Wednesday, March 10, 2021

464. வேண்டாம் இந்த வாய்ப்பு!

"இது ஒரு புது வியாபார வாய்ப்பு. நல்ல லாபம் தரக் கூடியது. இதில நாம இறங்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்" என்றான் பொன்ராஜ்.

"நம்ம தொழில் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு? நமக்கு எதுக்கு இந்தப் புதுத் தொழில்?" என்றார் சக்ரபாணி. 

"இல்லை சார்! இந்த டெக்ஸ்டைல் பிசினஸ் நல்லா எஸ்டாப்ளிஷ் ஆயிடுச்சு. இதில இனிமே விரிவு படுத்த அதிக வாய்ப்பு இல்ல. வருஷா வருஷம் வியாபாரம் தானாவே பெருகிக்கிட்டிருக்கு. அதனால புதுசா என்ன செய்யலாம்னு நான் கொஞ்ச நாளா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அப்பதான் இந்த வாய்ப்பு என் நண்பன் ஒத்தன் மூலமா எனக்கு வந்தது. இது நல்லா வரும்னு தோணினதால உங்ககிட்ட சொல்றேன்."

"பொன்ராஜ்! உங்களை ஜெனரல் மானேஜராப் போட்டப்பறம் நான் பிசினஸையே மறந்துட்டு ஹாய்யா இருக்கேன். இப்ப என்னன்னா புதுசா இன்னொரு தொழில்ல இறங்கச் சொல்றீங்க, அதுவும் எனக்கு சம்பந்தமே இல்லாத கல்வித் துறையில! இது எதுக்கு நமக்கு?"

"சார்! பணம் சம்பாதிக்கறதுக்காக இதில இறங்கலாம்னு நான் சொல்லல. கல்வித் துறையில ஈடுபட்டா உங்களுக்கு ஒரு பெரிய கௌரவம், நல்ல பேரு, மதிப்பு எல்லாம் கிடைக்கும். கல்வி நிறுவனங்களை நடத்தறவங்கள்ள பெரும்பாலானவங்க கல்வியாளர்கள் இல்ல, வேற தொழில் செய்யறவங்கதான். அவங்கள்ள சில பேரு கல்வித் தந்தைன்னு பேர் வாங்கலியா? தொழிலை வெறும் வியாபாரமா நினைக்காம ஒரு சேவையா நினைக்கிற உங்களைப் போன்றவங்க கல்வித் துறையில ஈடுபடறது இந்த சமுதாயத்துக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன். அதனாலதான் நான் இதில ஆர்வம் காட்டினேன்."

"சரி. இதைப் பத்தி விவரமா சொல்லுங்க."

"சார்! மும்பையில இருக்கிற ஒரு பெரிய கல்வி நிறுவனத்தோட ஃபிராஞ்சைஸா நாம ஒரு பள்ளிக்கூடம் நடத்தறதுதான் இந்த பிசினஸ். உங்க நிலம் ஒண்ணு சும்மாக் கிடக்குதுன்னும், அதைப் பயனுள்ள வழியில பயன்படுத்தணும்னும் நீங்க ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்கீங்களே, அந்த நிலத்தில கட்டிடம் கட்டி, அஞ்சாறு மாசத்தில நாம ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுடலாம். இப்ப புதுக் கல்விக் கொள்கைன்னு வந்திருக்கே, அதுக்கு ஏத்த மாதிரி ஒரு கல்வித் திட்டத்தை டிசைன் பண்ணி இருக்காங்க அவங்க. ஐஐடி என்ட்ரன்ஸ், கேட், நீட் மாதிரி நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை சின்ன வகுப்பிலேந்தே தயார் பண்றது, விளையாட்டுகள், பாட்டு, நடனம், மற்ற கலைகள், கைத்தொழில்கள்ள பயிற்சி அளிக்கறதுங்கற மாதிரி பரவலா பல விஷயங்களைக் கற்பிக்கிற ஒரு கல்வித் திட்டத்தை அவங்க உருவாக்கி இருக்காங்க, மாணவர்களை எந்தச் சவாலுக்கும் தயாரானவங்களாப் பண்றது மாதிரி பல அருமையான விஷயங்கள் கொண்ட கல்வித் திட்டம் அவங்களோடது. இங்கே இருக்கிற சில பெரிய பள்ளிக்கூடங்கள் கூட இந்த ஃபிராஞ்சைஸுக்கு முயற்சி செய்யறாங்க. ஆனா உங்களுக்கு இருக்கிற மதிப்பு, நல்ல பேருக்காக உங்களுக்கு இந்த ஃபிராஞ்சைஸைக் கொடுக்கறதை அவங்க விரும்பறாங்க" என்று விளக்கினான் பொன்ராஜ்.

"நீங்க சொல்றதைக் கேக்கறப்ப நல்லா இருக்கும் போலத்தான் தோணுது. இந்த ஃபிராஞ்சைஸ் விவரங்களை எங்கிட்ட கொடுங்க. படிச்சுப் பாக்கறேன்" என்று சொல்லி பொன்ராஜிடமிருந்து விவரங்கள் அடங்கிய தாள்களைப் பெற்றுக் கொண்டார் சக்ரபாணி.

ரண்டு நாட்கள் கழித்து பொன்ராஜை அழைத்த சக்ரபாணி, "என்ன பொன்ராஜ் இது? பிரின்சிபால் உள்ளிட்ட எல்லா ஆசிரியர்களையும் அவங்கதான் நியமிப்பாங்களாம். அதோட, அவங்க நியமிக்கிற நிர்வாக அதிகாரிதான் எல்லாரையும், எல்லாத்தையும் கன்ட்ரோல் பண்ணுவாராம். அப்புறம் நமக்கென்ன வேலை?" என்றார்.

"இல்ல சார். மாணவர்கள்கிட்ட ஃபீஸ் வாங்கறது, எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கறது, மத்த செலவுகள் இதையெல்லாம் நாமதான் செய்யப் போறோம். வசூலிக்கிற மொத்தக் கட்டணத்தில அவங்களுக்குக் குறிப்பிட்ட சதவீதத்தைக் கொடுத்தப்பறம் மீதி லாபம் நமக்குத்தான்..." என்று பொன்ராஜ் சொல்லிக் கொண்டிருந்தபோதே அவனை இடைமறித்த சக்ரபாணி, "நான் லாபத்தைப் பத்திப் பேசல. முதல்ல, இந்தத் தொழில் நம்ம பேரில நடக்குமே தவிர, இதில நமக்கு இந்த கன்ட்ரோலும் இல்ல. ஆனா, ஏதாவது தவறு நடந்தா, பொறுப்பு நமக்குத்தான் வரும்! ரெண்டாவது, இவங்க கல்வித் திட்டத்தில சொல்லி இருக்கிற பல விஷயங்கள் எனக்குப் புரியல. மாணவர்களை எல்லாவிதத்திலேயும் தயார் பண்றதா சொல்லி, அவங்க மேல நிறைய சுமையைத் திணிக்கற மாதிரி ஆயிடுமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. பள்ளி நேரம் முடிஞ்சப்பறம், மாலை வேளைகளிலேயும், சனி ஞாயிறுகளிலேயும் கூட மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டி இருக்கும்னு சொல்லி இருக்காங்க. இதெல்லாம் மாணவர்களுக்கு நல்லதா, அல்லது அவங்களை உடல் ரிதியாவோ, மன ரீதியாவோ பாதிக்குமாங்கறதெல்லாம் எனக்குத் தெரியல. இதனால ஏதாவது பாதிப்புகள் வந்தா, அதனால நமக்குத்தானே கெட்ட பேரு? இதையெல்லாம் யோசிச்சுப் பாத்தப்ப, நமக்குத் தெரியாத ஒரு துறையில இறங்க வேண்டாம்னு தோணுது!" என்றார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 464
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

பொருள்:
தனக்கு ஒரு களங்கம் வந்து விடக் கூடாது என்று அஞ்சிச் செயல்படுபவர்கள், தங்களுக்குத் தெளிவான புரிதல் இல்லாத ஒரு செயலைத் தொடங்க மாட்டார்கள். 

Read 'Franchise Opportunity' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...