Thursday, May 7, 2020

405. இயந்திரக் கோளாறு

"சார்! இந்த பிரச்னை திரும்பத் திரும்ப வருது. மெஷினை ரீசெட் பண்ணினாத்தான் சார் சரியா வரும்!" என்றான் ஜீவா.

"உனக்கு எத்தனை வாட்டிப்பா சொல்றது? மெஷின் செட்டிங் மாசம் ஒரு தடவைதான் பண்ணணும். செட்டிங் பண்ணி ஒரு வாரம்தானேப்பா ஆச்சு?" என்றான் சூப்பர்வைசர் கோவிந்தராஜ். 

'"ஃபினிஷ் சரியா வரலியே சார்!" 

"அதுக்குத்தான் ரீபிராசஸ் பண்ணுன்னு சொல்லி இருக்கேன் இல்ல?"

"சார்! ஒவ்வொரு பீசையும் ரீபிராஸஸ் பண்ணினா எவ்வளவு நேரமாகும்? அதுக்கு ஒரு தடவை மெஷின் செட்டிங் பண்ணினா, நேரம் மிச்சம் ஆகும் இல்ல சார்? ப்ரொடக்‌ஷன் வேற குறையுது." 

"ப்ரொடக்‌ஷன் குறையறதைப் பத்தி எல்லாம் நீ பேசாதே! உனக்கு என்ன பீஸ் ரேட்லயா சம்பளம் கொடுக்கறாங்க? மாசச் சம்பளம்தானே!" என்றான் கோவிந்தராஜ் எகத்தாளமாக. 

கோவிந்தராஜ் அங்கிருந்து அகன்றதும், "இந்த ஆளுக்கு எதுவுமே தெரியாது. ஆனா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவான். நாம சொன்னாலும் கேட்டுக்க மாட்டான்!" என்று தன் சக தொழிலாளியிடம் அலுத்துக் கொண்டான் ஜீவா.

"ஏன், படிச்சிருக்காரு இல்ல?" என்றான் சக தொழிலாளி. 

"படிக்கவும் இல்ல ஒண்ணும் இல்ல. எங்கேயோ ஒரு ஃபேக்டரில ரெண்டு மூணு வருஷம் தொழிலாளியா இருந்திருக்கான். நம்ப முதலாளிக்கு தூரத்து சொந்தம். அவரு இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிச்சதும் சூப்பர்வைசர்ன்னு ஒரு வேலையை வாங்கிக்கிட்டு இங்க வந்துட்டான். நமக்குத் தெரிஞ்சது கூட இவனுக்குத் தெரியாது. இவனுக்கு மேல இருக்கறவங்க யாராவது வந்து சொன்னாத்தான் கேப்பான் போலருக்கு. அப்படி யாராவது வர வரையிலும் நாம போராடிக்கிட்டுத்தான் இருக்கணும் போலருக்கு!" என்று அலுத்துக் கொண்டான் ஜீவா.

தொழிற்சாலை விஸ்தரிப்புத் திட்டத்துக்காக ஒரு எஞ்சினியர் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிந்து ஜீவா கோவிந்தராஜிடம், "புதுசா வந்திருக்கிற எஞ்சினியர் இங்கே வந்து பாப்பாரா சார்?" என்றான்.

"அவரு புது ப்ராஜக்டுக்குத்தான் வந்திருக்காரு. இங்கல்லாம் வர மாட்டாரு!" என்றான் கோவிந்தராஜ். ஜீவாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இன்னொரு நாள் கோவிந்தராஜிடம் இதே பிரச்னை பற்றி  ஜீவா விவாதித்துக் கொண்டிருந்தபோது அங்கு புதிய மனிதர் ஒருவர் வந்தார்.

'குட்மார்னிங் சார்!" என்று அவருக்கு மரியாதை தெரிவித்தான் கோவிந்தராஜ். அவர்களுக்கு அருகே வந்ததும், "என்ன ஏதாவது பிரச்னையா?" என்றார் அவர்.

"ஒண்ணுமில்ல சார். பொதுவாத்தான் ப்ரொடக்‌ஷன் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்!" என்றான் கோவிந்தராஜ்.

அவர்தான் என்ஜினியராக இருக்க வேண்டும் என்று ஊகித்த ஜீவா, "சார்! ஒரு பிரச்னை தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கு. ஃபினிஷ் சரியா வர மாட்டேங்குது. மெஷினை ரீசெட் பண்ணணும்னு நினைக்கறேன். 'அது வேண்டாம், ரீபிராஸஸ் பண்ணு' ன்னு சார் சொல்றாரு. ரீபிராஸஸ் பண்ணினா நிறைய நேரமாகுது. ப்ரொடக்‌ஷன் குறையுது" என்றான்.

ஜீவாவை முறைத்துப் பார்த்த கோவிந்தராஜ், எஞ்சினியரிடம் திரும்பி, "சார்! மெஷினை  மாசத்துக்கு ஒரு தடவைதான் ரீசெட் பண்ணணும்ங்கறது முறை. இவன் தெரியாம பேசிக்கிட்டிருக்கான். நான் பாத்துக்கறேன் சார். நீங்க போங்க!" என்றான்.  

கோவிந்தராஜ் பேசியதை கவனிக்காதவர் போல் எஞ்சினியர் ஜீவாவைப் பாத்து, "மெஷினைத் திறந்து டூலைக் காட்டு" என்றார்.

ஜீவா திறந்து காட்டியதும் அருகில் சென்று அந்தப் பகுதியைக் கையால் தொட்டும் நகர்த்தியும் பார்த்த எஞ்சினியர், கோவிந்தராஜைப் பார்த்து, "இந்த பார்ட் தேஞ்சு போயிருக்கு. அதனால டூல் சீக்கிரமே பொசிஷனிலேந்து நழுவிடுது. இந்த பார்ட்டை மாத்தணும். இந்த மெஷின் தயாரிப்பாளருக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்க. அவங்க வந்து பாத்து பார்ட்டை மாத்திக் கொடுப்பாங்க. ஆனா இந்த பார்ட் மும்பையில இருக்கற அவங்க டெப்போலேந்துதான் வரணும்னு நினைக்கறேன். அதுக்கு சில வாரங்கள் ஆகலாம். அது வரைக்கும் இவர் சொல்றபடி மெஷின் ரீசெட்டிங் பண்றதுதான் வழி!" என்று சொல்லி ஜீவாவைப் பார்த்துப் புன்னகைத்தார். 

கோவிந்தராஜ் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு, "சரி சார்!" என்றான். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 405:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

பொருள்:
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தானே மதித்துப் பேசிக் கொள்ளும் பெருமை  கற்றவருடன் பேசும்போது அழிந்து விடும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...