Sunday, June 13, 2021

491. போருக்குத் தயாரா?

மகுட நாட்டு மன்னன் பரகேசரி கூட்டிய ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் கண்ணபிரான், படைத்தலைவர் தடந்தோளன் ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்டனர்.

"நம் நாட்டின் வட எல்லையில் இருக்கும் முப்பது கிராமங்களை முல்லை நாடு ஆக்கிரமித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அவற்றை மீட்க இப்போது நமக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இப்போது அவர்கள் தங்கள் கிழக்கு எல்லையில் இருக்கும் பாரிஜாத நாட்டுடன் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது நாம் போய்த் தாக்கினால், அவர்களால் நம்மை எதிர்கொள்ள முடியாது. என்ன சொல்கிறீர்கள்?" என்றார் மன்னர்.

"தாக்கலாம் மன்னவா! ஆனால் நம் வட எல்லைப் பகுதி பெரும்பாலும் மலைப்பாங்கானது. நாம் கீழிருந்து மேலே ஏற வேண்டும். அவர்கள் படைகள் மேட்டில் இருப்பதால், நம் படைகளைப் பார்ப்பதும், தாக்குவதும் அவர்களுக்கு எளிதாக இருக்கும். அதனால், தாக்குதல் நடத்துவதற்குச் சரியான இடத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார் படைத்தலைவர் தடந்தோளன்.

"அப்படிப்பட்ட இடம் ஏதாவது இருக்கிறதா?" என்றார் மன்னர்.

படைத்தலைவர் அமைதியாக இருந்தார்.

அரசர் அமைச்சரைப் பார்த்தார்.

"மன்னா! நம் எல்லையிலிருந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் கடினம்" என்றார் அமைச்சர், தயக்கத்துடன்.

"முடியாது என்று சொல்வதற்காகவா உங்கள் இருவரையும் கூப்பிட்டேன்?" என்றார் மன்னர், சீற்றத்துடன். 

தொடர்ந்து, "இப்போது முல்லை நாட்டின் கிழக்கு எல்லையில் போர் நடக்கும்போது, அவர்கள் படைகள் எல்லாம் அவர்கள் கிழக்கு எல்லையில்தான் இருக்கும். அவர்கள் தெற்கு எல்லையில், அதாவது அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் நம் நாட்டின் பகுதியில் அதிகப் படைகள் இருக்காது. இப்போது நாம் தாக்குதல் நடத்தாவிட்டால், பின் எப்போது நாம் இழந்த பகுதிகளை எப்போது மீட்பது?" என்றார் அரசர், ஆற்றாமையுடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! எதிரியை நாம் சுலபமாக எடை போட்டு விடமுடியாது. அவர்களுடைய திட்டங்கள் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும். இந்தக் கூட்டத்துக்கு ஒரு முக்கியமான நபரைத் தாங்கள் அழைக்கவில்லை. அவரிடம் தகவல் பெறாமல் நாம் எந்த ஒரு முடிவும் எடுப்பது பொருத்தமாக இருக்காது" என்றார் அமைச்சர்.

சற்று யோசித்த அரசர், "ஒற்றர்படைத் தலைவரைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரி, அவர் அரண்மனையில் இருந்தால் உடனே வரச் சொல்லுங்கள்!" என்றார்.

"இல்லை அரசே! எதிரி நாட்டிலுள்ள நம் ஒற்றர்களிடமிருந்து தொடர்ந்து தகவல் பெறும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவர் இப்போது அரண்மனையில் இல்லை. எல்லாத் தகவல்களையும் பெற்று, இன்னும் இரண்டு நாட்களில் அரண்மனைக்குத் திரும்புவதாக அவர் என்னிடம் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார். அவர் திரும்ப வந்ததும், நாம் மீண்டும் கூடி ஆலோசிக்கலாம் என்பது என் விண்ணப்பம்" என்றார் அமைச்சர்.

