Friday, December 18, 2020

435. தொலைபேசியில் வந்த செய்தி

"அப்பா! என் நண்பர்களோட மகாபலிபுரம் போகப் போறேன். பத்தாயிரம் ருபா வேணும்" என்றான் விக்ரம்

"அதுக்கு பத்தாயிரம் ரூபா எதுக்கு?" என்றான் சிவம்.

"இல்லப்பா! என் பிறந்த நாளுக்கு என் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கணும்."

"உன் பிறந்த நாள் வந்து மூணு மாசம் ஆச்சு. அதுக்குத்தான் முப்பதாயிரம் செலவு பண்ணி பார்ட்டி கொடுத்தியே!" என்றாள் அவன் அம்மா லீலா.

"இல்லம்மா. சில பேருக்கு அப்ப விட்டுப் போச்சு. அவங்க கேக்கறாங்க!"

"அதெல்லாம் வேண்டாம். அடுத்த பிறந்த நாளுக்குக் கொடுக்கறேன்னு சொல்லிடு" என்றாள் லீலா.

"சரி அஞ்சாயிரம் கொடுக்கறேன். அதுக்குள்ள ஏதாவது செஞ்சுக்க" என்றான் சிவம்.

தந்தை கொடுத்த பணத்தை மௌனமாக வாங்கிக் கொண்டு அங்கிருந்து அகன்றான் விக்ரம்.

"இங்க பாருங்க. விக்ரம் நிறைய செலவு பண்றான். நீங்க கொஞ்சம் ஸ்டிரிக்டா இருங்க. எங்கிட்ட வேற அடிக்கடி பணம் கேக்கறான். நான் நூறு இருநூறுக்கு மேல கொடுக்கறதில்ல" என்றாள் லீலா கணவனிடம்.

"விடு! சின்ன வயசு. நம்மகிட்ட பணம் இருக்குங்கறதால கொஞ்சம் அதிகமா செலவழிக்கறான். காலேஜில படிக்கறப்ப நண்பர்கள் கிட்ட தன் பெருமையைக் காட்ட அவங்களை ஹோட்டலுக்கு அழைச்சுக்கிட்டுப் போறது, அவங்களோட ஊர்  சுத்தறதுன்னு செய்யறான். கொஞ்சம் விட்டுப் பிடிப்போம், காலப்போக்கில அவனுக்குத் தானே பொறுப்பு வந்துடும்" என்றான் சிவம்.

ரு வாரம் கழித்து லீலா வீட்டில் இல்லாதபோது சிவத்திடம் வந்த விக்ரம், "அப்பா! போன வாரம் மஹாபலிபுரம் போனப்ப என் நண்பனோட மொபைல்ல ஃபோட்டோ எடுத்துக்கிட்டிருந்தேன். அப்ப அது கை தவறிக் கீழே விழுந்து பாறையில பட்டு உடைஞ்சு போச்சு. அது ரொம்ப விலை உயர்ந்த ஃபோன். இருபதாயிரம் ரூபா. அவனுக்கு நான் வேற ஃபோன் வாங்கிக் கொடுக்கணும். அம்மாக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க. அதான் நீ தனியா இருக்கறப்ப சொல்றேன்" என்றான்.

"உங்கம்மா சொல்றது சரியாத்தான் இருக்கு. மஹாபலிபுரம் போறேன், நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கறேன்னு சொல்லிட்டு, இன்னொத்தன் ஃபோனை உடைச்சுட்டு வந்திருக்க! அதுக்கு இருபதாயிரம் ரூபா தண்டம் அழணுமா? சரி. ஏ டி எம்ல பணம் எடுத்துக் கொடுக்கறேன். இனிமே எங்கிட்ட பணம்  கேக்காதே! கேட்டா நான் கொடுக்க மாட்டேன்!" என்றான் சிவம் கோபத்துடன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு லீலா தன் கணவனிடம், "என்னங்க, உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். விக்ரமோட நண்பன் ஒத்தனைத் தற்செயலா ஒரு கடையில பாத்தேன். மஹாபலிபுரம் போனதைப் பத்திக் கேட்டேன். அவங்க யாரும் மஹாபலிபுரம் போகவே இல்லையாம். விக்ரம் நம்ப கிட்ட பொய் சொல்லி இருக்கான். பணத்தை வேற எதுக்கோ செலவு பண்ணி இருக்கான்!" என்றாள்.

அதிர்ச்சி அடைந்த சிவம், "சாயந்திரம் காலேஜிலேந்து வந்த்தும் கேக்கறேன்" என்றான். மஹாபலிபுரத்தில் நண்பனின் மொபைல் ஃபோனை உடைத்து விட்டதாகச் சொல்லி விக்ரம் தன்னிடம் இருபதாயிரம் ரூபாய் வாங்கிச் சென்றதை நினைத்ததும் அவனுக்கு பகீரென்றது. 

அதை மனைவியிடம் சொல்லலாமா என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு, எப்படியும் மாலை விக்ரமை விசாரிக்கும்போது, அது மனைவிக்குத் தெரிந்து விடும் என்று நினைத்துப் பேசாமல் இருந்தான்.

ஆனால் மாலையில் மகனிடம் பேசும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. விக்ரம் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் போதை மருந்து விற்கும் ஒருவனிடம் போதை மருந்து வாங்கிக் கொண்டிருந்தபோது, போதை மருந்து விற்கப்படுவது பற்றித் தகவல் கிடைத்து அங்கே வந்த போலீஸால் அவன் கைது செய்யப்பட்டதாகக் காவல் நிலையத்திலிருந்து சிவத்துக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது.   

அரசியல் இயல்
அதிகாரம் 44 
குற்றங்கடிதல்  
குறள் 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

பொருள்:
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்..
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...