Friday, November 23, 2018

386. வெளிநாட்டுப் பயணம்

"அரசே! தாங்கள் கூறியபடியே,  அண்டை நாடுகளுக்கு தூதுவர்களை அனுப்பி, நம் இளவரசர் ஆறு அண்டை நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று வர ஏற்பாடு செய்து விட்டேன். நம் இளவரசர் தங்கள் நாட்டுக்கு வருவது பற்றி, ஆறு அண்டை நாட்டு மன்னர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி" என்றார் அமைச்சர்.

"நல்லது. இளவரசன் மாறவர்மன் நாளையே கிளம்பி, ஒவ்வொரு நாட்டிலும் ஒரு வாரம் தங்கி, அந்த நாட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு வரட்டும்" என்றார் மன்னர் ராஜவர்மர்.

"மன்னரே! எதற்கு இந்த சுற்றுப் பயணம் என்று தெரிந்து கொள்ளலாமா?"

"இளவரசனின் உலக அறிவு வளர வேண்டும் என்பதற்காகத்தான்" என்றார்  ராஜவர்மர்  சிரித்தபடி.

அமைச்சர் புரியாதவராக அரசரைப் பார்த்தார்.

று நாடுகளுக்கும் சென்று திரும்பியதும் இளவரசன் மாறவர்மன் தந்தையைச் சந்தித்தான். அப்போது அமைச்சரும் உடனிருந்தார்.

"பயணம் எப்படி இருந்தது?" என்றார் அரசர்.

"நன்றாக இருந்தது. ஆறு நாடுகளுமே நம்மை விட மிகவும் சிறிய நாடுகள் என்பதால், நான் அங்கு போனதை அவர்கள் எல்லோருமே தங்களுக்கு ஒரு கௌரவமாக நினைத்தார்கள்."

"நான் சொன்னபடி செய்தாயா?'

"செய்தேன். ஒரு நாள் அரண்மனையில் தங்கி அங்கு நடப்பவற்றை  கவனித்தேன், அதன் பிறகு நான்கைந்து நாட்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றேன். மக்கள் சிலரிடம் இயல்பாக உரையாடினேன்."

"சரி. ஆறு நாடுகளிலும் மக்கள் மன்னர்களைச் சந்திப்பது எளிதாக இருந்ததா?'

"இரண்டு நாடுகளில் மட்டும்தான் அப்படி இருந்தது. மற்ற நான்கு நாடுகளிலும் மன்னரை மக்கள் சந்திப்பது எளிதானதாக இல்லை."

"சரி. எல்லா நாட்டு மன்னர்களும் மற்றவர்களிடம் இனிமையாக நடந்து கொண்டார்களா?"

"இல்லை. ஒரு மன்னர் மட்டும்தான் எல்லோரிடமும் இனிமையாகப் பழகினார். மற்ற ஐந்து மன்னர்களும் அமைச்சர்களிடமும், மற்றவர்களிடம் அடிக்கடி கோபமாகப் பேசினார்கள்."

"சரி. நீ  சொன்ன இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையிலும், மக்களிடம் நீ பேசியதன் அடிப்படையிலும் நீ உணர்ந்து கொண்டது என்ன என்று சொல்ல முடியுமா?" என்றார் அரசர்.

இளவரசன் ஓரிரு நிமிடங்கள் யோசித்து விட்டு, "நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்குப் புரிகிறது. கௌதம நாட்டில் மட்டும்தான் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அரசரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் புகழ்ந்து பேசினர். கௌதம நாட்டு மன்னரை  மக்கள்  எளிதாகச்  சந்திக்க முடியும். அவர் அதிகம் கடிந்து பேசாத இயல்புடையவர்.

"மற்ற ஐந்து நாடுகளில், மக்களிடம் அதிருப்தி இருந்தது. அவற்றில் குசல நாட்டில் மட்டும் அதிருப்தி குறைவாக இருந்தது. குசல நாட்டு மன்னரை  மக்களால் எளிதில் சந்திக்க முடியும். ஆயினும் அவர் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கடிந்து பேசக் கூடியவர் என்பதால், அவருக்கு ஆலோசனை சொல்ல அமைச்சர்கள் அஞ்சியதைப் பார்க்க முடிந்தது. 

"மற்ற நான்கு நாட்டு மன்னர்களிடம் இந்த இரண்டு குறைகளுமே இருந்ததால், அங்கே மக்களின் குறைகள் தீர்க்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அங்கே அதிருப்தி அதிகமாக நிலவுகிறது என்று நினைக்கிறேன்" என்றான் இளவரசன்.

"ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டாயா?" என்றார் அரசர்.

"புரிந்து கொண்டேன் தந்தையே!" என்றான் மாறவர்மன்.

"இளவரசனை எதற்கு ஆறு நாடுகளுக்கும் அனுப்பினேன் என்று இப்போது புரிகிறதா அமைச்சரே?" என்றார் அரசர்.

"புரிகிறது அரசே.அடுத்த மாதம் இளவரசுரர் முடி சூட்டிக் கொண்டு அரசாளத்  துவங்கும் முன், அவர் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் அனுப்பி இருக்கிறீர்கள். 'இளவரசர் உலக அறிவு வளரத்தான் இந்தப் பயணம்' என்று நீங்கள் சொன்னதன் பொருள் இப்போதுதான் எனக்கு விளங்குகிறது. ஆனால், இளவரசர் தங்களைப் பார்த்தே இவற்றை அறிந்து கொண்டிருக்கலாமே!" என்றார் அமைச்சர்.

"மாறுபட்ட இயல்புகளைப்  பார்த்து, அவற்றின் விளைவுகள் என்ன என்பதையும் பார்த்தால், இன்னும் சற்று ஆழமாகப் புரியும் அல்லவா?" என்றார் ராஜவர்மன். 

பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 386:
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

பொருள்:
மக்களால் எளிதில் காணக் கூடியவனாகவும், கடுமையான சொற்களைப்  பயன்படுத்தாதவனாகவும் இருக்கும் அரசனை உலகம் போற்றும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ.

அறத்துப்பால்                                                                         காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...