அரசர் மௌனமாகத் தலையாட்டினார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு நடந்த கூட்டத்தில், ஒற்றர்படைத் தலைவரும் இருந்தார். தனக்குக் கிடைத்த தகவல்களை, அவர் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

"ஒற்றர்படைத் தலைவர் தெரிவித்த தகவல்களின்படி, முல்லை நாட்டு மன்னன் பாரிஜாத நாட்டுடன் சமாதானம் செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். அத்துடன், அவன் ஆக்கிரமித்துள்ள நம் நாட்டின் பகுதிகளுக்குள் பரவலாகப் பல இடங்களில் அவன் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நாம் நம் எல்லையிலிருந்து தாக்குதல் நடத்தினால், அவர்கள் அனைவரும் எல்லைப் பகுதிக்கு வந்து நம்மைத் தாக்குவார்கள். என்ன செய்யலாம், சொல்லுங்கள்?" என்றார் அரசர், அமைச்சரைப் பார்த்து. இப்போது அவர் குரலில் சோர்வும், இயலாமையும் தென்பட்டன.

"எனக்கு ஒரு யோசனை இருக்கிறது, அரசே! முல்லை நாட்டின் மேற்குப் பகுதியில் கோரையாறு ஓடுகிறது. அந்த ஆறு முல்லை நாட்டுக்கும் செண்பக நாட்டுக்கும் பொதுவானது. அங்கே முல்லை நாட்டின் படைகள் அதிகம் இல்லை. சில வீரர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அதை நம் ஒற்றர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். செண்பக நாடு நம் நட்பு நாடுதான். முல்லை நாட்டுடன் அவர்களுக்குப் பகை இல்லாவிட்டாலும், நட்பும் இல்லை. எனவே, செண்பக நாட்டு மன்னரின் அனுமதியுடன், நம் படை விரர்கள் படகுகளில் சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட நம் நாட்டுப் பகுதிக்குள் மேற்கு எல்லை வழியே நுழைந்து, அங்கிருக்கும் முல்லை நாட்டுப் படைகளை வளைத்துக் கொண்டால், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அதே சமயம், தெற்கிலிருந்தும் நம் படைகள் முன்னேறலாம். படைத் தலைவரிடமும் இது பற்றி ஆலோசித்தேன். அவரும் இது சாத்தியம்தான் என்றுதான் கூறுகிறார்" என்றார் அமைச்சர்.

அரசர் உற்சாகம் அடைந்தவராக, "அருமையான யோசனை அமைச்சரே! அன்று நீங்கள் சில தடைகளைச் சொல்லி விவாதத்தைத் தள்ளிப் போட்டபோது, உங்கள் மீது எனக்கு அதிருப்தி ஏற்பட்டது உண்மைதான். உங்கள் சிந்தனை இப்போதுதான் எனக்குப் புரிகிறது. தாக்குதலுக்குச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும், எதிரியைக் குறைத்து மதிப்பிடாமல், அவர்கள் நிலையை அறிந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு கூறப்பட்ட உங்கள் யோசனை பாராட்டுக்குரியது" என்றார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல் 
குறள் 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

பொருள்:
செய்வதற்கு ஏற்ற இடத்தை முழுமையாகக் கண்டறிவதற்கு முன், எந்தச் செயலையும் தொடங்கக் கூடாது, பகைவரை இகழ்வாக நினைக்கவும் (குறைத்து மதிப்பிடவும்) கூடாது.

Read 'The Minister's Reluctance' the English version of this story by the same author.

                  குறள் 490                  
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Saturday, June 12, 2021

490. பாலியல் புகார்!

சீனியர் மானேஜர் சிவசங்கர் மீது அவனுடைய அந்தரங்க உதவியாளர் கல்பனா கொடுத்திருந்த பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க அந்த நிறுவனத்தின் விசாகா கமிட்டியின் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

"அது என்னடா விசாகா கமிட்டி?" என்றான் சிவசங்கர், அந்த நிறுவனத்தில் அவன் நெருக்கமான நண்பனாக இருந்த சங்கமேஸ்வரனிடம். 

"இப்பல்லாம் எல்லா நிறுவனங்களிலேயும் பாலியல் புகார்களை விசாரிக்க அப்படி ஒரு கமிட்டியை அமைக்கணுங்கறது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. ஆமாம், உன் மேலதான் புகார். ஆனா நீ கொஞ்சம் கூடக் கவலையில்லாம இருக்க! தப்பு பண்ணலேங்கறதால இந்த தைரியமா, இல்லை...?" என்றான் சங்கமேஸ்வரன்.

