Tuesday, February 16, 2021

457. தொழிலதிபருடன் ஒரு பேட்டி

"எங்கள் சானலுக்குப் பேட்டி அளிக்கச் சம்மதித்ததற்கு முதலில் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிறிய அளவில் தொழில் தொடங்கி, அதைச் சிறிது சிறிதாக விரிவாக்கி ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இப்போது ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறீர்கள். இந்தச் சாதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"முதலில் இதை ஒரு சாதனையாக நான் நினைக்கவில்லை. என் 25 வயதில் இந்தத் தொழிலைத் தொடங்கியபோது மற்றவர்களுக்குப் பயனளிக்கும் ஒரு சேவையை வழங்கி அதை நேர்மையான விதத்தில் மார்க்கெடிங் செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் துவங்கினேன். அந்த நோக்கத்தில் உறுதியாக இருந்து தரம், நியாயமான விலை, போட்டியாளர்களை எதிரிகளாக நினைக்காமல் தொழில் செய்வது போன்ற கோட்பாடுகளை உறுதியாகப் பின்பற்றி வந்ததால் எனக்கு இயல்பாகவே நன்மைகள் ஏற்பட்டன என்றுதான் நினைக்கிறேன்."

"நல்லது. ஒரு தொழிலதிபராக இருப்பதுடன், ரெஸ்பான்சிபிள் பீப்பிளஸ் பார்ட்டியில் ஒரு முக்கியத் தலைவராகவும் நீங்கள் செயலாற்றி வந்திருக்கிறீர்கள். ஆர் பி பி கட்சியை நீங்கள் தேர்ந்தெடுத்ததறகுக் காரணம் என்ன?"

"ஆர் பி பி மற்ற அரசியல் கட்சிகள் மாதிரி இல்லை. ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக அது இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பெயரையே கட்சிக்கு வைத்தார் கட்சியைத் துவக்கிய ராம்ராஜ் அவர்கள். ராம்ராஜ் என்று அவர் பெயர் இருந்ததும் ஒரு பொருத்தம்தான். ஏனெனில் ராமராஜ்யம் என்று சிலர் ஒரு வெற்று கோஷமாகச் சொல்லி வந்ததற்கு மாற்றாக, ராமராஜ்யம் என்ற ஒரு லட்சிய அமைப்பில் அரசாங்கம் எப்படிச் செயல்பட வேண்டும், மக்களின் பொறுப்புகள் என்ன என்பதெற்கெல்லாம் ஒரு ப்ளூபிரின்ட்டை உருவாக்கினார் அவர். அதனால்தான் அந்தக் கட்சியில் சேர்ந்து என்னுடைய பங்களிப்பை அளிப்பது இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் என் பொறுப்பு என்று நினைத்தேன்."

"ஆனால் கட்சி துவங்கி 40 ஆண்டுகள் ஆகியும் உங்கள் கட்சி பெரிதாக வளரவில்லையே! தேர்தல்களில் உங்களால் இரண்டு மூன்று இடங்களுக்கு மேல் வெல்ல முடியவில்லையே!"

"கட்சியைத் தொடங்கும்போதே கட்சியின் நிலை இப்படித்தான் இருக்கும் என்பது ராம்ராஜ் அவர்களுக்குத் தெரியும். தன் கட்சியில் சேர்பவர்களிடம், 'இந்தக் கட்சியில் சேர்வதால் நீங்கள் எம் எல் ஏ, எம் பி ஆக முடியும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தால் இதில் சேராதீர்கள். சில நல்ல விஷயங்களை வலியுறுத்தவும், அவற்றுக்காகப் போராடவும் மன உறுதி இருந்தால் மட்டும் சேருங்கள்' என்று அவர் சொல்லி விட்டு அதற்குப் பிறகும் அவர்கள் சேர விரும்பினால்தான் அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்வார்!"

"வெற்றி பெற முடியாது என்று தெரிந்தே ராம்ராஜ் அவர்கள் இந்தக் கட்சியை ஏன் துவங்கினார்?"

