Tuesday, July 14, 2020

416. நண்பர்கள்

தனராஜ் அதிகம் படிக்கவில்லை. அவன் குறைந்த படிப்புக்கு ஏற்ற வகையில் ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு சுமாரான வேலைதான் அவனுக்குக் கிடைத்தது. அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தனராஜும், சுதாகர், கணேஷ் என்ற அவனுடைய இரு நண்பர்களும் சேர்ந்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் இருந்து வந்தனர். 

மூன்று நண்பர்களுக்கிடையே நல்ல புரிதல் இருந்தது. அதனால் சமையல் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை அவரவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டனர். 

மூவரில் சுதாகர் நல்ல வேலையில் இருந்தான். அவன் ஒரு மடிக்கணினி வைத்திருந்தான். இன்டர்நெட் இணைப்பும் வைத்திருந்தான். அதற்கான மாதாந்தரக் கட்டணத்தை அவன் தனிப்பட்ட முறையில் கட்டி வந்தான். ஆயினும் அவன் பயன்படுத்தாதபோது கணினியை மற்ற இருவரும் பயன்படுத்தலாம் என்று கூறி இருந்தான்.

திரைப்படங்களை ஒளிபரப்பும் சில சேவைகளுக்கும் அவன் சந்தா கட்டி இருந்ததால் விடுமுறை நாட்களில் சில சமயம் மூன்று பேரும் சேர்ந்து கணினியில் புதிய திரைப்படங்கள் பார்ப்பதுண்டு.  

கணேஷுக்குத் திரைப்படங்கள் பார்ப்பதில் ஒரு வெறியே உண்டு. எனவே கணினியை அதிகம் பயன்படுத்துபவன் அவன்தான். பொதுவாக வீட்டில் அதிக நேரம் இருப்பவன் அவன்தான் என்பதால் அவனுக்கு இது வசதியாக இருந்தது.

மூவரில் வீட்டில் குறைந்த நேரம் இருப்பவன் தனராஜ்தான். தினமும் இரவில் அலுவலகத்திலிருந்து அவன் வீடு திரும்ப தாமதமாகி விடும். பெரும்பாலும் அவன் வீட்டுக்குத் திரும்பும் நேரத்தில் மற்ற இருவரும் உறங்கப் போயிருப்பார்கள். அவனுக்கான இரவு உணவை எடுத்து வைத்திருப்பார்கள். 

" டேய், சுதாகர்! தனராஜ் தினமும் வீட்டுக்கு வரதுக்கே லேட் ஆயிடுது. சாப்பிட்டுட்டுப் பாத்திரங்களைக் கழுவி வச்சுட்டு, கிச்சனை சுத்தம் பண்ணிட்டுக் கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர்ல சினிமா வேற பாக்கறான் போலருக்கு. எனக்குத்தான் சினிமாப் பைத்தியம்னு நினைச்சேன். அவன் எனக்கு மேல இருப்பான் போலருக்கு. தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு சினிமா பாக்கறான்!" என்றான் கணேஷ்.

"என்னிக்காவது தூக்கம் வராம இருந்தப்ப பாத்திருப்பான்" என்றான் சுதாகர்.

"இல்லடா. நிறைய தடவை பாத்திருக்கேன். பன்னண்டு மணிக்கு மேல கூட உக்காந்து பாத்துக்கிட்டிருக்கான்" என்றான் கணேஷ்.

"சரி விடு. அவனுக்கு அது பிடிச்சிருக்கு போல இருக்கு!" என்றான் சுதாகர்.

ன்று இரவு சுதாகர் தற்செயலாகக் கண் விழித்தபோது பக்கத்து அறையில் விளக்கு எரிந்தது. அறைக்கு வெளியே நின்று பார்த்தபோது தனராஜ் காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு கணினியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். 

கணேஷ் சொன்னது சரிதான் போலிருக்கிறது. மணியைப் பார்த்தான். பன்னிரண்டரை!

அப்படி என்ன பார்த்துக் கொண்டிருக்கிறான் இந்த நேரத்தில்?

சந்தடி செய்யாமல் தனராஜ் அருகே சென்று, அவன் பின்னே நின்று பார்த்தான் சுதாகர் .

தனராஜ் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு சுய முன்னேற்றப் பேச்சாளரின் வீடியோ!

பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை விட, கேட்டுக் கொண்டிருந்தான் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

"எதுக்குடா இதை பாத்துக்கிட்டிருக்க, இவ்வளவு லேட்டா, தூங்காம?" என்றான் சுதாகர்.

