Wednesday, November 21, 2018

385. குடும்பத் தலைவி

நண்பனின் சிபாரிசின் பேரில் அந்த நிதி ஆலோசனை நிறுவனத்துக்குச் சென்றான் மதி.

"உன் குடும்பத்தில யார் யார் இருக்காங்க, அவங்க வயசு என்ன, உங்க குடும்பத்துக்கான மாதாந்தரச் செலவுகள் என்ன மாதிரி விவரங்களை முதல்ல கேட்டுப்பாங்க. அப்புறம் உன் பிள்ளை, பெண்ணை என்ன படிக்க வைக்க விரும்பற, அதுக்கு எவ்வளவு செலவாகும், அவங்களுக்குக் கல்யாணம் சுமாரா எத்தனை வயசில நடக்கும், அதுக்கு எவ்வளவு செலவாகும், அப்புறம் நீ 60 வயசில ரிடையர் ஆகறேன்னா, அதுக்கப்பறம் நூறு வயசு வரை உனக்கும் உன் மனைவிக்கும் குடும்பச் செலவுக்கு வருமானம் வர அளவுக்கு ரிடயர்மெண்ட் சமயத்தில மொத்தத்தொகை எவ்வளவு வேணும், இதையெல்லாம் கணக்குப் போட்டுச் சொல்லிடுவாங்க" என்றான் அவன் நண்பன் கிட்டு.

"அது எப்படி? இன்னும் 10 வருஷம் கழிச்சு படிப்புச் செலவு எவ்வளவு ஆகும், 20 வருஷம் கழிச்சு கல்யாணச் செலவு எவ்வளவு ஆகும், நான் ரிடையர் ஆகற சமயத்தில மாதாந்தரச் செலவு எவ்வளவு ஆகும் இதையெல்லாம் இப்ப எப்படிச் சொல்ல முடியும்?" என்றான் மதி.

"இப்ப இருக்கற அளவிலேந்து ஆண்டுக்குப் பண வீக்கம் 8% இருக்கும்னு வச்சுக் கணக்குப் போடுவாங்க. எனக்கு அப்படித்தானே போட்டுக் கொடுத்தாங்க?"

"அது சரி. இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்ன பிரயோசனம்?'

"இந்தச் செலவுக்கெல்லாம் நமக்குப் பணம் வேணும்னா, நாம இப்பலேந்தே மாசத்துக்கு எவ்வளவு சேமிக்கணும், எதில முதலீடு செஞ்சா, எவ்வளவு ரிடர்ன் வரும்னு சொல்லுவாங்க."

"சரி. மாசம் இவ்வளவு ரூபா சேமிக்கணும்னு கணக்குப் போட்டு சொல்றாங்க. நம்ம வருமானத்தில் அவ்வளவு தொகை சேமிக்க முடியாதுன்னா என்ன செய்யறது?" என்றான் மதி.

"என் நிலைமை அப்படித்தானே இருக்கு!" என்றான் கிட்டு, பெருமூச்சுடன்.

"இதுக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணுவீங்க?" என்றான் மதி.

"இது ஃப்ரீ சர்வீஸ் சார்! இந்த சாஃப்ட்வேரை உருவாக்க எங்களுக்கு ரெண்டு லட்ச ரூபாய் செலவாச்சு. ஆனா, நாங்க இந்த சேவையை, பொது மக்களோட நன்மைக்காக இலவசமா வழங்கறோம்" என்றார் நிதி ஆலோசகர்.

"இதில உங்களுக்கு என்ன லாபம்?" என்றான் மதி.

"நாங்க கொடுக்கற ரிப்போர்ட்டின் அடிப்படையில நீங்க எவ்வளவு சேமிக்கணும்னு சொல்லுவோம். நீங்க விரும்பினா, நாங்க சிபாரிசு செய்யற பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். உங்க முதலீட்டுத் தொகையில் அரை சதவீதம் எங்களுக்கு கமிஷனா கிடைக்கும். அதுதான் எங்களுக்குக் கிடைக்கிற லாபம்" என்றார் அவர்.

