Wednesday, November 29, 2023

1033. தொழிலதிபரின் செயல்!

"நம்ம கம்பெனியோட இருபத்தைந்தாவது ஆண்டு விழாவை எப்படிக் கொண்டாடலாம்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்" என்றார் தாமோ இண்டஸ்டிரீஸின் நிர்வாக இயக்குனர் தாமோதரன்.

"பிரமாதமாக் கொண்டாடிடலாம் சார். யாராவது ஒரு வி ஐ பியை சிறப்பு விருந்தினரா அழைக்கலாம்" என்றார் பொதுமேலாளர் ராஜேந்திரன்.

"விஐபியைத்தான் கூப்பிடணும். ஆனா வேறு வகை விஐபி!" என்றார் தாமோதரன் சிரித்துக் கொண்டே.

தாமோ இண்டஸ்டிரீஸின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தாமோதரன் மைக் முன் வந்தார்.

"நான் படிச்சுட்டு ஒரு தொழிலை ஆரம்பிச்சு நடத்திக்கிட்டிருக்கேன். ஆனா என்னோட பள்ளியில படிச்ச கேசவன் விவசாயத்தில ஈடுபட்டிருக்கார். என்னோட வேண்டுகோளுக்கு இணங்க அவர் இந்த விழாவுக்கு வந்திருக்கார். அவரை மேடைக்கு அழைக்கிறேன். எங்கள் பொது மேலாளர் ராஜேந்திரன் அவரை மேடைக்கு அழைத்து வருவார்."

தாமோதரன் சைகை காட்ட, ராஜேந்திரன் கீழே இறங்கிச் சென்று முதல் வரிசையில் அமர்ந்திருந்த கேசவனை மேடைக்கு அழைத்து வந்து அமரச் செய்தார்.

கேசவன் இருக்கையில் அமர்ந்ததும், அவர் அருகில் சென்ற தாமோதரன் யாரும் எதிர்பாராத விதத்தில் அவர் காலில் விழுந்து வணங்கினார்.

பதறிப் போய் இருக்கையிலிருந்து எழுந்த கேசவன், "தாமோதரா, என்னடா இது?" என்றார் தாமோதரனைத் தூக்கி நிறுத்தியபடி.

மீண்டும் மைக்குக்கு வந்த தாமோதரன், "உலகில் மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் உழவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டும்தான் தங்களுக்கான உணவைத் தாங்களே உற்பத்தி செய்வதுடன் மற்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் உணவை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள். ஆனால் மற்ற துறைகளில் இருப்பவர்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் உணவுப் பொருட்களை வாங்கித்தான் உண்ண வேண்டும். ஒரு தொழில் நடத்தி வரும் நான் கூட என் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்துதான் உணவு உண்ண முடியும். அதனால் உணவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லோராலும் வணங்கப்பட வேண்டியவர்கள். இதை எடுத்துக் காட்டத்தான் என் நண்பனாக இருந்தாலும் உழவுத் தொழில் செய்து எல்லோருக்கும் உணவளிப்பவன் என்பதால் கேசவனின் காலில் விழுந்து வணங்கினேன்!" என்றார்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

பொருள்: 
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...