தனராஜ் திடுக்கிட்டுத் திரும்பினான். "ஒண்ணுமில்ல சும்மாதான்!" என்றான் ஹெட்ஃபோனைக் கழற்றியபடியே. 

"நாள் முழுக்க வேலை செஞ்சுட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறதுக்காக ஏதோ ஜாலியா சினிமா பாத்துக்கிட்டிருக்கேன்னு நினைச்சா, இது மாதிரி சீரியஸான பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்க!" என்றான் சுதாகர்.

"ஒண்ணும் இல்ல. நான் அதிகமாப் படிக்கல. முடிஞ்ச வரைக்கும் தினம் ஒரு அரை மணி நேரம் ஏதாவது உருப்படியான விஷயங்களைக் கேக்கலாமேன்னுதான் இது மாதிரி பேச்சையெல்லாம் கேட்டுப் பாக்கறேன்" என்றான் தனராஜ் சங்கடத்துடன்.

"என்னென்ன டாபிக் எல்லாம் கேக்கற?"

"மோட்டிவேஷன், பொது அறிவு, விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,  சில சமயம் ஆன்மிகம் கூட!" என்றான் தனராஜ் கொஞ்சம் தயக்கத்துடன். 

"இதுக்கு ஏண்டா இவ்வளவு சங்கடப்படற? நீ செய்யறது ரொம்ப நல்ல விஷயம். உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. தொடர்ந்து கேளு. ஆனா உடம்பைப் பாத்துக்க. தூக்கத்தைக் கெடுத்துக்காமப் பாத்துக்க!" என்று சொல்லி விட்டு அவன் முதுகில் தட்டி விட்டுத் தன் தூக்கத்தைத் தொடர்வதற்காகப் படுக்கைக்குச் சென்றான் சுதாகர்.  

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 416:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

பொருள்:
சிறிய அளவுக்காவது நல்ல விஷயங்களைக் கேட்டறிய வேண்டும். எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்கு அது நமக்குப் பெருமையை அளிக்கும்.

Read 'Friends' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Friday, July 10, 2020

415. நண்பரிடம் கேட்ட ஆலோசனை

"இவ்வளவு வருஷமா உங்ககிட்ட நம்பிக்கையா வேலை செஞ்ச சங்கர் இப்படிப் பண்ணிட்டானே!" என்றாள் சாந்தா அங்கலாய்ப்புடன். 

"பணத்தாசை யாரை விட்டது? ரெண்டு லட்சம் ரூபாயைப் பார்த்ததும் சபலம் வந்துடுச்சு போலருக்கு. பாங்க்ல கட்டச் சொல்லிக் கொடுத்த பணத்தை எடுத்துக்கிட்டுக் கம்பி நீட்டிட்டான்" என்றார் செல்வரங்கம்.

"இதுக்கு முன்னால எவ்வளவோ தடவை பாங்க்ல பணத்தைக் கட்டிட்டு வந்திருக்கானே!"

"அதெல்லாம் சின்னத் தொகை. அம்பதாயிரம் ரூபாய்க்குள்ளதான் இருக்கும். நேத்திக்கு ஒரு பெரிய வியாபாரம் நடந்ததால இவ்வளவு கேஷ் சேர்ந்து போச்சு. ரெண்டு லட்ச ரூபாயைப் பாத்ததும் சபலம் வந்துடுச்சு. எடுத்துட்டு ஓடிட்டான். இது அவனுக்கு எவ்வளவு நாளைக்குத் தாங்கும்? பெண்டாட்டி பிள்ளைங்களைக் கூட விட்டுட்டு ஓடி இருக்கானே!" என்று புலம்பினார் செல்வரங்கம்.

"ஆமாம். அவன் வீட்டில விசாரிச்சீங்களா?"

"அவன் வீட்டுக்குப் போய் விசாரிச்சுட்டேன். 'என்னையும் புள்ளைங்களையும் விட்டுட்டுப் போயிட்டாரே, நான் என்ன பண்ணுவேன்'னு அவன் பெண்டாட்டி கதறி அழறா!"

"சரி. போலீஸ்ல சொல்லிட்டீங்களா?"

"இனிமேதான் சொல்லணும்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்  செல்வரங்கம்.

ற்று நேரம் கழித்து  செல்வரங்கம் வீட்டுக்குத் திரும்பி வந்ததும், "என்ன போலீஸ்ல புகார் கொடுத்தீட்டிங்களா?" என்றாள் சாந்தா.