"நான் எந்தத் தப்பும் பண்ணல. கல்பனாவோட வேலை எனக்குத் திருப்திகரமா இல்லைன்னு நான் ரிபோர்ட் எழுதிட்டேன். அதனால அவளுக்கு ப்ரமோஷன் கிடைக்கல. அவளோட ஜூனியருக்குக் கொடுத்துட்டாங்க. அந்தக் கோபத்தில என் மேல அவ புகார் பண்ணி இருக்கா!"

"நான் நம்பறேன். ஆனா கமிட்டியில இருக்கறவங்க அவ சொல்றதை நம்பினா...? நீ ஜாக்கிரதையா இருந்துக்க."

"முதல்ல அவகிட்ட எந்த ஆதாரமும் இல்ல!" என்று ஆரம்பித்த சிவசங்கர், "அதாவது நான் தப்பு பண்ணி இருந்தாத்தானே ஆதாரம் இருக்கும்? அதோட இந்த கமிட்டியோட தலைவரா இருக்கற மஞ்சுளா இங்கே வேலைக்கு சேர்ந்திலேந்து, பத்து வருஷமா எனக்குக் கீழதான் வேலை செய்யறா. இப்ப ப்ரமோஷன் வாங்கி என்னை மாதிரி சீனியர் மானேஜரா ஆயிட்டாலும் அவளுக்கு வேலை கத்துக் கொடுத்தது நான்தான். அவ எங்கிட்ட ரொம்ப விசுவாசமா இருக்கறவ. அதனால கமிட்டியில எனக்கு எதிரா எதுவும் நடக்காது" என்றான் சிவசங்கர் உறுதியுடன்.

னால், கமிட்டி சிவசங்கர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக முடிவு செய்து, அவனை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

கமிட்டியின் முடிவு தெரிந்ததும், சிவசங்கர் மஞ்சுளாவைச் சந்தித்தான்.

"என்ன மஞ்சுளா இப்படிப் பண்ணிட்ட? என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா?" என்றான் சிவசங்கர்.

"உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்கறது உனக்கும் தெரியுமே!" என்றாள் மஞ்சுளா, சிரித்துக் கொண்டு.

பத்து வருடங்களாகத் தன்னை மரியாதையுடன் விளித்து வந்தவள் இப்போது தன்னை ஒருமையில் விளிப்பதை சிவசங்கர் கவனித்தான்.

"நீ வேலைக்குச் சேர்ந்த புதுசில ஒரு தடவை உங்கிட்ட தப்பா நடந்துக்கிட்டது உண்மைதான். அதுக்கப்பறம் அதை மறந்துட்டு, இத்தனை வருஷமா நீ எங்கிட்ட சகஜமாத்தானே நடந்துக்கிட்டிருக்க?"

"மறக்கலடா! மனசுக்குள்ள கருவிக்கிட்டுத்தான் இருந்தேன். அப்பவே உன் மேல நான் புகார் பண்ணலாம்னு நினைச்சப்ப, பழைய ஜி எம் உனக்கு உறவுக்காரர்ங்கறதால, எதுவும் நடக்காது, புகார் கொடுக்கறவங்களுக்குத்தான் பிரச்னை வரும்னு ஒரு தோழி எங்கிட்ட சொன்னா. அதுக்கு முன்னால உன் மேல புகார் கொடுத்தவங்க சில பேர் வேலையில தொடர முடியாம வேலையை விட்டுப் போயிட்டதாகவும் அவ சொன்னா. அதனால பொறுமையா இருந்தேன். 

"உனக்குக் கீழே நான் வேலை செய்ய வேண்டி இருந்ததால, உங்கிட்ட சுமுகமா இருந்து தொலைச்சேன். ஆனா நீ மறுபடி எங்கிட்ட வாலாட்ட முடியாத மாதிரி எச்சரிக்கையா இருந்தேன். ரெண்டு மூணு மாசம் முன்னாலதான் பழைய ஜி எம் ரிடயர் ஆனாரு. இப்ப இருக்கற ஜி எம்  நேர்மையானவர். 

"கல்பனாவுக்கு நீ தொந்தரவு கொடுக்கறதைப் பத்தி அவ எங்கிட்ட சொல்லி அழுதப்ப, நான்தான் அவளுக்கு தைரியம் சொன்னேன். நீ அவகிட்ட மட்டமா பேசறப்ப, அதை அவ மொபைல்ல ரகசியமா ரிகார்ட் பண்ணிட்டு அப்புறம் புகார் கொடுக்கச் சொன்னேன். அவ அது மாதிரியே செஞ்சா. 

