
அவன் தன் அறையில் தனியாக இருந்தபோது, அவனைப் பார்க்க கன்னையா வந்தார்.
கன்னையா அவனுடைய நிறுவனத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றுபவர். அதிகம் படிக்காதவர் என்றாலும், நிறுவனத்தின் ஒரு மூத்த அதிகாரிக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் அவருக்கு உண்டு.
நிறுவனத்தின் பொது மேலாளர் உட்பட எல்லா மூத்த அதிகாரிகளும் அவரிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்வார்கள்.
அவருக்கென்று ஒரு குறிப்பிட்ட வேலை கிடையாது. அவரே விருப்பப்பட்டு எந்த வேலையையும் செய்யலாம். யாரும் அவரிடம் எதுவும் கேட்க மாட்டார்கள்.
கன்னையாவும் மூத்த அதிகாரிகளின் வேலைகளில் தலையிடாமல் தொழிலாளர்களையும் கீழ்நிலை ஊழியர்களையும் வழி நடத்தும் வேலையை மட்டும் செய்து வந்தார்.
சில சமயம் மூத்த அதிகாரிகளிடம் சில யோசனைகளைப் பணிவுடன் சொல்லுவார். அவர்களும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வார்கள். அவற்றை ஏற்பதா வேண்டாமா என்பதைப் பற்றி அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.
வாடிக்கையாளர்களையும், நிறுவனத்துக்குப் பொருட்கள் வழங்குபவர்களையும் கன்னையா அவ்வப்போது சென்று சந்திப்பார். அவர்கள் கூறும் நிறைகுறைகளைக் கேட்டறிந்து அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், சில சமயம் சுகுமாரிடமும் கூறுவார்.
கன்னையாவின் இந்தச் செயல்பாடு அவர்கள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களிடமும், பொருட்கள் வழங்குபவர்களிடமும் இருந்த உறவை மேம்படுத்தியதால், சுகுமார் அதை ஊக்குவித்தான்.
"வாங்க கன்னையா!" என்று அவரை வரவேற்றான் சுகுமார்.
"சார்! கம்பெனியை விரிவுபடுத்தப் போறீங்கன்னு கேள்விப்பட்டேன்" என்றார் கன்னையா.
"ஆமாம் கன்னையா. அது விஷயமாத்தான் ஆலோசனை செஞ்சுக்கிட்டிருக்கேன். கிட்டத்தட்ட எல்லாம் முடிவாயிடுச்சு!" என்றான் சுகுமார்.
"பாங்க் லோன் வாங்கித்தானே செய்வீங்க?" என்றார் கன்னையா.
"ஆமாம். பெரிய ப்ராஜக்ட் ஆச்சே! நிச்சயம் பாங்க் லோன் வாங்கித்தான் செய்யணும். எதுக்குக் கேக்கறீங்க?" என்றான் சுகுமார்.
"இல்லை சார்!...சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. மார்க்கெட்ல பல பேர்கிட்ட பேசறதால நான் கேள்விப்பட்ட விஷயங்களைச் சொல்றேன். இப்ப நம்ப பொருளுக்கு போட்டி அதிகமாகிக்கிட்டிருக்காம். வெளிநாட்டிலேந்து வேற நம்ப பொருளை அதிகமா இறக்குமதி பண்ண ஆரம்பிச்சுருக்காங்களாம். கொஞ்ச நாள்ள விலை கூடக் குறைஞ்சுடும்னு சொல்றாங்க. இந்த சமயத்தில கடன் வாங்கித் தொழிலைப் பெரிசு பண்ணப் போறதா சொல்றீங்களே, அதுதான் உங்ககிட்ட சொல்லாலாம்னுட்டு..." என்று இழுத்தார் கன்னையா.
சுகுமார் கோபத்தை அடக்கிக் கொண்டு, "இங்க பாருங்க கன்னையா! வாடிக்கையாளர்களை நீங்க அடிக்கடி பாத்துப் பேசறதால அவங்க பிரச்னைகளை நம்மளால புரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நம்பளால செயல்பட முடியுதுங்கறதுக்காகத்தான் நீங்க வாடிக்கையாளர்களைப் பாத்துப் பேசறதை நான் ஊக்குவிக்கறேன். ஆனா மார்க்கெட்ல யாராரோ பேசறதைக் கேட்டுக்கிட்டு வந்து எங்கிட்ட இப்படியெல்லாம் பேசாதீங்க. உங்க மேல நான் நிறைய மரியாதை வச்சிருக்கேன். அந்த மரியாதையைக் காப்பாத்திக்கங்க!" என்றான் கடுமையாக.
கன்னையா எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியேறினார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுகுமாரின் விரிவாக்கத் திட்டம் கைவிடப்பட்டது. காரணம் சுகுமார் இரண்டு லட்ச ரூபாய் கட்டணம் கொடுத்து நியமித்திருந்த மார்க்கெட் சர்வே நிறுவனம் அவர்கள் தயாரிக்கும் பொருளுக்குச் சந்தையில் போட்டி அதிகரித்து விட்டதாகவும், அரசாங்கத்தின் இறக்குமதிக் கொள்கை மாற்றம் காரணமாக இறக்குமதிகள் அதிகமாகி விட்டதாகவும், அதனால் அவர்களுடைய தற்போதைய விற்பனையை நிலைநிறுத்திக் கொள்வதே கடினமாக இருக்குமென்றும், சப்ளை அதிகரித்து விட்டதால், விரைவில் விலையில் வீழ்ச்சி ஏற்படக் கூடும் என்பதால், அவர்கள் லாபமும் பெரிதும் குறையும் என்றும் கணக்குகளுடன் கூடிய ஒரு விரிவான அறிக்கையை அளித்திருந்ததுதான்!
அரசியல் இயல்
அதிகாரம் 41
கல்லாமை
குறள் 404:கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
பொருள்:
கல்லாதவனுடைய அறிவு ஒருவேளை நன்றாகவே இருந்தாலும், கற்றவர்கள் அதை அறிவு என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
No comments:
Post a Comment