"ஜனநாயகத்தை அழிக்கறதுக்கு ரொம்ப வலுவான கருவி எது தெரியுமா?"
"எது?"
"ஜனநாயகம்தான்!"
"எப்படிச் சொல்றே?"
"நம்ம மஹேந்திரா ஜனநாயக முறையிலதானே நம்ம நாட்டோட ஜனாதிபதி ஆனாரு? இப்ப எப்படி ஜனநாயகத்தை அழிச்சுக்கிட்டிருக்காரு பார்!"
"ஜனநாயகத்தை அழிச்சுக்கிட்டிருக்காருன்னு எப்படிச் சொல்றே? நம்ம நாட்டில மக்கள் மன்றம், பத்திரிகைகள், மத்த ஊடகங்கள் எல்லாம் இயங்கிக்கிட்டுத்தானே இருக்கு?"
"இயங்கிக்கிட்டுத்தான் இருக்கு - மஹேந்திராவோட விருப்பத்தின்படி! மக்கள் மன்றத்தில அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பயப்படறாங்க.
"அப்படி யாராவது பேசினா, அடுத்த நாளே அவர் வீட்டில வருமான வரி சோதனை நடக்குது. ஏகப்பட்ட பணமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதா செய்தி வருது. அப்புறம் அவர் வழிக்கு வந்துடறாரு. வருமான வரிச் சோதனை மேல நடவடிக்கை எதுவும் எடுக்கப்படறதில்ல!
"ஊடகங்கைளை எடுத்துக்கிட்டா, அரசாங்கத்துக்கு எதிரா கருத்து சொல்ற சானல்கள் கொஞ்ச நாள்ள தங்களோட போக்கை மாத்திக்கிட்டு, அரசாங்கத்துக்குத் துதி பாட ஆரம்பிச்சுடறாங்க. திடீர்னு ஏன் அவங்க தங்களோட கருத்தை மாத்திக்கிட்டாங்கங்கறது அவங்களுக்கும் அரசாங்கத்துக்கும்தான் வெளிச்சம்!
"அரசாங்கத்துக்கு எதிரா கருத்து சொல்ற ஊடக ஆசிரியர்கள், செய்தியாளர்கள் எல்லாம் காரணமே இல்லாம நீக்கப்படறாங்க, இல்லை, பதவி விலகறாங்க.
"சமூக ஊடகங்ள்ள அரசாங்கத்தை ஆதரிக்கறவங்க எழுதற அவதூறுக் கருத்துக்கள், பொய்யான தகவல்கள் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கப்படறதில்ல.
"ஆனா அரசாங்கத்தோட செயல்பாடுகளைக் குறை சொல்லி யாராவது கருத்துச் சொன்னா, அவங்க மேல அவதூறு வழக்கு, கைதுன்னெல்லாம் நடவடிக்கை பாயுது. அதோட ஆளுங்கட்சி உறுப்பினர்களோட வன்முறையையும் அவங்க எதிர்நோக்க வேண்டி இருக்கு.
"அதனால இந்த அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களே வெளிப்படறதில்லை. நீதிமன்றங்கள் கூட இந்த அரசாங்கத்தோட தவறுகளைக் கண்டிக்கறதில்ல.
"உன்னை மாதிரி பல பேர் நடக்கறது எதையும் பார்க்காம கண்ணை மூடிக்கிட்டு, 'எல்லாம் சரியாத்தானே இருக்கு?'ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. இதுதான் நம் நாட்டோட பரிதாபமான நிலைமை!"
"நீ இப்ப எங்கிட்ட இந்த அரசாங்கத்தைக் குறை சொல்லிப் பேசிக்கிட்டிருக்கியே! இது ஜனநாயகத்துக்கான அடையாளம் இல்லையா?"
"யப்பா! நீ என் நண்பன்கறதால உங்கிட்ட தைரியமா சொல்லிக்கிட்டிருக்கேன். நான் இப்படிப் பேசினேன்னு தயவு செஞ்சு நீ யார்கிட்டயும் சொல்லி வைக்காதே! அவங்க வேற யார்கிட்டயாவது சொல்லி, இந்த அரசாங்கத்தோட அடிமை சேவகர்கள் யார் காதுக்காவது இது போச்சுன்னா அவ்வளவுதான்! என்னை தேசத்துரோகின்னு சொல்லி உள்ள தள்ளிடுவாங்க."
ஜனாதிபதி மஹேந்திரா தன் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
"அடுத்த வருஷம்தான் தேர்தல் நடக்கணும். ஆனா ஒரு வருஷம் முன்னாலேயே தேர்தலை நடத்திடலாம்னு நினைக்கிறேன். நாட்டில நிலைமை எப்படி இருக்கு?"
"மக்கள் எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க. யாருக்கும் எந்தக் குறையும் இல்ல. எல்லோருமே உங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க" என்றார் உளவுத்துறையின் மூத்த அதிகாரி.
"அப்படின்னா, உடனே தேர்தலை வச்சுடறேன். அடுத்த வருஷம் நிலைமை எப்படி இருக்குமோ தெரியல!" என்றார் மஹேந்திரா.
"என்னையா இப்படி ஆயிடுச்சு? உளவுத்துறை அதிகாரிங்கள்ளாம் சொன்னதை வச்சுத்தானே தேர்தலை வச்சேன்? இல்லேன்னா இன்னொரு வருஷம் பதவியில இருந்திருக்கலாமே!" என்றார் மஹேந்திரா தன் கட்சியின் மூத்த தலைவர்களிடம்.
"அரசாங்கத்தின் மேல இருக்கற பயத்தால மக்கள் வெளிப்படையா குறை எதுவும் சொல்லாம தங்களோட கோபத்தை வாக்குச் சீட்டு மூலமா வெளிப்படுத்திட்டாங்க.
"அரசாங்கத்தை விமரிசனம் பண்ணினவங்களையெல்லாம் மொத்தமா ஒழிச்சுட்டீங்க. அதனால உங்ககிட்ட உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லவே ஆள் இல்லாம போயிட்டாங்க.
"உளவுத்துறை அதிகாரிகள் உங்ககிட்ட உண்மை நிலவரத்தைச் சொன்னாங்களோ, இல்ல கசப்பான உண்மையைச் சொன்னா உங்களுக்குப் பிடிக்காதுங்கற பயத்தில உங்களை சந்தோஷப்படுத்தறதுக்காகப் பொய்யான தகவல்களைச் சொன்னாங்களோ!
"உங்களோட தன்னிச்சையான செயல்பாடுகளால, மக்கள் ஜனாதிபதி தேர்தல்ல, உங்களைப் படுதோல்வி அடைய வச்சதும் இல்லாம, மக்கள் மன்றத் தேர்தல்லே நம்ம கட்சிக்கு அஞ்சு இடங்களை மட்டுமே கொடுத்து நம்ம கட்சியையும் துடைச்சு எடுத்துட்டாங்க. புது அரசாங்கத்தில உங்க மேல வழக்குப் போட்டு உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப் பார்ப்பாங்க. நம்ம கட்சிகிட்டேந்து உங்களுக்கு எந்த ஆதரவையும் எதிர்பாக்காதீங்க. கட்சியில எல்லாருமே உங்க மேல கோபமாத்தான் இருக்காங்க - என்னையும் சேர்த்து!" என்று பொரிந்து தள்ளினார் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்.
குறள் 448:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
No comments:
Post a Comment