"வலுவான ஆதாரம் இருந்ததால, கமிட்டியில எல்லாருமே நீ குற்றம் செஞ்சவன்னு முடிவு பண்ணிட்டாங்க. அன்னிக்கு நீ எங்கிட்ட தப்பா நடந்துக்கிட்டபோது, நான் அடங்கிப் போக வேண்டி இருந்தது. பத்து வருஷமா நான் காத்துக்கிட்டிருந்தது வீண் போகல!" என்றாள் மஞ்சுளா 

சிவசங்கர் தயக்கத்துடன் மஞ்சுளாவின் முகத்தைப் பார்த்தபோது, பத்து வருடங்கள் முன்பு அவள் பட்ட காயத்தின் வலி அவள் கண்களில் தெரிந்ததை உணர்ந்தான்.

பொட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல்  
குறள் 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து..

பொருள்:
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கைப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்க்கும்போது, அதன் குத்தைப் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

Read 'A Long Wait for Revenge' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Tuesday, June 1, 2021

489. புதிய முதல்வர்

முதல்வர் சாந்தலிங்கத்தின் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வந்து அவர் முதல்வர் பதவியை இழந்ததும், அவர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முருகனைப் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர்

கட்சியில் தான் ஒருவர்தான் தலைவர், மற்ற அனைவரும் தனக்கு அடிமைகள் என்ற வகையில்தான் சாந்தலிங்கம் தன் கட்சியை நடத்தி வந்தார்.  

தீர்ப்பினால் சாந்தலிங்கம் பதவி இழந்ததும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவராக முருகனைத் தேர்ந்தெடுத்தது சாந்தலிங்கத்தின் விருப்பத்தின்படிதான். 

சமீபத்தில்தான் அமைச்சராக்கப்பட்டிருந்த, அமைச்சரவையிலும் சரி, கட்சியிலும் சரி ஜூனியராக இருந்த, மக்களால் அதிகம் அறியப்படாத முருகன் பெயரை சாந்தலிங்கம் அறிவித்தது, தங்களுக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த, பல வருடங்கள் அமைச்சர்களாக இருந்த அனுபவம் பெற்ற மூத்த தலைவர்கள் சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், எதுவும் செய்ய முடியாமல் அவர்கள் அமைதியாக இருந்தனர்.

புதிய முதல்வருக்கும், பிற அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தபோது அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

சாந்தலிங்கத்தின் அமைச்சரவையில் இருந்த பல அமைச்சர்களுக்குத் தன் அமைச்சரவையில் முருகன் இடமளிக்கவில்லை. புதிதாகப் பலருக்கு வாய்ப்பளித்திருந்தான்.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து, முருகன் முதல்வர் அறைக்கு வந்து அமர்ந்ததும், மூன்று முன்னாள் அமைச்சர்கள் அவன் அறைக்குள் நுழைந்தனர்.

நுழைந்தவுடனேயே, "என்னப்பா நினைச்சுக்கிட்டிருக்கே நீ?" என்றார் ஆதிமூலம் என்ற மூத்த தலைவர், கோபத்துடன். 

மூன்று முதல்வர்களின் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்ததால் ஆதிமூலத்துக்கு நிரந்தர நம்பர் 2 என்ற செல்லப்பெயர் உண்டு. இப்போது அந்த 'நிரந்தர' இடமும் அல்லவா போய் விட்டது!

"இங்கே பாருங்க! முதல்வர்கிட்ட பேசறபோது கொஞ்சம் மரியாதையாப் பேசணும்" என்றான் முருகன்.

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்ட ஆதிமூலம், "இந்த முதல்வர் பதவியே தலைவர் உங்களுக்குப் போட்ட பிச்சை. அதை மறந்துட்டு நடந்துக்கிறீங்க நீங்க! தலைவரோட அமைச்சரவையிலிருந்த அதே அமைச்சர்களை வச்சுக்கிட்டு அவங்க சொல்றபடி ஆட்சி நடத்திக்கிட்டு, தலைவர் திரும்பி வந்ததும் அவர்கிட்ட நீங்க ஆட்சியை ஒப்படைக்கணுங்கறதுதான் அவர் உங்ககிட்ட எதிர்பார்த்தது. நீங்க என்னடான்னா எங்களையெல்லாம் விட்டுட்டுப் புதுசா உங்க இஷ்டத்துக்கு அமைச்சரவையை அமைச்சிருக்கீங்க!" என்றார்.

