Sunday, December 1, 2019

396. வற்றிய கிணறு

"ஏண்டா, நாம ரெண்டு பேரும் எம் எஸ் சி படிச்சுட்டு பி ஹெச் டியும் வாங்கிட்டு, இந்த காலேஜுக்கு வேலைக்கு வந்திருக்கோம். ஒரு வழியா படிப்பு முடிஞ்சுதேன்னு ஹாய்யா இருக்கறதை விட்டுட்டு இன்னும் ஏன் எப்பவும் லைப்ரரிலேந்து பாட சம்பந்தமா ஏதாவது புத்தகம் எடுத்து வந்து படிச்சுக்கிட்டே இருக்கே? இந்த வயசில காதல் கதையோ, மர்மக்கதையோ படிச்சாலும் பொருத்தமா இருக்கும்!" என்றான் ரகுராம்.

ரவிகுமார் பதில் சொல்லாமல் சிரித்தான்.

"இன்னொரு பி ஹெச் டி பண்ணப் போறியா என்ன?"

"இல்ல. சும்மாதான் படிக்கறேன். நாம படிச்சதை இன்னும் கொஞ்சம் நல்லாத் தெரிஞ்சுக்கலாமேன்னுதான்" என்றான் ரவிகுமார். 

"கிழிஞ்சுது. அவனவன் ஒரு டிகிரி வாங்கிட்டாலே தன்னை எல்லாம் தெரிஞ்ச மேதைன்னு நினைச்சுக்கறான். நாம பி எஸ் சி, அப்புறம் எம் எஸ் சி அப்புறம் பி ஹெச் டின்னு நம்ப இளமையிலே ஏழெட்டு வருஷத்தைப் படிக்கறதிலேயே கழிச்சுட்டோம். இனிமேயாவது ஜாலியா இருக்க வேண்டாமா?"

"நான் ஒண்ணும் பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி படிக்கலியே! நாம கல்வி கற்பிக்கிற துறையில இருக்கோம். கொஞ்சமாவது படிச்சுக்கிட்டே இருந்தாதான் நாம படிச்சதை நிலை நிறுத்திக்க முடியும்னு நான் நினைக்கிறேன்" என்றான் ரவிகுமார். 

"என்னவோ போ!" என்றான் ரகுராம்.

குராம் வீட்டில் தண்ணீர்ப் பிரச்னை வந்து விட்டது. மழை பொய்த்ததால் ஏற்பட்ட தண்ணீர்ப் பற்றாக்குறையால் அரசாங்கம் வழங்கி வந்த குழாய்த் தண்ணீர் நின்று போய் விட்டது.

பல நாட்களாகப் பயன்படுத்தாமல் இருந்த கிணற்றைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தான் ரகுராம். பழைய தண்ணீரை இறைத்து விட்டுக் கிணற்று நீரைப்  பயன்படுத்தலாம் என்று நினைத்துக் கிணறு இறைப்பவர் ஒருவரை அழைத்தான்.

பழைய தண்ணீரை அவர் இறைத்ததும் கிணற்றில் புதிதாக நீர் ஊறவில்லை. கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்த அந்த மனிதர் மேலே வந்து, "ஏன் சார், கிணத்தை ரொம்ப நாளாப் பயன்படுத்தலியா?" என்றார்.

"ஆமாம். குழாய்த் தண்ணியே எங்களுக்குப் போதும்கறதால கிணத்தைப் பயன்படுத்தல" என்றான் ரகுராமன்.

"அதான்! ஊத்தெல்லாம் அடைபட்டிருக்கு சார்! கிணத்துல தண்ணி எடுத்துக்கிட்டே இருந்தாதான் தண்ணி ஊறிக்கிட்டிருக்கும். நீங்க கிணத்தை அப்படியே போட்டு வச்சதால ஊத்தெல்லாம் மண் அடைச்சு மூடிப் போயிடுச்சு. மறுபடி கொஞ்சம் ஆழம் தோண்டி புது ஊத்துக்கள் திறந்தாதான் தண்ணி வரும்" என்றார் கிணறு இறைப்பவர்.  

ரகுராமுக்கு ஒரு கணம் ரவிகுமாரின் முகம் நினைவில் வந்து போயிற்று.

பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 396:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு.

பொருள்:
கிணற்றில் நாம் தோண்டத் தோண்ட  நீர் ஊறும். நாம் கற்கக் கற்க நம் அறிவு வளரும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
             அறத்துப்பால்                                                                     காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...