சுதாகர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய உடனேயே, "உங்க அண்ணன் கிட்டேருந்து கடிதம் வந்திருக்கு" என்றாள் அவன் மனைவி மீனா.
"மணி ஆர்டர் வரும்னு பாத்தா. கடிதம் வந்திருக்கு! என்ன, விளைச்சல் இல்லாதனால பணம் அனுப்ப முடியாதுன்னு எழுதி இருக்காரா?" என்றான் சுதாகர், மனைவியிடமிருந்து கடித உறையைக் கையில் வாங்கியபடியே.
"ஏங்க, நீங்க படிச்சிருக்கீங்க. டவுன்ல இருந்துகிட்டு வேலை பாக்கறீங்க. உங்க அண்ணன் படிக்கல, கிராமத்தில இருந்துகிட்டு நிலங்களைப் பாத்துக்கறாரு. விளைச்சலைப் பொருத்து, வர வருமானத்தில உங்களுக்கும் ஒரு பங்கை அனுப்பறாரு. நமக்கு இது கூடுதல் வருமானம்தான். அவரை ஏன் குத்தம் சொல்லிக்கிட்டே இருக்கீங்க?"
"நிலத்தில எவ்வளவு விளையுதுன்னு யாருக்குத் தெரியும்? அவர் சொல்றதுதான் கணக்கு! ஏதோ செலவுக் கணக்கு காட்டிட்டு, தனக்குன்னு ஒரு பங்கை எடுத்துக்கிட்டு, மீதியை எனக்கு அனுப்பறாரு. அவர் என்னை ஏமாத்தறாறோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. அவர் கொடுக்கற கணக்கில ஏதாவது சந்தேகம் கேட்டா, அண்ணன் மேலயே சந்தேகப்படறியான்னு கோவிச்சுக்கறாரு. அவர் மேல எனக்கு நம்பிக்கை இல்லை."
"உங்க ஊர்லேந்து இங்கே வரவங்க, உங்ககிட்ட எதையோ சொல்லிட்டுப் போறாங்க. நீங்க அதை நம்பி, உங்க அண்ணன் மேலேயே சந்தேகப்படறீங்க. முன்னெல்லாம் நாம ஊருக்குப் போனா, உங்க அண்ணனும் அண்ணியும் நம்மகிட்ட எவ்வளவு அன்பா நடந்துப்பாங்க! இப்ப சில வருஷமா, உங்க அண்ணன் மேல கோவிச்சுக்கிட்டு, நீங்க ஊருக்கே போறதில்ல!" என்றாள் மீனா.
மீனா பேசிக் கொண்டிருந்தபோதே கடிதத்தைப் பிரித்து, அதைப் படித்து முடித்து விட்ட சுதாகர், "நிலத்தில விளைச்சல் எல்லாம் குறைஞ்சுக்கிட்டே வருதாம். விவசாயத் தொழில் இனிமே லாபமா இருக்காது, அதனால, நிலத்தையெல்லாம் வித்துடலாம்னு சொல்றாரு. விலை பேசி முடிக்க, என்னை ஊருக்கு வரச் சொல்லி இருக்காரு" என்றான்.
"நல்லதாப் போச்சு. மொத்தமா ஏதாவது பணம் வந்தா, பாங்க்ல போட்டு வச்சுக்கலாம். இனிமே, உங்க அண்ணன் உங்களை ஏமாத்தறார்னு நீங்க நினைக்க வேண்டி இருக்காது" என்ற மீனா, "நாம, குழந்தைங்க எல்லாரும்தானே போகப் போறோம்?" என்றாள்.
"நீங்கள்ளாம் எதுக்கு? நான்தான் என் அண்ணன் உறவே வேண்டாம்னு பாக்கறேனே! நான் மட்டும் போய், நிலம் விக்கறதைப் பேசி முடிச்சு, பத்திரத்தைப் பதிவு பண்ணி, ரிஜிஸ்தர் ஆஃபீஸ்ல அண்ணனோட சேர்ந்து கையெழுத்துப் போட்டுட்டு வந்துடறேன். நிலத்தை வித்தப்பறம், அவர் யாரோ நான் யாரோ!" என்றான் சுதாகர்.
ஊருக்குப் போய் விட்டு வந்த சுதாகர், "நிலத்தை எல்லாம் வித்தாச்சு. இப்ப இருக்கிற நிலைமையில, நமக்கு நல்ல விலை கிடைச்சிருக்கறதா, ஊர்ல எல்லாரும் சொன்னாங்க. இதோட சொந்த ஊருக்கு குட்பை, அண்ணன்கற சொந்தத்துக்கும் குட்பை!" என்றான் சுதாகர்.
ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு, சுதாகரின் அண்ணனிடமிருந்து சுதாகருக்கு இன்னொரு கடிதம் வந்தது. அது அவன் அண்ணன் மகளின் திருமணப் பத்திரிகை!
பத்திரிகையைப் பார்த்த சுதாகர், "கல்யாணத்துக்கு நாம எல்லாருமே போகலாம். அண்ணன் வீட்டில பத்து நாள் இருந்துட்டு வரலாம். ஆஃபீசுக்கு லீவ் போட்டுடறேன்" என்றான், உற்சாகத்துடன்.
அவனை வியப்புடன் பார்த்த மீனா, "என்ன, திடீர்னு அண்ணனோட உறவு கொண்டாடறீங்க?" என்றாள்.
"நிலத்தினாலதானே என் அண்ணன் மேல சந்தேகம் வந்து, உறவில விரிசல் வந்தது? இப்பதான் நிலத்தை வித்தாச்சே! இனிமே, என் அண்ணனோட எனக்கென்ன பிரச்னை? கடந்த காலத்தில ஒருவேளை என் அண்ணன் என்னை ஏமாத்தி இருந்தாலும், இனிமே நான் அதைப் பத்தி நினைக்கப் போறதில்ல" என்றான் சுதாகர்.
குறள் 529:
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்..
No comments:
Post a Comment