"இல்ல. இனிமேதான் போகணும்."

"இப்ப எங்கே போயிட்டு வந்தீங்க?'

"சிவராமனைப் பாத்துட்டு வந்தேன்."

"அவரை எதுக்குப் பாக்கணும்? அவரு என்ன போலீசா, இல்ல ஓடிப்போனவன் எங்க இருக்கான்னு மை போட்டு சொல்றவரா?" என்றாள் சாந்தா, சற்று எரிச்சலுடன்.

"இங்க பாரு சாந்தா! சிவராமன் என் நண்பன் மட்டும் இல்ல. எனக்கு ஒரு வழிகாட்டியும் கூட."

"ஏங்க, அவரு ஒரு சாதாரண மனுஷன். ஏதோ கொஞ்சம் படிச்சிருக்காரு, விஷயம் தெரிஞ்சவரு. அதுக்காக, இதுக்கெல்லாம் கூட அவர் கிட்ட யோசனை கேட்கணுமா?"

"சாந்தா! சிவராமனை மாதிரி ஒழுக்கமா, நேர்மையா இருக்கறவங்க கிட்ட யோசனை கேட்டு நடந்துக்கிட்டா, நான் செய்யற காரியத்தில் தப்பு நடக்காம பாத்துக்க முடியுங்கறது என்னோட அனுபவம். மகாபாரதத்தில வர விதுரர் நேர்மையும் ஒழுக்கமும் கொண்டவர். திருதராஷ்டிரனோட தம்பிதான் அவர், ஆனாலும் திருதராஷ்டிரன் அவர்கிட்ட யோசனை கேப்பாரு. ஆனா அவர் சொன்னபடி திருதராஷ்டிரர் நடந்துக்கல. துரியோதனன் அவரை மதிக்கவே இல்ல. ஆனா பாண்டவர்கள் எப்பவுமே அவர்கிட்ட யோசனை கேட்டு நடந்தாங்க. மகாபாரதக் கதையில யாருக்கு என்ன ஆச்சுன்னுதான் உனக்குத் தெரியுமே!"

"அதெல்லாம் புராணக் கதைங்க. நடைமுறை வாழ்க்கை இல்லை."

'சரி, நம்ப காலத்துக்கே வருவோம். மகாத்மா காந்தி எவ்வளவு பெரிய மனுஷன்! அவரு ஒரு தடவை உண்ணாவிரதம் இருக்கச்சே, உண்ணாவிரதம் இருக்கும்போது எலுமிச்சம்பழச் சாறு குடிக்கலாமான்னு ராஜாஜி கிட்ட கேட்டாராம். அதுக்கு ராஜாஜி, எலுமிச்சம்பழத்தில ஊட்டச்சத்து இருக்கு, அதனால உண்ணாவிரதம் இருக்கறப்ப எலுமிச்சம்பழச் சாறு குடிக்கிறது சரியா இருக்காதுன்னு சொன்னாராம்! அதன்படியே காந்தியும் உண்ணாவிரதம் இருக்கறப்ப தண்ணியை மட்டும் குடிச்சாரு. தனக்குச் சரியா வழி காட்டினதால ராஜாஜியை தன்னோட 'மனச்சாட்சியோட காவலர்'னு காந்தி சொல்லுவாரு!" 

"சரி. உங்க நண்பர் என்ன சொன்னாரு?"

"பாதிக்கப்பட்டது நான் மட்டும்தான் நான் நினைச்சுக்கிட்டிருந்தேன். சங்கரோட குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்குங்கறதை நினைவில் வச்சுக்கிட்டு நடந்துக்கச் சொல்லி சிவராமன் சொன்னான். ஒரு தப்பும் பண்ணாத அவங்களுக்கு இன்னும் அதிக பாதிப்பு வராம பாத்துக்கணும்னு சொன்னான். போலீஸ்காரங்க சங்கர் குடும்பத்தைதான் முதல்ல விசாரிப்பாங்க. அதனால அவங்க மேல தப்பு இல்லேன்னு போலீஸ்ல நான் சொல்லி அவங்களுக்குக் கஷ்டம் வராம பாத்துக்கறதோட, இந்த நிலைமையிலேந்து அவங்க மீண்டு வரதுக்கு என்னால ஆன உதவியை அவங்களுக்கு செய்யணும்னு சொன்னான். அவன் சொன்னப்பறம்தான் எனக்கு இது தோணலியேன்னு உறைச்சுது. அதனால போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறப்பவே சங்கரோட மனைவியையும் அழைச்சுக்கிட்டுப் போய் எல்லாத்தையும் விவரமா சொன்னா, போலீஸ்காரங்க புரிஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்."

