Tuesday, March 2, 2021

460. பள்ளி நண்பன்

"என்ன குமரன் எப்படி இருக்கீங்க?" என்றார் டாக்டர்.

"பரவாயில்லை, டாக்டர். இப்ப வலி குறைஞ்சிருக்கு" என்றான் குமரன்.

"மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சீங்கன்னா அப்புறம் ரொம்ப கஷ்டம். இப்பவே குடல் பாதிக்கப்பட ஆரம்பிச்சுடுச்சு. ஆரம்ப நிலைங்கறதால குணப்படுத்திட்டோம். கவனமா இருந்துக்கங்க" என்று சொன்ன டாக்டர், குமரனின் மனைவி லீலாவைப் பார்த்து, "பாத்துக்கங்கம்மா!" என்றார்.

"இத்தனை நாள் நான் சொல்லிக் கேக்கல. இப்ப குடல் புண்ணாகி நல்ல வேளையா உங்க புண்ணியத்தில அவரை குணப்படுத்திட்டீங்க. இப்ப நீங்க சொன்னப்பறமாவது அவரு கேக்கறாரான்னு பாக்கலாம்" என்றாள் லீலா கோபத்துடனும், விரக்தியுடனும்.

டாக்டர் சென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு, லீலாவும் வீட்டுக்குச் சென்று வருவதாகக் குமரனிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

சற்று நேரம் கழித்து உள்ளே வந்த வார்டு பாய், "என்ன சார், ஏதாவது வேணுமா?" என்றான்.

வேண்டாம் என்று கூறுவது போல் குமரன் பக்கவாட்டில் தலையை ஆட்டினான்.

வெளியே செல்லத் திரும்பிய வார்டு பாய், சற்றுத் தயங்கி விட்டுக் குமரனிடம் திரும்பி வந்து, "உங்களுக்கு என்னை அடையாளம் தெரியுதா?" என்றான்.

"எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா சரியாத் தெரியல" என்றான் குமரன்.

"என் பேர் தங்கராஜ். உங்களோட பள்ளிக் கூடத்தில படிச்சவன்" என்றான் அவன்.

"ஓ, தங்கராஜ்! சாரி. உடனே கண்டுபிடிக்க முடியல. நான் ஒரு வாரமா இங்க இருக்கேன். உன்னை இன்னிக்குத்தான் பாக்கறேன். நீ இங்கதான் வேலை செய்யறியா?" என்றான் குமரன் உற்சாகத்துடன்.

"ஆமாம். ஒரு வாரமா நான் லீவ்ல இருந்தேன். இன்னிக்குத்தான் மறுபடி வரேன். உங்களைப் பாத்ததில ரொம்ப ஆச்சரியம்."

"டேய் என்னடா, நீங்கன்னுல்லாம் சொல்ற! பள்ளிக்கூடத்தில பேசற மாதிரியே வாடா போடான்னு பேசு. பள்ளிக்கூடப் படிப்பு முடிஞ்சப்பறம் உன்னை நான் பாக்கவே இல்லை. எத்தனை வருஷமாச்சு! நீ எப்படி இருக்க?"

"என்னத்தைச் சொல்றது! உனக்குத்தான் தெரியுமே! பள்ளிக்கூடத்தில படிச்சப்ப நீ, சுப்ரமணி, கதிரேசன் மாதிரி ஒரு ஏழெட்டு பேரு எப்பவும் ஒண்ணா இருந்துக்கிட்டு படிப்பிலேயே கவனமா இருந்தீங்க  நான், நாராயணன் மாதிரி அஞ்சாறு பேரு படிப்பில அக்கறை இல்லாம, உங்களையெல்லாம் புத்தகங்களைத் திங்கற கழுதைகள்னெல்லாம் சொல்லி கலாட்டா பண்ணிக்கிட்டு, வாத்தியார்கள் இல்லாதப்ப அவங்களைக் கிண்டல் பண்ணிக்கிட்டு, பள்ளிக்கூடம் விட்டப்பறம் ஊரைச் சுத்திக்கிட்டு, அந்தச் சின்ன வயசிலேயே சிகரெட் பிடிக்கல்லாம் பழகிக்கிட்டு ரொம்ப ஜாலியா இருக்கறதா நினைச்சு எங்க வாழ்க்கையைப் பாழாக்கிக்கிட்டோம். நாங்க யாருமே உருப்படல. நான் எஸ் எஸ் எல் ஸியில ஃபெயில் ஆகி மேல படிக்க வசதி இருந்தும் காலேஜுக்குப் போக முடியாம எவ்வளவோ கஷ்டப்பட்டு கடைசியில இந்த வார்டு பாய் வேலைக்கு வந்து ஏதோ காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கேன். உங்க க்ரூப்ல எல்லாருமே நல்லா முன்னுக்கு வந்திருப்பீங்கன்னு நினைக்கறேன். நல்ல இனத்தோட சேர்ந்திருந்தா நல்லது நடக்கும், உருப்படாதவங்களோட சேர்ந்தா உருப்படாமதான் போவோங்கறதுக்கு நீயும் நானுமே நல்ல உதாரணம்" என்றான் தங்கராஜ் விரக்தியான குரலில்.

'பள்ளிக் கூடத்தில நல்ல க்ருப்ல சேர்ந்து இருந்ததால நல்லாப் படிச்சு முன்னுக்கு வந்த நான் வேலையில சேர்ந்தப்பறம் சில மோசமானவங்களோட சேர்ந்து குடிப்பழக்கத்தக்கு ஆளாகி குடல் புண்ணாகி ஆஸ்பத்தியியில வந்து படுத்துக்கிட்டிருக்கேனே, நான் கூட நீ சொல்றதுக்கு நல்ல உதாரணம்தான்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் குமரன்.

அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

பொருள்:
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
அறத்துப்பால்                                                               காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...