"ஐயா! உங்களுக்குத் தெரியாதது இல்ல. ஆளுநர் ஒத்தரை முதலமைச்சரா நியமிச்சப்பறம், தன்னோட அமைச்சரவையை அமைக்கறது அவர் விருப்பம், அவர் உரிமை!" என்றான் முருகன் அமைதியாக.

"உனக்குத் திமிர் ரொம்ப ஏறி இருக்கு. நாளைக்கே சிறையிலே தலைவரைப் போய்ப் பாத்துப் பேசி உன்னை இந்த நாற்காலியிலேந்து தூக்கி எறியறேனா இல்லையா பாரு!" என்று கோபமாகக் கூறியபடியே வெளியேறினார் ஆதிமூலம். மற்ற இருவரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

ஆதிமூலம் சென்றதும்,தலைமைச் செயலாளர் உள்ளே வந்தார்.

பியூனை அழைத்த முருகன்,"கொஞ்ச நேரத்துக்கு யாரையும் உள்ள விடாதீங்க" என்றான்.

"வாழ்த்துக்கள்!" என்றார் தலைமைச் செயலாளர்.

"நன்றி சார். உங்க மேல எனக்கு நிறைய மதிப்பு உண்டு. நீங்க திறமைசாலி, நேர்மையானவர்னு நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கேன். நானும் கவனிச்சிருக்கேன். உங்க உதவி எனக்கு நிறைய வேணும்" என்றான் முருகன்.

"உங்களுக்கு உதவி செய்ய வேண்டியது என் கடமை" என்ற தலைமைச் செயலாளர், சற்றுத் தயக்கத்துக்குப் பின், "நீங்க முதல்வர் என்பதற்காக இதைச் சொல்லல. உங்க செயல்பாடுகளை நான் கவனிச்சிருக்கேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்னு நினைச்சிருக்கேன். ஆனா இவ்வளவு சீக்கிரமே உங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நான் எதிர்பாக்கல" என்றார்.

"நன்றி சார். உங்ககிட்ட வெளிப்படையா சில விஷயங்களைச் சொல்லலாம்னு நினைக்கறேன். மக்களுக்கு நல்லது செய்யற வாய்ப்புன்னு நினைச்சுதான் நான் அரசியலுக்கு வந்தேன். ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லேன்னு உள்ள வந்தப்பறம்தான் தெரிஞ்சுது. 

"நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சா, அப்ப நம்மால முடிஞ்சதைச் செய்யலாம்னு நினைச்சேன். எப்படியோ தலைவர் கண்ணில பட்டு நான் சட்ட மன்ற உறுப்பினராகி, உடனே அமைச்சரும் ஆயிட்டேன். ஆனா அமைச்சர் ஆனப்பறமும் என்னால அதிகமா எதையும் செய்ய முடியல.  

"ஒரு அமைச்சர் மக்களுக்கு நல்லது செய்யறதை விட கட்சிக்கும், கட்சிக்கு வேண்டிய சில பேருக்கும் சேவை செய்யத்தான் தன் பதவியைப் பயன்படுத்தணும்னுதான் எதிர்பாக்கறாங்கன்னு புரிஞ்சது. ஆனாலும், என்னால முடிஞ்ச வரைக்கும் செயல்பட்டுக்கிட்டிருந்தேன். அப்பதான், எதிர்பார்க்காம இந்த வாய்ப்புக் கிடைச்சது.

"தலைவர் என்னை ஏன் தேர்ந்தெடுத்தார்னு எனக்குத் தெரியல. மூத்த தலைவர் யார்கிட்டயாவது இந்தப் பொறுப்பைக் கொடுத்தா, தான் திரும்பி வரப்ப தன்கிட்ட இந்தப் பதவியைத் திருப்பிக் கொடுக்க மாட்டாங்களோன்னு பயந்து ஒரு லைட் வெயிட்டான என்கிட்ட கொடுத்திருக்கார்னு நினைக்கிறேன்.

