Wednesday, March 3, 2021

461. கனவுத் திட்டம்

"இந்த ஆறு வழிச்சாலைங்கறது முதல்வரோட கனவுத் திட்டம். அதை எப்படி நிறைவேத்தறதுங்கறதைப் பத்தி விவாதிச்சு முடிவெடுக்கத்தான் இந்தக் கூட்டம்" என்றார் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்

"திட்டத்துக்கான முதலீடு, கால அட்டவணை, இதனால் ஏற்படக் கூடிய நன்மைகள் எல்லாத்தையும் ஒரு அறிக்கையா தயார் செஞ்சு உங்க எல்லாருக்கும் கொடுத்திருக்கோம். எல்லாரும் அதைப் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன். உங்க கருத்துக்களை நீங்க சொல்லலாம்" என்றார் துறையின் செயலர்.

"இது ரொம்பச் சிறப்பான திட்டம். இதனால இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் பாதியாகக் குறையும். இதனால பயணிகளுக்கு நேரம், எரிபொருள் செலவெல்லாம் மிச்சம். அதோட, வணிகப் போக்குவரத்து அதிகமாகும். அதனால மாநிலத்தோட பொருளாதரம் கணிசமா முன்னேறும்" என்றார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டிருந்த நபர்.

அவரைத் தொடர்ந்து இன்னும் சிலர் வேறு பல நன்மைகளைப் பட்டியலிட்டனர். 

"இவங்கள்ளாம் பேசறப்பதான் இவ்வளவு நன்மைகள் இருக்குன்னு எனக்கே தெரியுது!" என்றார் ஒரு இளநிலை அதிகாரி, தன் அருகில் அமர்ந்திருந்த இன்னொரு இளநிலை அதிகாரியின் காதுக்கு மட்டும் கேட்கும்படி.

"இதையெல்லாம் தவிர இன்னும் சில லாபங்கள் இருக்கு. அதையெல்லாம் பத்தி யாருமே பேசமாட்டாங்க!" என்றார் அவர்.

என்னவென்று புரியாமல் அவர் நண்பர் விழிக்க, "சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கிடைக்கப்போற லாபங்களைச் சொன்னேன்" என்றார் அவர் சிரித்தபடி.

அதற்குள் அவர்களுக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த இன்னோரு இளநிலை அதிகாரி, தான் பேச விரும்புவதாகக் கையை உயர்த்திக் காட்ட, அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது.

தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற அவர், "இந்தத் திட்டத்துக்கான முதலீடு, இழப்பு விவரங்கள் இந்த அறிக்கையில் இல்லையே?" என்றார் சற்றே தயக்கத்துடன்.

பலரும் திட்டத்தின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்ததை முகமலர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சரின் முகம், இதைக் கேட்டதும் சற்றே மாற, துறைச் செயலாளர் அவசரமாக எழுந்து, "முதலீடு எவ்வளவுன்னு சொல்லி இருக்கோம். இதுக்கான ஃபண்டிங்கை மத்திய அரசு கொடுக்கறாதாச் சொல்லி இருக்காங்க" என்றார்.

"சார்! இது மாநில அரசோட திட்டம்..." என்றார் கேள்வி எழுப்பிய அதிகாரி.

இப்போது தலைமைச் செயலாளர் எழுந்து, "ஐ கெட் யுவர் பாயின்ட். இது மாநில அரசோட திட்டம்தான். ஆனா இதுக்கான நிதியை மத்திய அரசு வெளிநாட்டிலேந்து நீண்ட காலக் கடனா ஏற்பாடு செஞ்சு கொடுப்பாங்க. அது குறைஞ்ச வட்டியில, 50 வருஷத்தில திருப்பித் தரக் கூடிய கடனா இருக்கும். அதனால அது ஒரு பெரிய சுமையா இருக்காது. இது ஒரு பிரிலிமினரி ரிப்போர்ட்தான். அதனால அந்த விவரங்கள் எல்லாம் இதில இல்ல. டீடெயில்ட் பிராஜக்ட் ரிப்போர்ட் தயார் பண்றப்ப எல்லா விவரங்களும் வரும். ஆமாம் நீங்க எந்த டிபார்ட்மென்ட்?" என்றார் தலைமைச் செயலர், 'உங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?' என்று வினவுவது போல்.

"பிளானிங் டிபார்ட்மென்ட்" என்றார் அவர்.

'இவரையெல்லாம் எதற்கு இந்தக் கூட்டத்துக்கு அழைத்தீர்கள்?' என்று கேட்பது போல் துறைச் செயலரை முறைத்துப் பார்த்த தலைமைச் செயலர், கேள்வி கேட்ட அதிகாரியைப் பார்த்துச் சிரித்தபடி, "நாம் பிளானிங் ஸ்டேஜையைல்லாம் தாண்டி வந்துட்டோம். இப்ப இம்ப்ளிமென்டேஷன் ஸ்டேஜ்ல இருக்கோம். அதனால உங்க டிபார்ட்மென்ட்டுக்கு இதில அதிக ரோல் இருக்காது" என்றார் சிரித்துக் கொண்டே, 'இதில் நீ தலையிட வேண்டாம்!' என்று அறிவுறுத்துவது போல்.

"இழப்புகளைப் பத்திக் கேட்டேனே!" என்றார் அந்த அதிகாரி, விடாமல்.

"இழப்புகளா? இந்தமாதிரி ஒரு திட்டத்தில என்ன இழப்பு இருக்க முடியும்?" என்றார் தலைமைச் செயலர் சற்றுக் கடுமையான குரலில்.

"இந்தத் திட்டத்துக்காக நிறைய விவசாய நிலங்கள், வீடுகள், கடைகள் மாதிரி சொத்துக்களை எடுத்துக்க வேண்டி இருக்கும். இப்ப இருக்கற சாலையில போக்குவரத்துக் குறையறதால அங்கே இருக்கற பல கடைகள், ஹோட்டல்கள் வியாபாரத்தை இழக்கும். அப்புறம் சுற்றுச் சூழல் பாதிப்புகள்..."

தலைமைச் செயலர் கோபத்துடன் தன் அருகில் அமர்ந்திருந்த துறைச் செயலரின் காதில், "ஏன் சார்? இந்த மாதிரி கேள்வியெல்லாம் வரக் கூடாதுங்கறதுக்காகத்தானே விவசாயிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இவங்களையெல்லாம் கூப்பிட வேண்டாம்னு சொன்னேன். எல்லாருக்கும் சேத்து வச்ச மாதிரி இப்படி ஒரு ஆளைக் கூப்பிட்டிருக்கீங்களே! யூ டீல் வித் ஹிம்!" என்றார்.

துறைச் செயலர் எழுந்து, "நீங்கள் குறிப்பிட்டுச் சொன்ன விஷயங்களுக்கு நன்றி. அவை ஏற்கெனவே எங்கள் கவனத்தில் இருக்கின்றன. தலைமைச் செயலாளர் சொன்னது போல் இந்த விவரங்கள் எல்லாம் பிராஜ்ட் ரிப்போர்ட்டில் வரும்" என்று சொல்லி விட்டு பியூனைப் பார்த்து சைகை செய்ய, பியூன் அந்த அதிகாரியின் கையிலிருந்த மைக்கைத் திரும்ப வாங்கிக் கொண்டார்.

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

பொருள்:
ஒரு செலைச் செய்யும்போது அதனால் ஏற்படும் இழப்பையையும், நன்மையையும், அதைத் தொடர்ந்து கிடைக்கக் கூடிய லாபத்தையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். 
          குறள் 460          
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...