவருக்குக் கிடையாது!" என்றாள் பொன்மொழி, விடாமல்.

"அப்படியெல்லாம் சொல்லக் கூடாது அம்மா!" என்ற ஆதிகேசவன், சற்றுத் தயங்கி விட்டு, தொடர்ந்தார்.

"இந்த கம்பெனியை ஆரம்பிச்சவர் நம்ம முதலாளியோட தாத்தா. அவர் ரொம்பத் திறமையானவர்னு சொல்லுவாங்க. குறுகிய காலத்திலேயே, அவர் கம்பெனியை நல்லா வளத்துட்டாரு. 

"அவர் காலமானப்பறம், அவரோட பிள்ளை - நம் முதலாளியோட அப்பா - பொறுப்பேத்துக்கிட்டாரு. அப்ப அவர் இளைஞர். சாந்தகுமார் அவரோட நண்பர். அவரை கம்பெனியில சேத்துக்கிட்டாரு. கொஞ்ச வருஷம் கழிச்சு, நானும் இங்கே வந்து சேர்ந்தேன். 

"சாந்தகுமாருக்கு தொழிலைப் பத்தின அறிவோ, அனுபவமோ, கத்துக்கற திறமையோ இல்லை. ஆனா, அவர் முதலாளியோட நண்பர்ங்கறதால, அவர் வச்சதுதான் சட்டமா இருந்தது. அதனால ஏற்பட்ட பிரச்னைகளைப் பத்தி, என்னை மாதிரி சில பேர் முதலாளிகிட்ட பேசினோம். ஆனா, அவர் அதையெல்லாம் காதுல போட்டுக்கல.

"அவர் சீக்கிரமே காலமாயிட்டாரு. அவர் பையனான நம்ம முதலாளியும், சாந்தகுமாரை தன் அப்பாவோட நண்பர், வழிகாட்டின்னு நம்பிக்கிட்டு, அவர் சொல்றபடியே நடந்துக்கறாரு. இதனால, இந்த கம்பெனி எத்தனை காலத்துக்கு, எந்தவிதமான பாதிப்புக்கெல்லாம் ஆளாகப் போகுதோ!"  

"குட்டி குலைச்சு தாய் தலையில வச்ச மாதிரின்னு சொல்லுவாங்க. இங்க, தலைகீழா நடந்திருக்கே!" என்றான் வேலு.

"ஒத்தர் செஞ்ச தவறு அவரோட அடுத்த தலைமுறையையும் பாதிக்குதே!" என்றான் நாதன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 51
 தெரிந்து தெளிதல்

குறள் 508:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

பொருள்:
ஆராய்ந்து பார்க்காமல், ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து அமர்த்திக் கொண்டால், அவரால் தனக்கு மட்டுமின்றித் தன் வருங்காலச் சந்ததியினருக்கும் நீங்காத துன்பம் விளையும்.

Read 'In the Footsteps of His Father' the English version of this story by the same author.   

 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...