Saturday, January 2, 2021

438. கம்பளிப் பின்னல் வேலை!

"நன்கொடை கேட்பவர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அனுமதி இல்லை."

ஒரு குடியிருப்பின் வெளிப்புறச் சுவரில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைக் காரில்சென்று கொண்டிருக்கும்போது பார்த்த செல்வநாயகம், டிரைவரிடம் சொல்லிக் காரை நிறுத்தச் சொல்லி விட்டு, காரில் தன் அருகில் அமர்ந்திருந்த தன் நிறுவனத்தின் நிர்வாகியிடம் அதைக் காட்டி, "நாளைக்கே நம்ம ஆஃபீசுக்கு வெளியில இப்படி ஒரு போர்டு வச்சுடுங்க. நன்கொடை, உதவின்னு கேட்டு வரவங்க தொல்லை தாங்கல. நம்ம ஆஃபீஸ் இருக்கற காம்பவுண்டுக்குள்ள நிறைய ஆஃபீஸ் இருக்கறதால கண்டவங்க உள்ள வந்துடறாங்க!" என்றார்.

யாருக்கும் எந்தப் பொருள் உதவியும் செய்யக் கூடாது என்ற கொள்கையை(!) உறுதியாகக் கடைப்பிடிப்பவர் செல்வரங்கம். தன் உறவினர்கள், நண்பர்கள், மனைவியின் உறவினர்கள் ஆகிய யாரும் தன்னிடம் எந்த உதவியும் கேட்பதை அவர் ஊக்குவிப்பதில்லை.

"அவங்க அவங்க அவங்களோட தேவைகளுக்கு சம்பாதிச்சு அதுக்குள்ள வாழ்ந்துக்கணும். மத்தவங்க கிட்ட உதவி கேக்கறதுங்கறது என்ன வழக்கம்?" என்பார் தன் மனைவியிடம்.

"போதுமான வருமானம் இல்லாதவங்க என்ன செய்வாங்க? கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்யறதுதானே மனிதாபிமானம்?" என்று அவர் மனைவி விசாலாட்சி பலமுறை அவரிடம் வாதாடி இருக்கிறாள். ஆனால் செல்வநாயகம் தன் கருத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை.

"உங்க மனைவிங்கற முறையில உங்க பணத்தைச் செலவழிக்க எனக்கு உரிமை இல்லையா?" என்று ஒருமுறை விசாலாட்சி அவரிடம் கேட்டாள்.

"செலவழிக்க வேண்டாம்னு சொல்லல.ஆனா தானம் கொடுக்கறத்துக்கு அனுமதிக்க மாட்டேன்!" என்றார் செல்வநாயகம்.

ன்று செல்வரங்கம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். விசாலாட்சி எங்கோ வெளியே போயிருந்தாள்.

விசாலாட்சியைத் தேடிக்கொண்டு ஒரு சிறுவன் வந்தான்.

"அம்மா இல்லீங்களா ஐயா?" என்றான் அவரைப் பார்த்து. 

"யாருப்பா நீ?" என்றார் செல்வநாயகம், அவன் ஏழ்மைத் தோற்றத்தை கவனித்தவாறு.

"இல்ல.. பள்ளிக்கூடப் புத்தகம் வாங்கப் பணம் கொடுக்கறதா அம்மா சொல்லி இருந்தாங்க!" என்றான் அவன் தயக்கத்துடன்.

"எவ்வளவு?"

"இருநூறு ரூபாய்."

அதற்குள்  வெளியே போயிருந்த விசாலாட்சி வந்து விட்டாள். தன் கைப்பையிலிருந்து இருநூறு ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்.

சிறுவன் சென்ற பிறகு, "இது மாதிரி தான தர்மமெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல?" என்றார் செல்வநாயகம் கோபத்துடன்.

அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்த விசாலாட்சி, "உங்க பணத்திலேந்து கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க. இது நான் சம்பாதிச்ச பணம்!" என்றாள்.

"நீ சம்பாதிச்சதா? எப்படி?"

"ஒரு கம்பெனிக்கு ஸ்வெட்டர் பின்னிக் கொடுக்கறேன். நூல் அவங்களே கொடுத்துடுவாங்க. ஊசி நூலை வச்சுக்கிட்டுக் கையாலயே பின்றதுதான் வேலை. ஒரு ஸ்வெட்டருக்கு இவ்வளவுன்னு கூலி மட்டும் கொடுப்பாங்க. நீங்க வீட்டில இல்லாத நேரத்தில முடிஞ்ச அளவுக்குப் பின்னுவேன். அதிகமா சம்பாதிக்க முடியாது. மாசத்துக்கு ஆயிரம் ரெண்டாயிரம் வரும். அதிலேந்து பக்கத்தில இருக்கற ஏழைப் பையங்க சில பேருக்குச் சிறிய அளவில உதவி செஞ்சுக்கிட்டு வரேன்."

"நான் வியாபாரம் பண்ணி லட்சக்கணக்கில சம்பாதிக்கறேன்.ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு நீ கூலிக்கு வேலை செய்யணும்னு உனக்கென்ன தலையெழுத்தா?" என்றார் செல்வநாயகம் அதிர்ச்சியுடனும் கோபத்துடனும்.

"ஒத்தருக்கு ஒரு பைசாக் கொடுக்காம சுயநலமா வாழறது எனக்குப் பிடிக்கல. அதனால என்னால முடிஞ்ச இந்தச் சின்ன உதவிகளை செஞ்சுக்கிட்டு வரேன். தயவு செஞ்சு இதையும் செய்யக் கூடாதுன்னு என்னைத் தடுத்துடாதீங்க!" என்றாள் விசாலாட்சி செல்வநாயகத்தைப் பார்த்துக் கை கூப்பியபடி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 438:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.    

பொருள்:
பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வது எல்லாக் குற்றங்களையும் விடத் தனிப் பெருங் குற்றமாகக் கருதப்படும்.
அறத்துப்பால்                                                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...