Tuesday, December 15, 2020

433. ஹோட்டல் அறை

"செமினாருக்கான ஏற்பாடெல்லாம் எப்படி நடந்துக்கிட்டிருக்கு?" என்றார் டைரக்டர் சுதர்சனம்.

"எல்லா ஏற்பாடுகளும் செஞ்சுட்டோம் சார்!" என்றார் நிர்வாக அதிகாரி கணேசன்..

"நல்லது. டெலிகேட்கள், சிறப்பு விருந்தாளிகள் எல்லாரும் வந்ததும் எங்கிட்ட சொல்லுங்க. நான் அவங்களையெல்லாம் அவங்க அறையில போய்ப் பாத்துட்டு வரேன்."

"சார்! நீங்க போக வேண்டிய அவசியம் இல்ல சார். நான் அவங்களைப் பாத்து அவங்க சௌகரியங்களை கவனிச்சுக்கறேன். நீங்க அவங்களை நாளைக்கு செமினார் ஹால்ல சந்திச்சாப் போதும்."

"பரவாயில்ல. இது ஒரு கர்ட்டிஸி. நமக்கு புரோட்டோகால் எல்லாம் எதுவும் கிடையாதே! நாம இந்த செமினாருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறோம், இதில கலந்துக்கிறவங்களை எந்த அளவுக்கு மதிக்கிறோம்கறதை அவங்களுக்குத் தெரிவிக்கிற மாதிரி இருக்கும்" என்றார் சுதர்சனம்.

ன்று மாலை டெலிகேட்களும், சிறப்பு விருந்தினர்களும் தங்கி இருந்த ஹோட்டல் அறைகளுக்கு கணேசனுடன் சென்று அனைவரையும் சந்தித்து விட்டு வந்தார் சுதர்சனம்.

சந்திப்பு முடிந்து வெளியில் வந்து இருவரும் காரில் ஏறிக் கொண்டதும், "கணேசன்! ஏன் ஒரு ரூமில மட்டும் ரெண்டு பேர் தங்கி இருக்காங்க?" என்றார் சுதர்சனம்.

கணேசன் சற்றுத் தயங்கி விட்டு, "இல்லை சார். பொதுவா இந்த மாதிரி செமினார்களுக்கு வரதா சொல்றவங்கள்ள ஒண்ணு ரெண்டு பேரு வர மாட்டாங்க. அதனால எப்பவுமே ரெண்டு ரூம் குறைவாத்தான் போடுவோம். அப்படி எல்லாரும் வந்துட்டா, அப்புறம் ரூம் எடுத்துப்போம். 

"இந்தத் தடவை எல்லாரும் வந்துட்டாங்க. இந்த ஹோட்டல்ல அறை காலியா இல்ல. வேற ஹோட்டல்ல போட்டா ரொம்ப தூரமாயிடும். அதோட ஒத்தரை மட்டும் அங்கே தனியாத் தங்க வைக்கணும். அதனால ஒரு ரூம்ல மட்டும் ரெண்டு பேரைத் தங்க வச்சிருக்கோம். 

"இந்த ஹோட்டல்ல அறை இல்ல, வேற ஹோட்டல்ல அறை கொடுக்கறோம்னு அவங்க கிட்ட சொன்னேன். அவங்க ரெண்டு பேரும் 'வேண்டாம், இங்கேயே ஒரே ரூம்ல இருந்துக்கறோம்'னு சொல்லிட்டாங்க" என்றார்.

"இது ரொம்ப மோசம் கணேசன். எனக்கு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா இதை நான் அனுமதிச்சிருக்க மாட்டேன்" என்றார் சுதர்சனம் சற்றுக் கோபத்துடன்.

"சார்! தப்பா நினைக்காதீங்க. நாம ஒரு புரொடக்டிவிடி கவுன்சில் நடத்தறோம். செலவுகளைக் குறைச்சு உற்பத்தித் திறனை அதிகரிக்கறதுதான் நம்ம நோக்கம். அதனால செலவுகளைக் குறைக்கறதில நாம முன்னோடியா இருக்கணும்னு பழைய டைரக்டர் சொல்லுவாரு. இது கூட அவரோட யோசனைதான்."

"பழைய டைரக்டர் காட்டின வழிப்படி நீங்க நடந்துக்கிட்டீங்கன்னா அதுக்கு நான் உங்களைக் குத்தம் சொல்லல. ஆனா இது தவறான அணுகுமுறை. இது சிக்கனம் இல்ல, ஒருவகை அலட்சியம்னுதான் நான் சொல்லுவேன்."

"சார்! இது ரொம்ப சின்ன விஷயம். வரவங்க யாரும் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க!"

"சின்ன விஷயம்னு நினைக்காதீங்க. இது நமக்குப் பெரிய அளவில கெட்ட பேரை உண்டாக்கலாம். இப்ப அட்ஜஸ்ட் பண்ணிக்கறவங்க நாளைக்கு  மத்தவங்க கிட்ட இதை ஒரு குறையாச் சொல்லலாம். 

"ஆங்கிலத்தில ஒரு கவிதை இருக்கு. ஒரு ஆணி குறைவா இருந்ததால, ஒரு சேனையோட குதிரைப்படையில ஒரு குதிரைக்கு லாடம் அடிக்க முடியலையாம், அந்த ஒரு குதிரை குறைஞ்சதால, அந்தச் சேனை போர்ல வெற்றியை இழந்துடுச்சாம். 

"பாரதியாரோட 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்'கற கவிதையைப் படிச்சிருப்பீங்க. நெருப்பில குஞ்சு, பெரிசுன்னு உண்டான்னு கேட்டு முடிச்சிருப்பார் பாரதியார். 

"அது மாதிரி தவறுல பெரிய தவறு சிறிய தவறுன்னு பாக்காம எந்தத் தவறும் நடக்காம பாத்துக்கறதுதான் புத்திசாலித்தனம். 

"என் மேலேயும் தப்பு இருக்கு. எத்தனை பேர் வராங்க, எத்தனை ரும் போட்டிருக்கீங்கன்னு நான் கேட்டிருந்தா இந்தத் தவறு நடந்திருக்காது. இனிமே இப்படிப்பட்ட தவறு நடக்காம பாத்துக்கங்க. நானும் இனிமே அதிக கவனமா இருக்கேன்" என்றார் சுதர்சனம்.

அரசியல் இயல்
அதிகாரம் 44 
குற்றங்கடிதல்  
குறள் 433:
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

பொருள்:
பழிக்கு அஞ்சுபவர்கள் தினையளவு குற்றம் ஏற்பட்டாலும் அதைப் பனையளாவானதாகக் கருதிக் குற்றம் ஏற்படாமல் காத்துக் கொள்வார்கள்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...