"சரி. நீங்க சொல்ற தொகையை சேமிக்கற அளவுக்கு என் வருமானம் இல்லேன்னா?" என்று நண்பனிடம் கேட்ட கேள்வியைக் கேட்டான் மதி.

"ரெண்டு வழிதான் சார் இருக்கு. ஒண்ணு, நீங்க விரும்புகிற விஷயங்களைக் குறைச்சுக்கணும். உதாரணமா, உங்க குழந்தைகளுக்கு பி.ஈ, எம்.பி.பி.எஸ்.   படிப்பு வேண்டாம், பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் படிப்பு போதும்னு முடிவு செய்யலாம்."

"இன்னொரு வழி?"

"உங்க வருமானத்தைப் பெருக்கிக்கறது. வேற வேலை தேடியோ, அல்லது சொந்தத் தொழில் செஞ்சோ!"

அவர்கள் கொடுத்த படிவத்தில் விபரங்களை எழுதிக் கொடுத்தான் மதி.

அவன் கொடுத்த விவரங்களை அவர் கம்ப்யூட்டரில் பதிவு செய்து முடித்த சில வினாடிகளில் கம்ப்யூட்டர் ஒரு ரிப்போர்ட்டை பிரிண்ட்டர் மூலம் அளித்தது.

ரிப்போர்ட்டைப் படித்துப் பார்த்த மதி, ஆலோசகரிடம், "ரொம்ப ஆச்சரியமா இருக்கு சார்! கிட்டத்தட்ட நீங்க சொன்ன அதே தொகையை நான் இப்ப சேமிச்சுக்கிட்டிருக்கேன்" என்றான் மதி.

"அது எப்படி சார்?" என்றார் ஆலோசகர் வியப்புடன்.

"அஞ்சு வருஷம் முன்னால எனக்குக் கல்யாணம் ஆச்சு. சில மாசங்களிலேயே என் மனைவி, எங்கிட்ட பேசி,  கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கணக்குப் போட்டாள் - பிறக்கப் போற குழந்தைகளையும் கணக்கில எடுத்துக்கிட்டு! அவ கம்ப்யூட்டர் பயன்படுத்தல. ஒரு பேப்பர், பேனா, கால்குலேட்டர் வச்சு ரொம்ப தோராயமா ஒரு கணக்குப் போட்டா. போட்டு முடிச்சதும், 'நீங்க இப்ப வாங்கற சம்பளத்தில் இதையெல்லாம் செய்ய முடியாது. வேற வேலைக்கு முயற்சி செய்யுங்க. உங்க படிப்புக்கும், திறமைக்கும் கண்டிப்பா நல்ல வேலை கிடைக்கும்'னு சொன்னா. அது மாதிரி முயற்சி செஞ்சு, அதிக சம்பளத்தில வேலை கிடைச்சு, நீங்க கணக்குப் போட்டு சொல்ற தொகையை சேமிச்சுக்கிட்டிருக்கேன். ரெண்டு வருஷம் முன்னாடியே சேமிக்க ஆரம்பிச்சுட்டதால கொஞ்சம் குஷன் கூட இருக்கும்னு நினைக்கறேன். உங்க ரிப்போர்ட்டுக்கு நன்றி. புதுசா ஏதாவது முதலீடு பண்றப்ப கண்டிப்பா உங்க மூலமா பண்றேன்" என்று சொல்லி விடைபெற்றான் மதி.
பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

பொருள்:
பொருள் வரும் வழிகளைத் திட்டமிடுதல், பொருள் ஈட்டல், ஈட்டிய பொருளைப் பாதுகாத்தல், பொருளை முறையாகப் பங்கிடுதல் ஆகியவற்றை ஒரு அரசன் திறமையாகச் செய்ய வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ.

அறத்த                                                                                  காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...