"அவர் திரும்பி வரப்ப நிச்சயமா நான் பதவி விலகிக்கிட்டு அவர்கிட்ட ஆட்சியை ஒப்படைச்சுடுவேன். ஆனா அதுக்கு இன்னும் ஒரு வருஷமாவது ஆகும்னு நினைக்கிறேன். எப்படியும் ரெண்டு வருஷத்தில தேர்தலே வந்துடும். அதனால எனக்கு இருக்கற இந்தக் குறுகிய காலத்தில ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்து மக்களுக்கு நம்மால முடிஞ்ச நன்மைகளைச் செய்யலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்.

"மூத்த தலைவர்கள் அமைச்சர்களா இருந்தா நான் விரும்பின விஷயங்களைச் செய்ய விட மாட்டாங்கங்கறதாலதான், புதுசா பல பேரை அமைச்சர்களாப் போட்டிருக்கேன். அவங்களும் என்னை மாதிரியே மக்களுக்கு நல்லது செய்யலாம்னு நினைச்சு அரசியலுக்கு வந்தவங்கதான்.

"எனக்கு சில திட்டங்கள் இருக்கு. அதையெல்லாம் செயல்படுத்த, உங்களை மாதிரி நல்ல அதிகாரிகளோட ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் எனக்கு நிறைய வேணும்."

"நீங்க சொல்றதைக் கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களை மாதிரி சிந்தனைகள் உள்ளவங்ககிட்ட வேலை செய்ய மாட்டோமான்னு நானும் ஏங்கிக்கிட்டுத்தான் இருக்கேன். ஆனா உங்களுக்கு ஒரு பெரிய சிக்கல் இருக்குங்கறதை நீங்க  உணர்ந்திருக்கீங்களான்னு தெரியல!" என்றார் தலைமைச் செயலாளர்.

"நீங்க சொல்ல வரது எனக்குப் புரியுது. என்னை உடனே மாத்தப் பார்ப்பாங்கங்கறதைத்தானே சொல்றீங்க?"

"ஆமாம். இது ரெண்டு மூணு நாட்களிலேயே நடக்கலாம்" என்றார் தலைமைச் செயலாளர்.

"அப்படி நடக்க வாய்ப்பு இல்லைன்னு நினைக்கிறேன். நான் தலைவரை சிறையில போய்ப் பாக்கப் போறதில்ல.  தண்டனை பெற்றுச் சிறையில் இருப்பவரை ஒரு முதலமைச்சர் சிறையில போய்ப் பார்க்க முடியாது. இது தலைவருக்கும் புரியும். 

"அதனால, இப்போதைக்கு என்னைப் பதவி விலகச் சொல்லி அவர் எங்கிட்ட நேரடியாகச் சொல்ற வாய்ப்பு வராது. அதோட எங்க கட்சிக்கு சட்டமன்றத்தில பெரும்பான்மையை விட அஞ்சு உறுப்பினர்கள்தான் அதிகமா இருக்காங்க. அதனால ஜாமீன்ல வெளியில வந்தப்பறமும், அவங்க அவசரப்பட்டு எதுவும் செய்ய மாட்டாங்க. 

"சட்டமன்றம் கூட எப்படியும் ஒரு மாசம் ஆகும். அதுக்கு முன்னால அவங்க எதுவும் செய்ய மாட்டாங்க. அதுக்குள்ள நான் சில நல்ல விஷயங்களை செஞ்சு மக்கள்கிட்ட இந்த ஆட்சியைப்  பத்தி ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திட்டேன்னா, அப்புறம் என்னை மாத்தறது அவங்களுக்குக் கஷ்டமா இருக்கும். அப்படி மாத்தினாலும் பரவாயில்ல. 

"ஒரு மாசத்தில எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்யலாமே! ஒரு முதல்வர் தான் பதவியேற்ற ரெண்டு வாரத்துக்குள்ள பல நல்ல விஷயங்களை செஞ்சு எல்லோரையும் பிரமிக்க வச்சதெல்லாம் நடக்கலையா என்ன?" என்றான் முருகன், சிரித்துக் கொண்டே. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல் 
குறள் 489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

பொருள்:
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

Read 'The New Chief Minister' the English version of this story by the same author.
          குறள் 488          
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...