Saturday, January 19, 2019

391. அதிகப் பிரசங்கி!

"ஏம்ப்பா மெஷின் செட் அப் பண்றதுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?" என்றான் ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் சுதாகர்.

"தெரியும் சார்!" என்றான் மணி அமைதியாக.

"நீ இங்க ஒரு ட்ரெயினி. அது தெரியுமா உனக்கு?"

மணி பதில் சொல்லவில்லை.

"உனக்கு ஏதாவது தெரியலேன்னா எங்கிட்ட கேட்டுக்கணும். நீயா அதிகப் பிரசங்கித்தனமா எதுவும் செய்யக் கூடாது."

"நான் எதுவும் செய்யல சார். புது பேட்ச் போடறப்ப ஏன் மெஷினை மறுபடி செட் அப் பண்ணலேன்னு ஆபரேட்டர் கிட்ட கேட்டேன். அவ்வளவுதான்!" என்றான் மணி. 

"அதைத்தான் அதிகப் பிரசங்கித்தனம்னு சொன்னேன். உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா எங்கிட்ட கேட்டுக்க. மெஷின் ஆபரேட்டர் கிட்ட போய்ப் பேசறதெல்லாம் வேண்டாம்."

மணி மௌனமாக அங்கிருந்து சென்றான்.

"என்ன நீலகண்டன்?" என்றார் ப்ரொடக்‌ஷன் மானேஜர் மூர்த்தி, தயக்கத்துடன் தன் முன் வந்து நின்ற மெஷின் ஆபரேட்டர் நீலகண்டனிடம்.

"சார்! ஒரு விஷயம். நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது" என்றான் நீலகண்டன்.

"சொல்லு" என்றார் மூர்த்தி.

"புதுசா ஒரு இன்ஜினீயர் வந்திருக்கார் இல்ல?"

"ஆமாம் மணின்னு ஒரு பையன், ட்ரெயினியாப் போட்டிருக்கோம் அவனை. ஏன் அவன் ஏதாவது பிரச்னை பண்றானா?"

"அதெல்லாம் இல்லை சார். அவரு நேத்திக்கு எங்கிட்ட வந்து புது பேட்ச் போடறப்ப ஏன் மெஷினை செட் அப் பண்ணலேன்னு கேட்டாரு."

"ஏன் நீ செட் அப் பண்ணலியா?"  

"சார்! ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் சொல்றபடிதானே சார் நான் செய்ய முடியும்? முன்னெல்லாம் ஒவ்வொரு பேட்ச்சுக்கும் மெஷின் செட் அப் பண்ணிக்கிட்டிருந்தோம். இந்த ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் வந்தப்பறம், 'ஒவ்வொரு பேட்ச்சுக்கும் மெஷினை செட் அப் பண்ணினா டைம் வேஸ்ட் ஆகும். மாசத்துக்கு ஒரு தடவை செட் அப் பண்ணினா போதும்னு சொன்னாரு. அதனால அப்படித்தான் செஞ்சுக்கிட்டிருக்கோம்."

"சரி. இதை ஏன் எங்கிட்ட வந்து சொல்ற?"

"கொஞ்ச நாளா, குவாலிட்டி கன்ட்ரோல்லேந்து ரீவொர்க் பண்றதுக்காக வர பீஸ்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கு. ஒருவேளை மெஷின் செட் அப் பண்ணாததாலதான் இந்தப் பிரச்னையோன்னு எனக்கு ஒரு சந்தேகம். புது இன்ஜினியர் வந்து ஏன் செட் அப் பண்ணலேன்னு கேட்டதும் என் சந்தேகம் சரியாயிருக்குமோன்னு தோணிச்சு. ப்ரொடக்‌ஷன் எக்சிகியூடிவ்கிட்ட சொன்னா அவர் காதில போட்டுப்பாரான்னு தெரியல. அதான் உங்ககிட்ட வந்து சொன்னேன்" என்றான் நீலகண்டன்.

"சரி, போ. நான் பாத்துக்கறேன்" என்று நீலகண்டனை அனுப்பி வைத்தார் மூர்த்தி.

ப்ரொடக்‌ஷன் மானேஜர் அழைக்கிறார் என்றதும் சற்று பயந்து கொண்டேதான் அவர் அறைக்குச் சென்றான் மணி.

"நீ எந்த இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சே?" என்றுதான் முதலில் கேட்டார் மூர்த்தி. 

மணி தான் படித்த கல்லூரியின் பெயரைச் சொன்னதும், "அது அவ்வளவு நல்ல காலேஜ் இல்லியே?" என்ற மூர்த்தி, சில வினாடிகள் கழித்து, "ஆனாலும் நீ நல்லாத்தான் படிச்சிருக்க போலருக்கு!" என்றார். 

"சார்!" என்றான் மணி எதுவும் புரியாமல். 

"ஒவ்வொரு தடவை புது பேட்ச் போடறப்பவும் மெஷினை செட் அப் பண்ணணும்னு நீ சொன்னது சரிதான். ஆனா உனக்கு இதை யார் சொன்னாங்க?"

"சார்! ப்ரொடக்‌ஷன் மேனுவல்ல போட்டிருக்கே சார்!"

"எனக்குத் தெரிஞ்சு நம்ப கம்பெனியில வேலைக்கு சேந்தவங்கள்ள, மேனுவலைப் படிச்ச ஒரே ஆளு நீதான்! நான் கூட மேனுவலை சரியாப் படிச்சதில்லை. நான் ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ்கிட்ட பேசறேன். நீ இதைக் குறிப்பிட்டுச் சொன்னதுக்கு உன்னைப் பாராட்டத்தான் கூப்பிட்டேன். வெல் டன்!" என்றார் மூர்த்தி.  

பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பொருள்:
கற்க வேண்டிய விஷயங்களைப் பிழையில்லாமல் கற்க வேண்டும். அதற்குப் பிறகு, தான் கற்ற கல்விக்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...