செல்வரங்கம் சாந்தாவின் முகத்தைப் பார்த்தார்.

அவள் எதுவும் சொல்லவில்லை.     

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 415:
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

பொருள்:
வழுக்கல் மிகுந்த பாதையில் உதவும் ஊன்றுகோல் போல் ஒழுக்கம் உடையவர்களின் சொற்கள் ஒருவருக்கு உதவும்.

Read 'Advice Sought From A Friend' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Saturday, July 4, 2020

414. விட்டதும் பெற்றதும்

அந்த கிராமத்துப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நான் மாற்றப்பட்டு அங்கே சென்றபோது எனக்கு அறிமுகம் ஆனவர்தான் சௌரிராஜன். 

சௌரிராஜனின் அப்பா அந்த ஊர் முன்சீஃபாக இருந்தவர். ஆனால் அவர் காலத்திலேயே முன்சீஃப் பதவிகள் ஒழிக்கப்பட்டு விட்டன. 

அவர் குடும்பத்துக்கு ஊரில் ஒரு மரியாதை இருந்தது, ஊரில் அதிக நிலபுலன் உள்ள, வசதி படைத்த குடும்பம் என்பதற்கும் மேல், மற்றவர்களுக்கு உதவும் குணம் அவர்கள் குடும்பத்துக்கு ஊரில் ஒரு நற்பெயரை ஈட்டிக் கொடுத்திருந்தது. 

பள்ளியில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஓரிரு நாட்கள் கழித்து மரியாதை நிமித்தமாக சௌரிராஜனின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தேன்.

முதல் சந்திப்பிலேயே எங்கள் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் ஏற்பட்டு விட்டது. 

அதன் பிறகு நான் அவர் வீட்டுக்குச் செல்வதும், அவர் என் வீட்டுக்கு வருவதும் அடிக்கடி நிகழ்ந்தன. 

என் மனைவி கூட ஒருமுறை கேட்டாள், "நீங்க படிச்சுட்டு வாத்தியாரா இருக்கீங்க. அவரு படிக்காதவாரு. நீங்க ரெண்டு பேரும் எப்படி இவ்வளவு நெருக்கமானீங்க?" என்று. 

தான் படிக்கவில்லை என்பதில் சௌரிராஜனுக்கு மிகவும் வருத்தம் உண்டு. 

"சின்ன வயசில எனக்குப் படிப்பு ஏறல. வயல் வேலையிலதான் ரொம்ப ஈடுபாடு இருந்தது. அஞ்சாவது பாஸ் பண்றதுக்கே ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஒருவேளை முன்சீஃப் பையன்னுட்டு ஸ்கூல்ல பாஸ் போட்டுட்டாங்களோ என்னவோ தெரியல!

"அப்ப, இந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் அஞ்சாவதுக்கு மேல கிடையாது. ஆறாவது வகுப்பு படிக்க பக்கத்து ஊர்ல இருக்கற வேற ஊருக்குத்தான் போகணும். 'எனக்குப் படிப்பு வேண்டாம்ப்பா'ன்னு எங்க அப்பாகிட்ட சொன்னேன். அவரும் சரின்னு விட்டுட்டாரு. ஆனா படிக்காம இருந்துட்டேனேன்னு இப்ப வருத்தப்படறேன்!" என்றார் என்னிடம் ஒரு நாள். 

"படிக்காட்டாலும் நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!" என்றேன் நான். 

அப்போது நான் சொன்னது உபசாரத்துக்குத்தான் என்றாலும், நான் சொன்னது உண்மைதான் என்று சில நாட்களில் புரிந்து கொண்டேன். 

பல விஷயங்களையும் பற்றி ஓரளவு அவர் அறிந்து வைத்திருப்பது அவரிடம் தொடர்ந்து பழகியபோது எனக்குப் புரிந்தது.

சில சமயம், "இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று நான் ஒருமுறை வியந்து கேட்டபோது, "எல்லாம் உங்களை மாதிரி படிச்சவங்க சொல்லிக் கேட்டுத் தெரிஞ்சுக்கறதுதான்" என்றார் அவர்.

ருமுறை சதாசிவம் என்ற அவர் நண்பர் வீட்டுக்குச் சென்றபோது என்னையும் அழைத்துச் சென்றார் சொரிராஜன். "பாவம். அவருக்கு அடிக்கடி ஏதாவது உடம்புக்கு வந்துடுது. வருமானமும் சரியா இல்ல. ரொம்ப கஷ்டப்படறாரு. கொஞ்சம் ஆறுதல் சொல்லிட்டு வரலாம்" என்றார் போகும் வழியில்.

