"அருமையாப் பேசினாரு. பெரிய யோகியாச்சே!"
"ஆமாம். யோகின்னா யாரு, யோகா பண்றவரா? எத்தனையோ பே யோகா பண்றாங்களே!"
"யோகாசனம் பண்றவங்கல்லாம் யோகி இல்லை. யோகின்னா, விசேஷமான சக்தி உள்ளவங்க."
"விசேஷ சக்தின்னா?"
"விசேஷ சக்தின்னா...தண்ணிக்குள்ள ரொம்ப நேரம் இருக்கறது, ஆணிப் படுக்கையில படுத்துக்கிட்டு இருக்கறது, நெருப்புக்கு நடுவில நின்னு தவம் பண்றது இது மாதிரி எல்லாம்."
"நெருப்புக்கு நடுவில நின்னு தவம் பண்ண முடியுமா என்ன?"
"நீ கேள்விப்பட்டதில்ல, அந்தக் காலத்தில முனிவர்கள் எல்லாம் நாலு பக்கமும் நெருப்பு, மேலே சூரியன்னு அஞ்சு நெருப்புகளுக்கு நடுவில நின்னு தவம் பண்ணுவாங்கன்னு?"
"ராஜஸ்தான்ல ஒரு யோகி இருக்காராம். அவர் நெருப்பு மேலேயே படுத்துத் தூங்குவாராம்!"
"உடன்கட்டை ஏறுவது மாதிரியா?"
"உடன்கட்டை ஏறுவதுன்னா, நெருப்பில விழுந்து சாகறது. இவர் நெருப்பு மேல படுத்துத் தூங்கிட்டு, உடம்பில ஒரு தீக்காயம் கூடப் படாம எழுந்து வந்துடுவாரு."
இதைக் கேட்டதும், கூட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சந்திரன், தன்னை அறியாமல் களுக்கென்று சிரித்து விட்டான்.
பேசிக் கொண்டு சென்றவர்களில் ஒருவர், சந்திரனைத் திரும்பிப் பார்த்து முறைத்து, "எதுக்கு சிரிக்கிறீங்க? நான் சொல்றது உண்மை!" என்றார்.
"இருக்கலாம். ஆனா நெருப்பு மேல படுத்துத் தூங்கற அந்த யோகியால, பட்டினியோட தூங்க முடியுமான்னு நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பு வந்தது" என்றான் சந்திரன்.
காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் உடலும் மனமும் சோர்ந்திருந்ததால், மனதைத் திசை திருப்புவதற்காக, அந்தச் சொற்பொழிவுக்கு வந்து விட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சந்திரனுக்குப் பட்டினியால் உடல் சோர்ந்திருந்த நிலையிலும், தன்னால் எப்படிச் சிரிக்க முடிந்தது என்று நினைத்தபோது, வியப்பாக இருந்தது.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)
குறள் 1049:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
No comments:
Post a Comment