"ராம்ராஜ் அவர்களிடம் நான் இதே கேள்வியைக் கேட்டபோது அவர் சொன்ன பதில் இது: ராஜாஜியிடம் ஒரு நிருபர் கேட்டாராம் நேரு மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்கிறாரே, அவரை எதிர்த்து அரசியலில் உங்களால் வெற்றி பெற முடியுமா என்று. அதற்கு ராஜாஜி சொன்ன பதில் இது. 'நேருவை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என்பதை நான் அறிவேன். ஆனால் நேருவின் செயல்பாடுகள் தவறானவை என்று நான் நினைக்கும்போது அவற்றை எதிர்க்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அப்படிச் செய்யாவிட்டால், இவ்வளவு தவறுகள் நடந்திருக்கின்றன, ஆனால் அவற்றை யாரும் எதிர்க்கவில்லையே என்று சரித்திரம் நம்மைக் குற்றம் சொல்லும்.' அதுபோல்தான் அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் செய்யும் தவறுகளை எடுத்துக் காட்டி, சரியான வழி எது என்று மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நம் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். இதுதான் உங்கள் கேள்விக்கு ராம்ராஜ் அவர்களிடமிருந்தே வந்த பதில்."

"உயர்ந்த மனப்பான்மைதான் இது. சரி, உங்கள் கட்சியின் செயல்பாடுகளுக்குச் சிறிதாவது பலன் கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?"

"நிறையவே கிடைத்திருக்கிறது. நாங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன் சொன்னவற்றை இன்று மற்ற கட்சியினர் கூறுகிறார்கள். இது ஒரு ஜனநாயக நாடாக இருந்தாலும், பதவியில் இருப்பவர்களின் அடக்குமுறை மனப்பான்மையால் தனி மனித சுதந்திரத்துக்கும், பேச்சுரிமை, ஊடக சுதந்திரம் ஆகியவற்றுக்கும் அவ்வப்போது அச்சுறுத்தல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றுக்கு எதிராக எப்போதுமே குரல் கொடுத்து வருபவர்கள் நாங்கள்தான். நாங்கள் ஒரு சிறிய கட்சியாக இருந்தாலும் எங்கள் உறுதியான, வலுவான நிலைப்பாடு மற்ற பலருக்கும் அநீதியை எதிர்க்கும் துணிவையும் ஊக்கத்தையும் கொடுத்து வந்திருக்கிறது. ஒரு கட்சி பதவியில் இருந்துதான் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. மக்கள் நலனுக்காகவும், அவர்கள் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து அநீதியை எதிர்க்கும் துணிவையும், உத்வேகத்தையும் மக்களிடையே ஏற்படுத்துவதும் பெரிய சேவைதானே?"

"கடைசியாக ஒரு கேள்வி. உங்கள் தொழில்துறைச் சாதனைகள், உங்கள் அரசியல் ஈடுபாடு இவற்றில் உங்களுக்கு அதிகம் திருப்தியைக் கொடுத்திருப்பது எது?"

"நான் முன்பே குறிப்பிட்டபடி, நல்ல மனம் இருந்தாலே அது வாழ்க்கையில் வெற்றியை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே என் தொழில் வெற்றியை ஒரு பெரிய சாதனையாக நான் நினைக்கவில்லை. ஆர் பி பி என்ற ஒரு நல்ல இயக்கத்தைத் தேர்ந்தெடுத்து அதனுடன் இணைந்து என்னால் முடிந்த அளவு செயலாற்றியதைத்தான் நான் ஒரு பெருமைக்குரிய விஷயமாக நினைக்கிறேன்."

அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

பொருள்:
நல்ல மனம் படைத்திருத்தல் உலகில் ஒருவர்க்கு செல்வச் செழிப்பைக் கொடுக்கும். நல்ல இனத்துடன் சேர்ந்திருப்பது எல்லாப் புகழையும் அளிக்கும் 
அறத்துப்பால்                                                                        காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...