"அதுக்கு நான் எதுக்கு?" என்றேன்.

"சும்மா வாங்க. உங்களை மாதிரி புதுசா ஒருத்தர் வந்து நலம் விசாரிச்சா அவங்களுக்கு ஆறுதலா இருக்கும் இல்ல?" என்றார் சௌரிராஜன்.

அவர்கள் வீட்டுக்குச் சென்று சற்று நேரம் பேசிய பிறகு, சௌரிராஜன் அவர் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு பழைய புத்தகத்தை  எடுத்து சதாசிவத்திடம் கொடுத்தார். "இந்தா! இது சுந்தர காண்டம். என் வீட்டில இருந்ததுதான். உனக்காகத்தான் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்!" என்றார் 

"இது எதுக்கு?" என்றார் சதாசிவம் புத்தகத்தை வாங்கியபடியே.

"பொதுவா சுந்தர காண்டம் படிச்சா பிரச்னைகள் தீர்ந்து நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க. ஆனா இவ்வளவு பெரிய புஸ்தகத்தை யார் படிக்கறதுன்னு நினைச்சு ரொம்ப பேரு இதை முயற்சி செஞ்சு கூட பாக்க  மாட்டாங்க.

"அசோக வனத்திலே சீதை விரக்தி அடைஞ்சு தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிக்கச்சே, அவங்களுக்கு சில நல்ல சகுனங்கள்ளாம் வருது. அதுக்கப்பறம் அனுமார் வந்து அவங்களைப் பாத்து நம்பிக்கை கொடுக்கறாரு. சுந்தர காண்டம் 29ஆவது சர்க்கத்தில அந்த சகுனங்களை விவரிச்சிருக்காரு வால்மீகி.

"இதில எட்டு சுலோகம்தான் இருக்கு. இதை சுலபமாப் படிக்கலாம். இதில சுலோகங்கள் சம்ஸ்கிருத்தத்திலேயும், தமிழ்லேயும் இருக்கு. சுலோகங்களோட அர்த்தமும் இருக்கு. நீயோ, உன் சம்சாரமோ தினம் இதைப் படிங்க. நல்லது நடக்கும்.

"என் சம்சாரம் படுத்த படுக்கையாக் கிடந்தப்ப நானே கஷ்டப்பட்டு எழுத்துக் கூட்டி இதைப் படிச்சேன். ஒரு வாரத்தில அவ எழுந்து உக்காந்துட்டா. உனக்கும் அது மாதிரி நல்லது நடக்கும்" என்று விளக்கினார் சௌந்தரராஜன். 

தாசிவத்தின் வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் இறங்கியதும், "இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் படிச்சவன்னு பேரு. எனக்கே இந்த விவரம் எல்லாம் தெரியாதே! ஏன், ஆன்மீக விஷயங்கள்ள ஈடுபாடு உள்ளவங்க பல பேருக்குக் கூட இது தெரியாதே!" என்றான் நான் வியப்புடன்.

"எனக்கு இந்த ஊர்ல ராமுன்னு ஒரு சிநேகிதன் இருந்தான். படிச்சவன், நிறைய விஷயம் தெரிஞ்சவன். அவன்கிட்டதான் நான் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். அவன் இப்ப இங்க இல்ல. பம்பாய்க்குப் போய் அங்கேயே செட்டில் ஆயிட்டான். ஆனா அவனுக்கு பதிலா உங்களை மாதிரி புதுசா சில சிநேகிதர்கள் எனக்குக் கிடைச்சுக்கிட்டுத்தானே இருக்கீங்க? உங்ககிட்டேருந்தெல்லாம் நான் நிறையக் கத்துக்கலாமே!" என்றார் சௌரிராஜன் சிரித்தபடி.

சௌரிராஜன் அதிகம் படிக்கவில்லை என்பது அவருக்கு ஒரு குறையே இல்லை என்று நினைத்துக் கொண்டேன் நான். 
  
பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 414:
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

பொருள்:
கல்வி கற்காதவனாக இருந்தாலும் கற்றவர்களிடம் விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அது வாழ்க்கையில் தளர்ச்சி அடைந்த நேரத்தில் ஊன்றுகோல் போல் துணையாக இருக்கும்.

Read 'Missed and Gained' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...