Thursday, January 28, 2021

450. தந்தையின் நண்பர்

"இங்க பாருங்க சார்! என் அப்பா உங்களைத் தன் நண்பர்ங்கறதுக்காக ஏகப்பட்ட சம்பளம் கொடுத்து இந்த ஆஃபீஸ்ல உட்கார வச்சிருந்தாரு. இப்ப அவர் போய்ச் சேந்துட்டாரு. அதனால உங்களுக்கு இங்க வேலை இல்லை!"

சசீதரனின் கடுமையான சொற்களைக் கேட்டு அந்த அலுவலகத்திலிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நண்டபாணி புன்னகையுடன், "ரொம்ப நன்றிப்பா!" என்று சொல்லி விட்டுத் தன் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

ன்று மாலை அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் திருச்செல்வத்தைத் தன் அறைக்கு அழைத்த சசீதரன், நிர்வாகத்தில் தான் செய்ய விரும்பிய மாறுதல்களைப் பற்றி அவரிடம் விவரித்தான்.

"சரி சார்! நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சுடலாம். ஆனா நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒரு விஷயம்!" என்றார் திருச்செல்வம், தயக்கத்துடன்.

"சொல்லுங்க!" என்றான் சசீதரன்.

"தண்டபாணி சாரைப் பத்தி...."

"நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு தெரியும். அவர் என் அப்பா இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சதிலிருந்தே அவரோட இருந்திருக்காரு. என் அப்பா அவர்கிட்ட யோசனை கேக்காம எதையும் செஞ்சதில்ல. அந்த நிறுவனம் இவ்வளவு பெரிசா வளர்ந்ததுக்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்... இதெல்லாம்தானே?"

"சார்! எல்லாம் தெரிஞ்சுமா?"

"இந்தப் புராணத்தையெல்லாம் எங்கப்பாகிட்டயே நிறையக் கேட்டிருக்கேன். எஸ்! இதெல்லாம் புராணம் மாதிரி வெறும் சென்ட்டிமென்ட்தான். எங்கப்பா தன்னோட பணத்தைப் போட்டு ஆரம்பிச்ச இந்த நிறுவனத்தில இவரு ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக்கிட்டு, தான்தான் எல்லாத்தையும் செய்யற மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்காரு. என் அப்பாவோட அறையில அவருக்கு எதிர்ல உக்காந்து அரட்டை அடைச்சுக்கிட்டு அவர் செஞ்சதையெல்லாம் தான் சொல்லித்தான் அவர் செஞ்சதா அவரை நம்ப வச்சு இத்தனை வருஷமா அவரை ஏமாத்திக்கிட்டு வந்திருக்காரு. என் அப்பா அவர்கிட்ட ஏமாந்திருக்கலாம். நான் ஏமாறத் தயாராயில்ல!" என்றான் சசீதரன் ஆவேசமாக.

"சார்! நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. தண்டபாணி சார் உங்கப்பாவுக்கு ஒரு பெரிய பலமா இருந்தாரு. நானே நிறைய சமயங்கள்ள பாத்திருக்கேன்..."

"நாம வேற விஷயத்தைப் பேசலாமா?"

"என்ன சார் நடக்குது? இந்த அஞ்சு வருஷமா நான் எத்தனையோ புது விஷயங்கள்ளாம் செஞ்சு இந்த நிறுவனத்தைப் பெரிய லெவலுக்குக் கொண்டு போக முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். ஆனா நாம பின்னாலதான் போய்க்கிட்டிருக்கோம். நம்ம நிறுவனத்தோட சரித்திரத்திலேயே முதல் தடவையா நமக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கு. நமக்கு காம்பெடிஷன் கூட அதிகமா இல்ல. ஆடிட்டர் சிரிக்கிறாரு. 'எப்படிப்பா இவ்வளவு வேகமா கம்பெனியை சறுக்க வச்சே!'ன்னு என்னைக் கிண்டல் பண்றாரு. நீங்கள்ளாம் என்ன பண்றீங்கன்னே தெரியல!"

திருச்செல்வம் மௌனமாக இருந்தார்.

'நமக்கு அதிக காம்பெடிஷன் இல்லதான். நாங்கள்ளாம் நல்லாத்தான் வேலை செய்யறோம். நீங்களும் புதுசாப் பல விஷயங்களைச் செய்யறீங்கதான். ஆனா ஒரு நல்ல வழிகாட்டியா இருந்தவரை அலட்சியமாத் தூக்கி எறிஞ்சுட்டீங்களே, அதோட விளைவுகள்தான் இவை' என்று அவர் தன் மனதுக்குள் கூறிக் கொண்டது சசீதரனுக்குக் கேட்டிருக்காதுதான்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

பொருள்:
நல்லவராகிய பெரியோரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

Read 'Sasidharan's Plans' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...