"தலையாரிங்கறவரு ஊருக்குக் காவலா இருந்து, ஊர் ஜனங்க கட்டுப்பாட்டோட இருக்கும்படி பாத்துக்கணும். அவரே தப்புப் பண்ணினா என்ன செய்யறது?" என்றார் மாணிக்கம்.
"அவரு தப்புப் பண்ணினாரா இல்லையான்னு தீர்மானிக்கத்தானே பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கோம்? விசாரிப்போம்!" என்றார் பஞ்சாயத்துத் தலைவர் கணேசன்.
"இந்த ஆளு என்னை அரிவாளை எடுத்து வெட்ட வந்தான் ஐயா!" என்றார் மாணிக்கம் ஆவேசத்துடன்.
"என்னய்யா? அரிவாளால வெட்டப் போனியா?" என்றார் கணேசன்.
"வெட்டப் போகல ஐயா! ஆனா அரிவாளை ஓங்கினேன்" என்றான் தலையாரி மாரிமுத்து.
"பாத்தீங்களா? அவனே ஒத்துக்கறான். முதல்ல அவனை இந்தப் பதவியிலேந்து தூக்குங்க!" என்றார் மாணிக்கம்.
"இங்க பாருங்க மாணிக்கம். பஞ்சாயத்துதான் உத்தரவு போடணும். நீங்க பஞ்சாயத்துக்கு உத்தரவு போடக் கூடாது" என்ற கணேசன், "சரி. இது நடந்தப்ப பாத்தவங்க யாராவது இருக்காங்களா?" என்றார்.
"என்னோட ஆளுங்க பத்து பேரு இருந்தாங்க. அவங்க இருக்கறப்பவே என்னை வெட்ட வந்தான் அவன். எவ்வளவு திமிரு இருக்கணும்?" என்றார் மாணிக்கம்.
"சரி. மாரிமுத்து, மாணிக்கம் ரெண்டு பேரும் தெருக்கோடியில் போய் நில்லுங்க. சாட்சிகளை விசாரிச்சுட்டு, உங்களைக் கூப்பிடறோம்" என்றார் கணேசன்.
"ஐயா! அவங்க பத்து பேரும் அவரோட ஆளுங்க. அவங்க அவருக்கு சாதகமாத்தான் பேசுவாங்க" என்றான் மாரிமுத்து.
"அதுக்கு என்ன செய்யறது? பக்கத்தில இருந்து பாத்தவங்களைத்தானே சாட்சிக்கு கூப்பிட முடியும்? யாரு உண்மை பேசறாங்க, யாரு பொய் பேசறாங்கன்னு எங்களால கண்டுபிடிக்க முடியும்" என்றார் கணேசன்.
அரை மணி நேரம் கழித்து அவர்கள் இருவரையும் அழைத்து வரச் சொன்னார் கணேசன்.
"பத்து பேரையும் தனித்தனியா விசாரிச்சோம். அவங்க மாணிக்கத்தோட ஆளுங்கங்கறதால அவருக்கு சாதகமாத்தான் பேசினாங்க. ஆனா ஒவ்வொத்தர்கிட்டயும் தனித்தனியாப் பேசினதில என்ன நடந்ததுங்கறதை நாங்க தெளிவாப் புரிஞ்சுக்கிட்டோம்.
"நேத்து ராத்திரி, மாணிக்கம் தன் ஆட்களை வச்சு ஊர்க் கண்மாயிலேந்து சின்ன கால்வாய் வெட்டித் தன் வயலுக்குத் தண்ணி பாய்ச்சி இருக்காரு. அப்ப ரோந்து வந்த தலையாரி மாரிமுத்து அதைப் பாத்துட்டு அதைத் தடுத்திருக்கான். மாணிக்கத்தோட ஆளுங்க தாங்க வெட்டின இடத்தை மண் போட்டு மூடிட்டு வீட்டுக்குப் போயிட்டாங்க.
"இன்னிக்குக் காலையில, மாணிக்கம் தன் ஆட்களோட மாரிமுத்துவைத் தேடித் போயிருக்காரு. ஊர்ப் பஞ்சாயத்தில புகார் கொடுக்காதேன்னு அவன்கிட்ட சொல்லி இருக்காரு. ஆனா புகார் கொடுக்கப் போறதா மாரிமுத்து சொல்லி இருக்கான். மாணிக்கம் அவனுக்குப் பணம் கொடுத்து அவன் வாயை மூடப் பாத்திருக்காரு. ஆனா மாரிமுத்து அதுக்கு மசியலை. அதனால மாணிக்கம் கோபப்பட்டு அவனை ரொம்ப மோசமாத் திட்டி இருக்காரு. அவனோட குடும்பத்தைப் பத்தியும் கேவலமாப் பேசி இருக்காரு. தன் குடும்பத்தைப் பத்தி மாணிக்கம் தப்பாப் பேசினதால மாரிமுத்துவுக்குக் கோபம் வந்து அரிவாளை ஓங்கி இருக்கான். இப்ப நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க" என்றார் கணேசன்.
யாரும் பதில் சொல்லவில்லை.
"இதில எனக்கு நாலு விஷயம் தெரியுது. முதல்ல, மாரிமுத்து நியாயமா நடந்துக்கிட்டிருக்கான். ரெண்டாவது, பணம் கொடுத்தப்ப வாங்காம இருந்து, தான் நியாயத்துக்கு விரோதமா நடந்துக்க மாட்டேன்னு காட்டி இருக்கான். மூணாவதா, தன் குடும்பத்தைப் பத்தித் தப்பாப் பேசினதும் அவனுக்குக் கோபம் வந்திருக்கு. மானம் உள்ள எந்த மனுஷனுக்கும் வரக் கூடியதுதான் இது. கடைசியா, மாணிக்கம் தன் ஆட்கள் பத்து பேரோட இருந்தப்பவும் தைரியமா அரிவாளை ஓங்கி இருக்கான். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய வீரம் அவன்கிட்ட இருக்கு. அதைப் பாராட்டணும். அவன் அரிவாளால வெட்டல. அரிவாளை ஓங்கினது அவனோட கோபத்தைக் காட்டத்தான். அதனால, தலையாரியா இருக்க மாரிமுத்து எல்லா விதத்திலேயும் தகுதி படைச்சவன்னு நாங்க நினைக்கறோம். கண்மாயிலேந்து கால்வாய் வெட்டித் தண்ணி இழுத்ததா மாணிக்கத்து மேல யாராவது புகார் கொடுத்தா அதைத் தனியா இன்னொரு நாளைக்கு விசாரிப்போம்" என்றார் கணேசன்.
பொருட்பால்
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 384:அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.
பொருள்:
அறத்திலிருந்து வழுவாமல், அறம் அல்லாதவற்றை விலக்கி, வீரத்துடனும், மானத்துடனும் செயல்படுபவனே நல்ல அரசன்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment