Monday, February 15, 2021

456. 'அணில்கள்'

"இது ஒரு பெரிய நிறுவனம். சென்னையிலேயே நமக்கு அஞ்சு கிளைகள் இருக்கு. அஞ்சு கிளையிலேயும் சேர்ந்து மொத்தமா ஆயிரம் பேருக்கு மேல வேலை செய்யறாங்க. இங்கே நிறைய குழுக்கள் இருக்கு. இசை, இலக்கியம், நாடகம், கவிதை, ஆன்மீகம்னு பல விஷயங்கள்ள ஆர்வம் உள்ளவங்க ஒண்ணா சேர்ந்து செயல்படறாங்க. சனி ஞாயிறுல ஒண்ணு கூடி தங்களுக்கு ஆர்வமான விஷயங்கள்ள ஈடுபடுவாங்க. உனக்கு எதில ஆர்வம் இருக்கோ அதில நீ சேர்ந்துக்கலாம்" என்றான் முரளிதரன்.

"நீங்க எதில இருக்கீங்க?" என்றான் ரகு. அவன் அப்போதுதான் அந்த நிறுவனத்தில் சேர்ந்திருந்தான்.

"சொல்றேன். ஆனா ஒரு நிபந்தனை. நான் உங்கிட்ட பேசற மாதிரி நீயும் என்னை வா போன்னுதான் கூப்பிடணும் - வாடா போடான்னு கூப்பிட்டாலும் சரிதான். நானும் உன்னை மாதிரிதான், உனக்கு ஒரு வருஷம் சீனியர் அவ்வளவுதான்."

"சரி. சொல்லுடா!" என்றான் ரகு.

"அப்படி வா வழிக்கு!" என்று சிரித்துக் கொண்டே கூறிய முரளிதரன், "நான் இது மாதிரி எதிலுமே இல்லை. நானும் ஒரு அஞ்சாறு பேரும் மட்டும் வேற ஒரு விஷயத்தில ஈடுபட்டிருக்கோம். ஆனா இதில ரொம்ப பேருக்கு ஆர்வம் இருக்காது!" என்றான்.

"பீடிகையெல்லாம் வேண்டாமே!" என்றான் ரகு.

"வர சனிக்கிழமை சாயந்திரம் ஆறு மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு வா. நாங்க என்ன செய்யறோம்கறதைப் பாரு. உனக்குப் பிடிச்சா அப்புறம் நீயும் எங்களோட  சேர்ந்துக்கலாம்" என்ற முரளிதரன் சற்றுத் தயங்கி விட்டு, "எனக்கென்னவோ நீ எங்களோட இணைஞ்சுப்பேன்னுதான் தோணுது!" என்றான்.

னிக்கிழமை மாலை அவர்கள் அந்த நிறுவன ஊழியர் ஒருவர் வீட்டில் கூடினர். ரகுவையும் சேர்த்து எட்டு பேர் அங்கே இருந்தனர். 

அவர்கள் பேச்சை கவனித்ததிலிருந்து ரகு புரிந்து கொண்டது இது;

'அணில்கள்' என்ற சிறிய அமைப்பை நடத்தி வந்த அவர்களுடைய நோக்கம் தங்கள் ஓய்வு நேரத்தை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப் பயன்படுத்த வேண்டும் என்பது. உதவிக்கு யாரும் இல்லாத முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதிலிருந்து, படிப்பறிவோ, உயர் மட்டத் தொடர்புகளோ இல்லாத அடித்தட்டு மக்களுக்கு அரசாங்கத்திலிருந்தும் பிற அமைப்புகளிலிருந்தும் உதவிகள் பெற ஆலோசனை சொல்வது வரை பல்வேறு உதவிகளை அவர்கள் செய்து வந்தார்கள்.

சட்டத்துக்கு உட்பட்ட, விதிமீறல்கள் இல்லாத எல்லா உதவிகளையும் தங்களால் இயன்ற அளவுக்கு ஆதரவற்ற எளிய மக்களுக்குச் செய்வது என்ற நோக்கத்துடன் அவர்கள் செயல்பட்டு வந்ததையும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கூடி உதவி கேட்டுத் தங்களுக்கு வந்த கோரிக்கைகளைப் பகிர்ந்து கொண்டு யார் எந்த வேலைகளைச் செய்வது என்று பொறுப்பேற்றுக் கொண்டதையும் ரகு கவனித்தான். 

சிறிது நேரத்துக்குப் பிறகு அனைவரும் விடை பெற்றுச் சென்றதும், "என்ன நினைக்கற?" என்றான் முரளிதரன் ரகுவிடம்.

"நானும் ஒரு அணிலா இருந்து என்னால் முடிஞ்ச மண்ணைச் சுமக்க விரும்பறேன்!" என்றான் ரகு.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் பேசிய ரகு, "இந்த நிறுவனத்தில் எனக்குப் பதவி உயர்வுகள், பல விதமான வேலைகளில் ஈடுபட வாய்ப்புகள், சிறந்த நண்பர்கள்னு நிறைய நன்மைகள் கிடைச்சிருக்கு. அதுக்காக இந்த நிறுவனத்துக்கும், அதன் நிர்வாகத்துக்கும், நான் இணைந்து பணியாற்றிய ஊழியர்களுக்கும் என் நன்றி!" என்றான்.

'ஆனா இந்த நிறுவனத்தில் சேர்ந்ததால எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய நன்மை 'அணில்கள்'  இயக்கத்தில் நான் பணி செய்ய எனக்குக் கிடைச்ச வாய்ப்புதான். அதில எனக்கு ரிடயர்மென்ட் கிடையாது, அதில் இருக்கற நண்பர்கள்கிட்டேந்து நான் பிரிய வேண்டாம், அதில பணி செய்யறதால கிடைக்கற சந்தோஷத்தை நான் எப்பவும் இழக்கவும் வேண்டாம்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 456
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

பொருள்:
மனம் தூய்மையாக உள்ளவர்களுக்கு, அவர்களுக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையானவையாக இருக்கும். இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல்கள் எதுவும் இல்லை.
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...